Monday, September 23, 2024

உடல் வலிமையானது....!

இயற்கையிலேயே உடல் வலிமையானது....!

உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மக்கள் அனைவரின் விருப்பமாக இருந்து வருகிறது. அதற்காக அவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும் உடனே கவலை அடைந்துவிட்டு, மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதன்மூலம் ஓரளவுக்க பலனும் கிடைக்கிறது. 

உடல்நலனை கருத்தில் கொண்டு இப்படி அடிக்கடி மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சரியல்ல என்பது மருத்துவர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இது ஒரு கெட்டப் பழக்கம் என்றும் இதன்மூலம் மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகும் நிலை உருவாகிவிடும் என்றும் கல்லீரல், கிட்னி, உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருந்து வருகிறது. 

உடல் வலிமையானது:

அண்மையில் சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த காணொளியில் பிரபல மருத்துவர் ஒருவரின் பேட்டி இடம்பெற்றிருந்தது. மருந்து, மாத்திரை மற்றும் உடல்நலன் குறித்து அவர் அற்புதமான முறையில் விளக்கம் அளித்து இருந்தார். மனிதனுக்கு மருந்து, மாத்திரை என்பது கடைசி தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூறியதைக் கேட்டபோது உண்மையிலேயே வியப்பு ஏற்பட்டது. 

மருந்து, மாத்திரை இல்லாமல் பாதிக்கப்பட்ட உடல் எப்படி நலம் அடையும்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கு அந்த மருத்துவரே பதில் அளிக்கும் வகையில் மிகச் சிறப்பான முறையில் விளக்கம் அளித்து இருந்தார். "ஏக இறைவன் மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடைகளில் ஆரோக்கியமான உடல்நலன் ஆகும். பல்வேறு சமயங்களில் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு, அதை விரட்டியடிக்கும் சக்தி உடலுக்கு உண்டு. உடல் மிகவும் வலிமையானது. எந்தவித நோய்களையும் சமாளிக்கும் திறன் கொண்டது. எனவே, சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டால், உடனே மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். ஓரிரு நாட்கள், மன உறுதியுடன் இருந்தால், நிச்சயம் பாதிக்கப்பட்ட உடல், நிச்சயம் நலம் பெற்றுவிடும். இதை நான் பலரிடம் நேரில் பார்த்தை வியந்து இருக்கிறேன். 

மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஒருவரை ஒருநாள் சந்திக்கும்போது, அவர் மிகவும் சோர்வாக இருந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்தது. ஏதாவது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே என நான் அவரிடம் ஆலோசனை கூறினேன். அதற்கு அவர், என்னுடைய உடல் மிகவும் வலிமையானது. அது எந்த நோயையும் எதிர்கொண்டு, அதை விரட்டி அடித்துவிடும் என கூறியதை கேட்டு நான் வியப்பு அடைந்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரை சந்தித்தபோது, அந்த கவிஞர் உண்மையிலேயே மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். இதன்மூலம் இயற்கையிலேயே உடல் வலிமையானது. அது எதையும் எதிர்கொள்ளும் சக்தி கொண்டது என்பதை மருத்துவர் என்ற முறையில் நான் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. உடல்நலம் பாதிக்கும்போது, எந்தவித மருந்து, மாத்திரைகள் இல்லாமலேயே உடல் சீராகிவிடும் என்பது உண்மைதான். இன்றும் பலர் உடல்நலம் பாதிக்கும்போது, உடனே மருந்து எடுத்துக் கொள்வதில்லை. தங்களது மன வலிமை மூலம் இயற்கை வழங்கிய அருட்கொடை மூலம் எந்தவித உடல் தொல்லைகளுக்கும் தீர்வு கண்டு விடுகிறார்கள். 

நான்கு முக்கிய அம்சங்கள்:

உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நான்கு முக்கிய அம்சங்களை வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி, முதலாவது அம்சம், நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகும். சரியான உணவு, சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இதில் முழு கவனம் செலுத்தினால், நிச்சயம் உடல்நலம் பாதிப்பு ஏற்டாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டாலும், உடல் மற்றும் மன வலிமை மூலம் அது உடனே சீராகி நலம் பெற்று விடும். 

இரண்டாவது முக்கிய அம்சம், உடற்பயிற்சியாகும். வாழ்க்கையில் நாம் எப்போதும் மகிழ்ச்சியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், நாள்தோறும் நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை நாள்தோறும் செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். உடலில் இருந்து வியர்வை வரும் வகையில் இந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். உடலில் இருந்து வியர்வை வெளியே வரும்போது, உடலில் தேங்கியிருக்கும் கெட்ட அமிலங்கள் வெளியே வந்துவிடும். உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும். 80 வயதுக்கு முன்பு சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்ய வேண்டும். இது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். களைப்பு அடையும் வரை உடற்பயிற்சி செய்யும்போது, வியர்வை வெளியே வந்து, நமது உடலை புதிய உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள வழிவகை செய்யும்.

மூன்றாவது அம்சம், நல்ல பழக்க வழக்கங்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மனிதனுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தால், உடல் மட்டுமல்ல, மனமும் எப்போதும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். 

நான்காவதாக, சரியான தூக்கம். சரியான தூக்கம் என்பது அமைதியான தூக்கமாகும். நம்மில் பலர் இரவு நேரத்தில் சரியாக தூங்குவது இல்லை. சரியான நேரத்திற்கு படுகைக்கு செல்வதில்லை. நீண்ட நேரம் கண் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். இரவு இரண்டு மணிக்குப் பிறகு, தூங்கச் செல்கிறார்கள். இது சரியான முறை இல்லை. இது உடல்நலனை பெரிதும் பாதிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மனிதனுக்கு சரியான தூக்கம் இருக்க வேண்டும். மனிதன் சரியான அளவு தூங்க வேண்டும். சரியான நேரத்தில் படுக்கைக்கு தூங்கச் செல்ல வேண்டும். தூக்கம் என்பது ஏக இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் என்பதை மறந்துவிடக் கூடாது. தூக்கம் மனிதனை மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

கடைசியாக, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்துவிடுவது, சூரியன் மறைந்தபிறகு, உணவு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது. இதை தான் இந்திய மருத்துவம் நமக்குச் சொல்லும் முக்கிய பாடங்கள் ஆகும். உண்ணாவிரதம் என்பதை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகும். அதற்காக எப்போதும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. உணவு உண்ணும் முறையில் சில நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் உடலில் உள்ள ஹார்மோன்கள் நல்ல விதமாக செயல்படும். 

வேண்டாம் மருந்து, மாத்திரை:

நாம் ஆரம்பத்திலேயே சொன்னப்படி, மருந்து, மாத்திரை என்பது கடைசி அம்சமாக இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏக இறைவன் உடலுக்கு இயற்கையாகவே நல்ல வலிமையை கொடுத்துள்ளான். அந்த உடல் வலிமை, அனைத்து நோய்களையும் எதிர்கொண்டு, வீழ்ச்சி அடையச் செய்துவிடும். உடல் மற்றும் மன வலிமை மூலம் எந்தவித பிரச்சினைகளையும் நாம் சவால்களுடன் எதிர்கொள்ள முடியும். வாழ்க்கையே சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் தான். எனவே, அந்த போராட்டத்தை உடல், மன வலிமையுடன் எதிர்கொண்டு, வெற்றி பெறுவோம்". இவ்வாறு அந்த மருத்துவர் கூறியதைக் கேட்டபோது, உண்மையிலேயே மிகப்பெரிய அளவுக்கு வியப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், ஏக இறைவனின் படைப்பு நுட்பத்தைக் கண்டு, அவனுக்கு நன்றி சொல்ல மனம் துடித்தபோது, இரு கரங்களையும் மேலே தூக்கி துஆ கேட்கக் தொடங்கினேன்.  

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: