"
மஸ்ஜிதுல் ஹராமின் மண்டபங்களை அலங்கரித்த
வரலாற்றுச் சிறப்புமிக்க சலவைக்கல் ஓடுகள் "
இஸ்லாமிய வரலாற்றில், எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலான பல அழகான, அற்புதமான சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. இந்த வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தையும் இன்றைய இஸ்லாமிய இளம் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே தான், இஸ்லாமிய வரலாற்றில் நடந்த சம்பவங்கள் மற்றும் சுவடுகள் குறித்து உலக முஸ்லிம்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவ்வப்போது கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல நகரங்களில் நிரந்தரமாக கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் புனித நகரமான மக்காவில் அண்மையில் 'இரு புனித மஸ்ஜித்துகளின் கட்டடக்கலை கண்காட்சி' என்ற பெயரில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த கண்காட்சியில், மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹராமின் (Grand Mosque) வரலாற்றுச் சிறப்புமிக்க சலவைக்கல் ஓடுகள் இடம்பெற்றன.
மக்காவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், 19-ஆம் நூற்றாண்டில் புனித மஸ்ஜிதுல் ஹராமின் மண்டபங்களை அலங்கரித்த ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க சலவைக்கல் ஓடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கி.பி. 1881 காலத்தைச் சேர்ந்த சலவைக்கல் :
கி.பி. 1881 (ஹிஜ்ரி 1299) காலத்தைச் சேர்ந்த இந்தச் சலவைக்கல் ஓடுகள், நேர்த்தியான அரபு எழுத்துக்கலையையும் (calligraphy) மிகச்சிறந்த கைவினைத் திறனையும் கொண்டுள்ளன.
இவற்றில் உள்ள எழுத்துக்களில் அல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அவரது நான்கு தோழர்களான அபூபக்கர் அல்-சித்திக், உமர் பின் அல்-கத்தாப், உஸ்மான் பின் அஃப்பான் மற்றும் அலி பின் அபீ தாலிப் ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாத்தின் இரண்டு புனிதத் தலங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிற கலைப்பொருட்களுடன் இந்த ஓடுகளும் 'இரு புனித மஸ்ஜித்துகளின் கட்டடக்கலை கண்காட்சி'யில் (Exhibition of the Two Holy Mosques Architecture) காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கலைப்பொருட்கள் ஒரு காலத்தில் மக்காவில் உள்ள புனித மஸ்ஜித்தின் நடைபாதைகளை அலங்கரித்தவை. வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களின் தன்மையைப் பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் கண்டு வியப்பு :
இஸ்லாமியக் கட்டடக்கலை வரலாற்றில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிறர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு வியப்பு அடைந்தனர். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பிற பொருட்களில், இரு புனித மஸ்ஜித்துகளின் வரலாற்றைச் சார்ந்த அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கட்டடக்கலை சார்ந்த கூறுகள் ஆகியவை அடங்கும்.
ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கண்காட்சி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் அடுத்தடுத்த இஸ்லாமியக் காலங்கள் வழியாக நவீன சவூதி காலம் வரையிலான பல்வேறு வளர்ச்சி நிலைகளை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது.
=============
" மக்காவில் 'இரு புனித மஸ்ஜித்துகளின் கட்டடக்கலை கண்காட்சி' என்ற பெயரில்
நடைபெற்ற கண்காட்சியில், புனித மஸ்ஜிதுல் ஹராமின் வரலாற்றுச் சிறப்புமிக்க சலவைக்கல்
ஓடுகள் இடம்பெற்றன. 19-ஆம் நூற்றாண்டில் புனித மஸ்ஜிதுல் ஹராமின் மண்டபங்களை அலங்கரித்த
ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க சலவைக்கல் ஓடுகள் காட்சிப்படுத்தப்பட்டன"
=============
மேலும், ஆண்டுகளாக அதிகரித்து வரும் புனிதப் பயணிகள் மற்றும் உம்ரா செய்பவர்களுக்கான வசதிகளைச் செய்ய பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை இது காட்டுகிறது. இந்த ஆண்டு உச்சகட்ட ஹஜ் பருவத்தில் இவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்திற்கும் மேற்பட்டு த் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓடுகள் பாதுகாக்கப்படுவது, இஸ்லாத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், கண்காட்சிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான பிரத்யேக இடங்கள் மூலம் அதனை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும் சவூதி அதிகாரிகளுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
வரலாறு மிகமிக முக்கியம் :
உலகில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாமிய வரலாற்றை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். அதன்மூலம், இஸ்லாம் எப்படி உலக மக்கள் மனங்களை கவர்ந்து வேகமாக பரவியது என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். இஸ்லாமிய வாழ்வியல் என்பது மிகவும் உயர்ந்து வாழ்வியல் நெறிகளைக் கொண்ட ஓர் அற்புதமான வாழ்க்கை முறையாகும். அந்த அழகிய வாழ்க்கை முறைக்கு மேலும் அழகு சேர்க்க வேண்டுமானால், முஸ்லிம்கள் அனைவரும் தங்களது இஸ்லாமிய வரலாற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலக அளவில் நடைபெறும் இஸ்லாமியக் கண்காட்சிகளை காண ஆர்வம் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற கண்காட்சிகள் பொதுவாக சாதாரணமாக தெரியும். ஆனால், ஆழ்ந்து சிந்தித்து ஆராயந்தால், பல உலக அதிசய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதுபோன்ற ஓர் அற்புதமான கண்காட்சி தான் மக்காவில் உள்ள 'இரு புனித மஸ்ஜித்துகளின் கட்டடக்கலை கண்காட்சி' ஆகும். மக்கா செல்லும் முஸ்லிம்கள் அங்கு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சிகளையும் கண்டு, தங்களது இஸ்லாமிய உணர்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாம் குறித்து ஆராய, சிந்திக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் இஸ்லாமிய வாழ்வியல் குறித்தும், பல்வேறு துறைகளில் இஸ்லாம் செய்துகாட்டிய சாதனைகள் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும் என்பது உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment