" மக்காவின் நாணயப் புர்கா "
- சில சுவையான வரலாற்றுத் தகவல்கள் -
- ஜாவீத் -
இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றின் கடந்த காலத்தின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க, முஸ்லிம்கள் அனைவரும் வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்த வேண்டும். உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்வதன் மூலம், இஸ்லாம் எந்தளவுக்கு ஒழுக்க நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருக்கிறது என்பதை அறிந்து, நம் அனைவருக்கும் வியப்பு ஏற்படும்.
தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில், முஸ்லிம்கள் மத்தியில், இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் இருந்து விலகச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் சவால்களும், பிரச்சினைகளும் கூடிக் கொண்டே செல்கின்றன. மேலும், இஸ்லாம் குறித்து தவறான கண்ணோட்டம் சகோதரச் சமுதாய மக்கள் மத்தியில் உருவாகி, அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து சரியான புரிதல் கிடைக்காமல், அதை ஆராயும் சிந்தனையை கைவிடுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரத்தில் ஒன்றாக இருக்கும் புர்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடையாகும். இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் பொது இடங்களில் தங்களை மறைத்துக் கொள்ள அணியும் ஒருவகை ஆடை தான் புர்கா ஆகும். இது தலை முதல் பாதம் வரை முழு உடலையும் மூடும் தளர்வான ஆடையாகும். பெண்கள் தங்களது கண்ணியத்தைப் பேணவும், பாதுகாப்பாகவும் இருக்க இந்த ஆடை அணியப்படுகிறது.
இதேபோன்று, நிகாப்பும் முகத்தை மூடும் ஆடைதான். ஆனால், இதில் கண்கள் மட்டும் வெளியில் தெரியும் வகையில் திறந்திருக்கும் வகையில் ஆடை உருவாக்கப்பட்டிருக்கும். ஹிஜாப் என்பது தலை மற்றும் கழுத்துப் பகுதியை மட்டும் மூடி, முகம் மற்றும் கைகள் முழுமையாகத் தெரியும் வகையில் அணியப்படும் முக்காடு ஆடையாகும். பெண்களின் கண்ணியத்தையும் அடக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆடைகள் இஸ்லாமிய நாகரிகத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மக்காவின் நாணயப் புர்கா :
இப்படி இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகத்தில் ஒன்றாக, பெண்களின் முகத்தை மறைக்கும் 'நாணயப் புர்கா' (நாணயங்களால் ஆன முக்காடு), மக்காவின் பாரம்பரிய ஆடை வகைகளில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது. இது மக்கா நகரின் தனித்துவமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், அதன் கலாச்சார அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த புர்கா உயர்தரமான கருப்பு அல்லது சிவப்பு நிறத் துணியால் செய்யப்பட்டு, கண்களுக்கு மட்டும் திறப்புப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இதன் முன்பகுதி, நேர்த்தியாகப் பொருத்தப்பட்ட தங்கம் அல்லது வெள்ளி நாணய வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இதற்கு அந்தப் பெயரும் தனித்துவமான தோற்றமும் கிடைத்தன.
மக்கா நகரில் உள்ள நாணயங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. அவை ஒரு பெண்ணின் சேமிப்பையும் நகைகளையும் குறிப்பனவாகவும் இருந்தன. திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் ஈத் பண்டிகைகள் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளின்போது இதில் மேலும் நாணயங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் இந்த நாணயப் புர்கா சமூக அந்தஸ்து, பொருளாதார வளம் மற்றும் அழகின் அடையாளமாகத் திகழ்ந்தது.
கைவினைஞர்களின் கலைநயம் :
மக்காவின் கைவினைஞர்கள் துல்லியமான தையல் மற்றும் கவனமாக அடுக்கப்பட்ட நாணயங்களைக் கொண்டு இப்புர்காவைத் தங்கள் கைகளாலேயே உருவாக்கினர். சில குடும்பங்கள் இதனை ஒரு பொக்கிஷமான குடும்பச் சொத்தாகப் பாதுகாத்து, தலைமுறைகள் கடந்து அடுத்தடுத்த சந்ததியினருக்குக் கையளித்து வந்தன.
தினசரி வாழ்க்கையில் நாணயப் புர்கா தற்போது பரவலாக அணியப்படுவதில்லை என்றாலும், பாரம்பரியத் திருவிழாக்கள், கலாச்சாரக் கண்காட்சிகள் மற்றும் மரபுசார் நிகழ்வுகளில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு இது மக்காவின் வரலாற்று அடையாளத்தைத் தொடர்ந்து பறைசாற்றுகிறது.
சவூதி அரேபியாவின் கலாச்சார மரபைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் வரலாறு மற்றும் பழக்கவழக்கங்களுடன் வருங்காலத் தலைமுறையினர் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்வதற்கும், நாணயப் புர்கா போன்ற பாரம்பரிய ஆடைகளைப் பதிவு செய்து பாதுகாப்பது அவசியம் என்று பாரம்பரியக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மக்காவின் உண்மையான பாரம்பரிய ஆடையின் அடையாளமாக, கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் இடம்பெறும் இந்த 'நாணயப் புர்கா' இஸ்லாமிய கலாச்சாரப் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினரிடம் கொண்டு சென்று சேர்க்க மிகவும் உதவுகிறது என்று உறுதியாக கூறலாம்.
வரலாற்றை அறிந்துகொள்ள ஆர்வம் :
மக்காவின் நாணயப் புர்கா போன்ற பல சுவையான வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள முஸ்லிம் சமூகம் ஆர்வம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே, இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் தவறாகப் பரப்பப்படும் செய்திகளை, தகவல்களை, பொய் பிரச்சாரங்களை உரிய ஆதாரங்களுடன் முறியடிக்க முடியும்.
தற்போது உலகில் வேகமாக சகோதரச் சமுதாய மக்களை கவர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்துவரும் நிலையில், முஸ்லிம்கள் கூட, இஸ்லாமிய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்வதில் அதிக அக்கறையும் ஆர்வமும் செலுத்த முன்வர வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய அறிவு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் விரிவு அடைந்து சரியான திசையை நோக்கி, சமுதாய இளைஞர்கள் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகும் என்று உறுதியாக கூறலாம். இஸ்லாமிய வரலாற்றை தேடி தேடி படித்து ஆராய முஸ்லிம் சமுதாயம், குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இது தான், பல்வேறு நவீன சவால்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
==============================




No comments:
Post a Comment