Sunday, June 14, 2026

மலப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தல்..!

மலப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற  நீண்ட நாள் கோரிக்கை....!

கேரளாவில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவால் புதிய உத்வேகம் பெற்றது....!!

சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு அதிகாரி தலைமையில் குழு அமைக்க வலியுறுத்தல்.....!!

மலப்புரம், ஜுன்.15- கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான கோரிக்கையை ஆளும் ஐக்கிய ஜனநயாக முன்னணி ஆதரித்துள்ளது. கூட்டணியின் மாவட்ட அளவிலான கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு, இதன் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசிடம் கோரவும் முடிவு செய்யப்பட்டது.

மலப்புரம் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்ற நீண்டகாலமாக கோரிகக்கை இருந்து வருகிறது.  சமஸ்தா, வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகள் இக்கோரிக்கையை முன்னரே வலியுறுத்தி வருகின்றன. மலப்புரத்தின் வளர்ச்சி சார்ந்த சவால்கள் மற்றும் நிர்வாகச் சுமைகளைக் கையாள்வதற்கு மாவட்டப் பிரிப்பு அவசியம் என்று வாதிக்கப்பட்டு  வருகின்றன.

ஐக்கிய ஜனநயாக முன்னணி  ஆதரவு :

இந்நிலையில், இந்த கோரிக்கை தொடர்பாக மலப்புரத்தில் 14.06.2026 ஞூயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய ஜனநாயக முன்னணி மாவட்டத் தலைவர் கே.பி.அப்துல் மஜீத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மலப்புரம் மாவட்டத்தை பிரிக்கும் கோரிக்கையை ஆதரிப்பது என்று முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் அல்லது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  ஆகிய கட்சிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்காத ஒரு விவகாரத்தில், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவால் இந்த விவாகரம்  ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது.

அப்துல் மஜீத் விளக்கம் :

இந்த விவகாரம் குறித்து விரைவில் மாநில அரசிடம் முறையிடவிருப்பதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி  மாவட்டத் தலைவர் கே.பி. அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீபத்தில் நடைபெற்ற மலப்புரம் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையை வலியுறுத்த முதல்வர் வி.டி. சதீஷன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப வள ஒதுக்கீடு இல்லாததால், மலப்புரம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு மாவட்டப் பிரிப்பு மட்டுமே நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வாகும். மேலும், மாவட்டம் முழுவதும் அரசு வளங்கள் சமமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அப்துல் மஜீத், மலப்புரம் மாவட்டத்தைப் பிரிப்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளதாகக் கூறினார். இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கக் கோருவதற்கும் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆதரவு இருந்தபோதிலும், இக்கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை எச்சரிக்கையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட மலப்புரம் மாவட்டப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், அரசிடம் இது குறித்து எழுப்புவது குறித்துக் கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று கூறினார். மலப்புரம் மாவட்டம் தீவிரமான வளர்ச்சிச் சவால்களை எதிர்கொள்கிறது என்பது உண்மைதான். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அதன் பிரிப்பு அவசியமானது. இருப்பினும், ஒரு கட்சியாக இ.யூ.முஸ்லிம் லீக் இது குறித்து இன்னும் விரிவாக விவாதிக்கவோ அல்லது அரசை அதிகாரப்பூர்வமாக அணுக முடிவு செய்யவோ இல்லை என்று அவர் தெரிவித்தார். 

நிர்வாகப் பணிச்சுமைகள் :

மலப்புரம் வருவாய் அலுவலகங்கள், தாலுகா நிர்வாகங்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிறுவனங்கள் மிக அதிக பணிச்சுமையைக் கையாளுகின்றன. இதன் விளைவாக நலத்திட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகள் வழங்குவதில் பெரும்பாலும் தாமதங்கள் ஏற்படுகின்றன. சுகாதார வசதிகள் தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் இயங்குகின்றன. அதேநேரத்தில் அடர்த்தியான மக்கள்தொகைக் கூட்டங்கள் மற்றும் மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மாவட்டத்தில் காவல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை பெரும் சவால்களாகவே இருக்கின்றன.

இருப்பினும், இந்த முன்மொழிவு வலதுசாரி அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. இந்து ஐக்கிய வேதியின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை மீண்டும் மீண்டும் எதிர்த்ததோடு, இந்தப் பிரச்சினையை எழுப்பிய முஸ்லிம் அமைப்புகளையும் முஸ்லிம் லீக்கின் சில பிரிவுகளையும் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: