Thursday, June 18, 2026

அரபு மொழித் திறனை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம் ....!

"அரபு மொழித் திறனை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம் "

 - முஸ்லிம் வேர்ல்ட் லீக் புதிய முயற்சி -

உலகம் முழுவதும் அரபு மொழியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதேபோன்று, சர்வதேச அளவில் புகழ்பெற்று இருக்கும் முஸ்லிம் சமூக அமைப்புகளும் தங்களது சேவையை இந்த முயற்சியில் அறிமுகம் செய்து அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஏக இறைவனின் வாக்கான திருக்குர்ஆனை முழுவதும் மனப்பாடம் செய்து ஹாஃபிஸ் பட்டம் பெற்றவர்களுக்கு அரபு மொழித் திட்டத்தை முஸ்லிம் வேர்ல்ட் லீக் தொடங்கியுள்ளது. 

ஹாஃபிஸ் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் திருக்குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்துள்ளவர்களைக் குறிக்கும் ஒரு சிறப்புப் பட்டமாகும். அரபு மொழியில் இதற்கு பாதுகாவலர் என்று பொருள். திருக்குர்ஆன் வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், மனதிற்குள் முழுமையாகப் பதிய வைத்துள்ள நபர் ஹாஃபிஸ் என்று அழைக்கப்படுகிறார். திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த பெண்களை ஹாஃபிழா  என்று அழைக்கிறார்கள். இதற்கென பிரத்யேக இஸ்லாமியக் கல்லூரிகள், மதரஸாக்கள் உள்ளன. பொதுவாகக் குழந்தைகள் இளம் வயதிலேயே இதைப் படிக்கத் தொடங்கி, முறையாக மனப்பாடம் செய்து முடித்ததும் இந்தப் பட்டம் வழங்கப்படுகிறது

தென்கிழக்கு ஆசியாவில் புதிய திட்டம் :

இத்தகைய சூழ்நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களுக்கான அரபு மொழித் திட்டத்தை  முஸ்லிம் வேர்ல்ட் லீக்  தொடங்கியுள்ளது.  மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் அறிஞர்கள் மன்றத்தின் நான்காவது கூட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது அல்-இஸ்ஸா இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இப்பகுதியைச் சேர்ந்த குர்ஆன் மனப்பாடம் செய்த   ஹாஃபிஸ்  மற்றும் ஹாஃபிழா  ஆகியோரின் அரபு மொழித் திறனை மேம்படுத்துவதும், இஸ்லாமிய நூல்கள் குறித்த அவர்களின் புரிதலுக்கு ஆதரவளிப்பதும் இத்திட்டத்தின்  முக்கிய நோக்கமாகும். 

தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து மூத்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முஃப்திகளை ஒன்றிணைத்த ஆசியான் அறிஞர்கள் மன்றத்தின் நான்காவது கூட்டத்தை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முஸ்லிம் வேர்ல்ட் லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது அல்-இஸ்ஸா 15.06.2026  திங்களன்று தொடங்கி வைத்தார். அப்போது, இவ்வாண்டிற்கான மன்றத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஹாஃபிஸ்  மற்றும் ஹாஃபிழா  ஆகிய பிரிவினருக்கான புதிய அரபு மொழித் திட்டத்தை அல்-இஸ்ஸா தொடங்கி வைத்தார். ஹாஃபிஸ்  மற்றும் ஹாஃபிழா  ஆகியோரின்  அரபு மொழித் திறனை மேம்படுத்துவதும், இஸ்லாமிய நூல்கள் குறித்த புரிதலுக்கு உதவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

உலகளாவிய தொழில்நுட்ப குர்ஆன் ஓதுதல் தளம் :

மேலும், முஸ்லிம் வேர்ல்ட்  லீக்கின் 'உலகளாவிய தொழில்நுட்ப குர்ஆன் ஓதுதல் தளம் (Global Technical Quran Recitation Platform) மூலம், குர்ஆன் ஓதுதலுக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழான 'இஜாஸா' (ijazah) பெற்ற இப்பகுதியைச் சேர்ந்த இரண்டாவது குழுவினரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) வரை தொடரும் நம்பகமான அறிவிப்பாளர் சங்கிலித் தொடர்  மூலமாகவே இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நவீன தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளையில், குர்ஆன் கல்வியை ஊக்குவிப்பதிலும் பாரம்பரியக் கற்றல் முறைகளைப் பாதுகாப்பதிலும் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை இது பிரதிபலிப்பதாக முஸ்லிம் வேர்ல்ட்  லீக் தெரிவித்துள்ளது.

                                                    ==================

"தென்கிழக்கு ஆசியாவில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களுக்கான அரபு மொழித் திட்டத்தை  முஸ்லிம் வேர்ல்ட் லீக்  தொடங்கியுள்ளது.  ஹாஃபிஸ்  மற்றும் ஹாஃபிழா  ஆகியோரின் அரபு மொழித் திறனை மேம்படுத்துவதும், இஸ்லாமிய நூல்கள் குறித்த அவர்களின் புரிதலுக்கு ஆதரவளிப்பதும் இத்திட்டத்தின்  முக்கிய நோக்கமாகும்"

                                                    ==================

இக்கூட்டத்தில் மலேசியாவின் துணைப் பிரதமர் அகமது ஜாஹித் ஹமிடி, அந்நாட்டின் கிராண்ட் முஃப்தி அகமது ஃபவாஸ் ஃபட்ஸில் மற்றும் மத விவகார அமைச்சர் முகமது நைம் மொக்தார் ஆகியோர் முக்கிய பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

மார்க்க அறிஞர்களின் கலந்துரையாடல் :

சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முன்னணி மார்க்க அறிஞர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும் இப்பகுதி முழுவதும் இஸ்லாமியக் கல்வியையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல முன்னெடுப்புகள் இதில் முன்னிலைப்படுத்தப்பட்டன.

ஆசியான் அறிஞர்கள் மன்றம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மார்க்கத் தலைவர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது. அத்துடன் கல்வி, மிதவாதம் மற்றும் இப்பகுதி முழுவதும் இஸ்லாமிய அறிவார்ந்த செயல்பாடுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.

மிகுந்த வரவேற்பு அளிக்கும் திட்டம் :

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருக்குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களுக்கான அரபு மொழித் திட்டத்தை  முஸ்லிம் வேர்ல்ட் லீக்  தொடங்கி இருப்பது மார்க்க அறிஞர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் ஹாஃபிஸ்  மற்றும் ஹாஃபிழா  ஆகியோரின்  அரபு மொழி திறன் மேலும் மேம்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. முஸ்லிம் வேர்ல்ட் லீக் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தை முஸ்லிம்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஹாஃபிஸ்  மற்றும் ஹாஃபிழா  ஆகியோர் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் அனைவரும், திருக்குர்ஆன் மீது அதிக கவனம் செலுத்தி, அந்த ஏக இறைவனின் மொழியை நன்கு புரிந்துகொண்டு படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஆசியான் அறிஞர்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. திருக்குர்ஆனை அரபு மொழியில் படிக்கும்போது, அதை நன்கு புரிந்துகொண்டால், அதன்மூலம் இஸ்லாமிய ஞானம் விரிவு அடையும். பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: