ஷிரீன் சுகன் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் அகில இந்திய முஷைரா....!
புகழ்பெற்ற உர்தூ கவிஞர்கள், தமிழக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.....!!
- நிறுவனர் நுஸ்ரத் அலி கான் சிறப்பு நேர்காணல் -
ஷிரீ''ன் சுகன் (Shiree'n Sukhan) என்ற அமைப்பு, உர்தூ மொழியின் மறுமலர்ச்சிக்கும் நமது புனிதமான கங்கா ஜமுனி தெஹ்ஸீப் கொண்டாட்டத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மொழி, கலாச்சாரம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு இயக்கமாகும். இதன் மாபெரும் தொடக்க விழா சென்னையில் வரும் 7ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஜிஆர்டி நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
ஷிரீ'ன் சுகன் என்பது "இனிய பேச்சு," "இனிய உரையாடல்," அல்லது "சொல்வளம்" எனப் பொருள்படும் ஒரு உர்தூ மற்றும் பாரசீகச் சொற்றொடராகும். இது இனிமையாகப் பேசும் ஒருவரையோ, அல்லது நேர்த்தியாகவும் வசீகரமாகவும் தங்குதடையின்றிப் பாயும் வார்த்தைகளையோ விவரிக்கிறது. இத்தகைய அழகான பொருள் கொண்ட இந்த அமைப்பின் மூலம் நடைபெறும் அகில இந்திய முஷைரா (உர்தூ கவியரங்கம்), உர்தூ மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல், உர்தூ கவியின் மேல் காதல் கொள்ளும் அனைத்து கவிப்பிரியர்களின் உள்ளத்தையும் நிச்சயம் கொள்ளை கொள்ளும் என உறுதியாக கூறலாம்.
உர்தூ மொழியின் வளர்ச்சி, மத நல்லிணக்கத்தின் மீது அக்கறை, கஜல், நஸம், ஷேர் ஆகியவற்றுக்கு புத்துயிர் அளித்தல், அத்துடன் இந்தியாவின் கலப்பு ஆன்மாவைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஷிரீ''ன் சுகன் அமைப்பின் நிறுவன செயலாளர் உர்தூ தோஸ்த் என்று அன்பாக அழைக்கப்படும் நுஸ்ரத் அலி கானை, மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்,நேரில் சந்தித்து சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். அப்போது, உர்தூ மொழியின் முக்கியத்துவம், கஜல், நஸம், ஷேர், தெஹ்ஸீப் ஆகியவை குறித்து நுஸ்ரத் அலி கான் சிறப்பான விளக்கம் அளித்தார். அந்த நேர்காணலின் முழு விவரம் இதோ உங்கள் பார்வைக்கு :
பிரமாண்ட உர்தூ கவியரங்கம் :
ஷிரீ''ன் சுகன் (Shiree'n Sukhan) என்ற அமைப்பின் மூலம் நாங்கள் அகில இந்திய அளவில் உர்தூ கவியரங்கங்களை நடத்தி வருகிறோம். குறிப்பாக, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அகில இந்திய உர்தூ முஷைரா நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னையில் மிகச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, வரும் 7ஆம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கஜல் என்பது7 ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் தோன்றிய , எதுகை மோனையுடன் கூடிய ஈரடிச் செய்யுள்களையும் ஒரு பல்லவியையும் கொண்ட ஒரு பண்டைய கவிதை வடிவமாகும். இது பொதுவாக ஆன்மீக பக்தி, காதல் மற்றும் பிரிவின் வலி போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது. இன்று, கஜல்கள் உர்தூ, பாரசீகம் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமாக எழுதப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் இசையமைக்கப்படுகின்றன
இதேபோன்று, நஸ்ம் என்பது உர்தூ, ஹிந்தி மற்றும் சிந்தி கவிதைகளின் ஒரு முக்கிய இலக்கிய வகையாகும். இது பொதுவாக எதுகை நயத்துடன் கூடிய செய்யுள் வடிவிலோ அல்லது நவீன உரைநடைப் பாணிக் கவிதைகளாகவோ எழுதப்படுகிறது. கஜலைப்போலல்லாமல், ஒரு நஸ்ம் ஒரே ஒரு மையக் கருத்தைச் சுற்றி அமைந்து, தொடக்கத்திலிருந்து இறுதிவரை சிந்தனையின் தர்க்கரீதியான பரிணாம வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
"ஷேர்" என்பது ஒரு இந்திய மற்றும் உர்தூ வார்த்தையாகும். இது பொதுவாக "சிங்கம்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சூழலைப் பொறுத்து, இது உர்தூ கவிதையில் (ஷயாரி) உள்ள ஒரு ஈரடியையோ கூட குறிக்கலாம். "தெஹ்ஸீப்" என்பதற்கு நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பண்பட்ட நன்னடத்தை என்று பொருள். அது சமூகத்தின் நளினம், மரியாதை மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளைப் பிரதிபலிக்கிறது.
====================
"அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, உர்தூ மொழியின் மேன்மையை வளப்படுத்த எடுத்துள்ள முயற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. சென்னையில் நடைபெறும் இந்த அகில இந்திய உர்தூ கவிதைகளின் மாலை, பாரம்பரியமும் ஒற்றுமையும் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கிறது"
====================
இப்படி பல்வேறு அழகிய வடிவங்கள் கொண்ட கஜல், நஸ்ம், ஷேர், தெஹ்ஸீப் ஆகியவற்றின் உன்னதமான ஒளி வெள்ளத்தை அனைவரும் அறிந்துகொண்டு இன்பம் பெறுவதுடன், உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு தங்களை அர்பணித்துக் கொண்டு, சமூகத்தில் அனைத்து மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட அமைப்பு தான் 'ஷிரீன் சுகன்' இயக்கமாகும். இந்த அமைப்பின் மூலம் அகில இந்திய அளவில் முஷைரா (உர்தூ கவியரங்கம்) நடத்தப்படுவது உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
புகழ்பெற்ற கவிஞர்கள், அமைச்சர்கள் பங்கேற்பு :
அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, உர்தூ மொழியின் மேன்மையை வளப்படுத்த நாம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. சென்னையில் நடைபெறும் அகில இந்திய உர்தூ கவியரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முஷைராவிற்கு தலைமை ஏற்று விழாவை சிறப்பிக்க உள்ளார்.
விழாவில் ஆற்காடு இளவரசர் அல்-ஹாஜ் நவாப் முகம்மது அப்துல் அலி, தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான், கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
அத்துடன், இந்திய அளவில் புகழ்பெற்ற உர்தூ கவிஞர்கள் மன்ஸர் போபாலி, இக்பால் அஷார், ஆகா சரோஷ், ஷமீம் இலாஹபாதி மற்றும் காஸிம் ஜர்சவி ஆகியோர் முஷைராவில் கலந்துகொண்டு, தங்களது ஆக்கங்களை அழகிய கவிதை வடிவத்தில் பாடி, உர்தூ மொழி ஆர்வலர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்த கவிதைகளின் மாலை, பாரம்பரியமும் ஒற்றுமையும் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கிறது. அத்துடன், மொழி, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் புகழ்பெற்ற பிரமுகர்களையும் இந்த நிகழ்வு கௌரவிக்கும்.
தமிழக அரசு முன்வர வேண்டும் :
தமிழகத்தில் உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உர்தூ அகாடமி மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், உர்தூ மொழியின் அழகிய கலை வடிவம், கலாச்சாரம், பாரம்பரியம் இன்னும் அதிகமான மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை. உர்தூ மொழி, முஸ்லிம்களின் மொழி என்ற தப்பான எண்ணம் இருந்து வருகிறது. உண்மையில் உர்தூ மொழி முஸ்லிம்களுக்கான மொழி மட்டுமே கிடையாது. அந்த அழகிய மொழி அனைத்து மக்களையும் கவரும் ஒரு உன்னதமான மொழியாகும்.
எனவே, உர்தூ மொழியை அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உர்தூ கவியரங்கங்கள், கலந்துரையாடல்கள், உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு முயற்சிகள் அனைத்தும் தமிழக அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம், உர்தூ மொழியின் அழகிய கலாச்சாரம் தமிழகத்தில் பரவி, அதன் இன்பத்தை இளைய சமுதாயம் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். அதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு, ஷிரீ''ன் சுகன் அமைப்பின் நிறுவன செயலாளர் உர்தூ தோஸ்த் நுஸ்ரத் அலி கான் தெரிவித்தார். அவரது எண்ணங்கள், ஆசைகள் மற்றும் உர்தூ மொழியின் வளர்ச்சிக்காக ஷிரீ''ன் சுகன் அமைப்பு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்தி விடைப்பெற்றோம்.
- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
================================




No comments:
Post a Comment