" வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கடல் அருங்காட்சியகம் "
- தாயிஃப் மற்றும் ஜித்தாவின் பாரம்பரியத்தை ஆராயும் புதிய முயற்சி -
உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியங்களில் ஒன்றாக, அல்-பலத் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கடல் அருங்காட்சியகம் ஜித்தாவில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு அமர்வில், தாயிஃப் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜித்தாவிற்கு இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
"மஜ்லிஸ் ஜித்தா - வரலாற்றுச் சிறப்புமிக்க ஜித்தாவில் தாயிஃபின் சாராம்சம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வர்த்தகம், இசை, கட்டடக்கலை மற்றும் இயற்கை பாரம்பரியம் ஆகியவற்றின் பகிரப்பட்ட கதைகளை ஆராய்வதற்காக பாரம்பரிய நிபுணர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சாரப் பயிற்சியாளர்களை ஒன்றிணைத்தது.
இந்த அமர்வை செங்கடல் அருங்காட்சியகத்தின் இயக்குநர் இமான் ஜிதான் நெறிப்படுத்தினார். இதில் ஆயிஷ் அகாடமியின் பொது மேலாளர் சுமையா ஷோவைல், கலாச்சார அமைச்சகத்தின் தொல்லியல் நிபுணர் இப்ராஹிம் அல்-ஷாயா, தாரிக் அப்துல்ஹக்கீம் அருங்காட்சியகத்தின் இயக்குநர் பந்தர் அல்ஷரீஃப் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், கைவினைஞர், ஊத் இசை வல்லுநர் மற்றும் சவூதி கைவினைஞர் ஆடம்பர வாசனைத் திரவிய பிராண்டான 'தார் அஸ்ஸாம்'-இன் நிறுவனர் ஆகிய அஸ்ஸாம் அல்-கம்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தாயிஃப், ஜித்தா இடையேயான தொடர்புகள் :
இந்தக் கலந்துரையாடலில், தாயிஃப் மற்றும் ஜித்தா இடையேயான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகள் எடுத்துக்காட்டப்பட்டது. ஒரு முக்கிய வர்த்தக நுழைவாயிலாக வரலாற்று சிறப்புமிக்க ஜித்தாவின் பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாப் அல்-புன்ட் போன்ற பகுதிகள் வரலாற்று ரீதியாக பயணிகள் மற்றும் வணிகர்களிடமிருந்து பொருட்களைப் பெற்றதாகவும், இது தாயிஃபிலிருந்து உணவு போன்ற பொருட்களின் பரிமாற்றங்கள் உட்பட, பிராந்திய மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதைகளுடன் இணைக்கப்பட்ட ஒரு கலாச்சார மற்றும் வணிகக் கலவையாக அந்த நகரத்தை மாற்றியதாகவும் செங்கடல் அருங்காட்சியகத்தின் இயக்குநர் இமான் ஜிதான் கூறினார்.
கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் மூலம் இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கதைகளை ஆராய்வதை இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், குறிப்பாக தாயிஃபில் பிறந்த முன்னோடி சவூதி இசைக்கலைஞரான தாரிக் அப்துல்ஹக்கீமின் மரபுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஜிதான் தெரிவித்தார். தாரிக் அப்துல்ஹக்கீமின் கலைத்திறன் அவரது சொந்த ஊரின் சூழல், பாரம்பரியம் மற்றும் மரபுகளால் வடிவமைக்கப்பட்டு, பின்னர் ஜித்தாவுடனான அவரது தொடர்பால் செல்வாக்கு பெற்றது.
====================
"மஜ்லிஸ் ஜித்தா - வரலாற்றுச் சிறப்புமிக்க ஜித்தாவில் தாயிஃபின் சாராம்சம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வர்த்தகம், இசை, கட்டடக்கலை மற்றும் இயற்கை பாரம்பரியம் ஆகியவற்றின் பகிரப்பட்ட கதைகளை ஆராய்வதற்காக பாரம்பரிய நிபுணர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சாரப் பயிற்சியாளர்களை ஒன்றிணைத்தது"
====================
"மேலும், சமையல் ஆணையம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன், ஜித்தா மற்றும் தாயிஃப் ஆகிய இரண்டு நகரங்களும் சர்வதேச சமையல் இடங்களாக அதிகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இது இரு நகரங்களுக்கும் இடையிலான ஒரு பகிரப்பட்ட கலாச்சார மற்றும் படைப்பாற்றல் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார். "பாரம்பரிய தாயிஃப் ரோஜா சார்ந்த வாசனைத் திரவியங்களை, இப்பகுதியின் உயிருள்ள கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக முன்வைப்பதில் கைவினைஞர்களின் பங்கையும் இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது."
கடல்வழி வர்த்தக நுழைவாயில் ஜித்தா :
இரு நகரங்களுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான சார்புநிலையை கலாச்சார அமைச்சகத்தின் தொல்லியல் நிபுணர் இப்ராஹிம் அல்-ஷாயா எடுத்துரைத்தார். மேலும் கடல்வழி வர்த்தக நுழைவாயிலாக ஜித்தாவின் நீண்டகாலப் பங்கையும் குறிப்பிட்டார். "மேற்கு சவூதி அரேபியாவில் பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே சரக்குகள், உணவு மற்றும் கலாச்சாரத்தை இணைக்கும் ஒரு கடல்சார் நுழைவாயிலாக ஜெத்தா திகழ்ந்தது. தாயிஃப் மற்றும் ஜெத்தா இடையிலான உறவு நீண்ட காலமாக வர்த்தகம் மற்றும் பரிமாற்றத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தாயிஃபின் விளைபொருட்கள் இந்த நகரம் வழியாகவே புனிதப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களைச் சென்றடைகின்றன," என்று அவர் கூறினார்.
இந்த உறவின் ஒரு பகுதியாக விளங்கும் சமையல் கலை சார்ந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டிய ஆயிஷ் அகாடமியின் பொது மேலாளர் சுமையா ஷோவைல், அதனை பரந்த கலாச்சார அங்கீகார முயற்சிகளுடன் தொடர்புபடுத்தினார். "ஜெத்தா மற்றும் தாயிஃப் ஆகியவை ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஜெத்தா பாரம்பரியம், சந்தைகள் மற்றும் கடலைக் குறிக்கிறது, அதேவேளையில் தாயிஃப் பண்ணைகள், ரோஜாக்கள் மற்றும் இயற்கை விளைபொருட்களை வழங்குகிறது. இவை இரண்டும் இணைந்து, நிலத்திலிருந்து உணவு மேசை வரை நீடிக்கும் நிலையான தன்மையைக் கொண்ட ஒரு முழுமையான சமையல் மற்றும் கலாச்சார அனுபவத்தை உருவாக்குகின்றன," என்று அவர் கூறினார்.
கலைசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பு :
தாரிக் அப்துல்ஹகீம் அருங்காட்சியகத்தின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த அமர்வு, சவூதி அரேபியாவின் கலை மற்றும் கலாச்சார அடையாளத்தின் மீது தாயிஃப் கொண்டிருக்கும் நீடித்த தாக்கத்தை ஆராய்ந்தது. குறிப்பாக, முன்னோடி இசைக்கலைஞர் தாரிக் அப்துல்ஹகீமின் வாழ்க்கை மற்றும் அவரது கலைப் பங்களிப்புகள், அத்துடன் பாரம்பரிய 'அல்-மஜ்ரூர்' (Al-Majrour) இசை வடிவம் ஆகியவை இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
வாய்மொழி மற்றும் கலைசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் பகிர்ந்துகொள்வதிலும் கலாச்சார நிறுவனங்களின் பங்கை தாரிக் அப்துல்ஹக்கீம் அருங்காட்சியகத்தின் இயக்குநர் பந்தர் அல்ஷரீஃப் வலியுறுத்தினார்: "எங்கள் கலாச்சார பாரம்பரியத்தின் ஆழத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், இக்கதைகளையும் நிபுணத்துவ அறிவையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம். தாயிஃபின் சூழல், அதன் பண்ணைகள் மற்றும் இயற்கை அமைப்புகள் ஆகியவை தாரிக் அப்துல்ஹகீமின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி, அவரது ஒழுக்கம், பொறுமை மற்றும் கலைப் பார்வையை வடிவமைத்தன." வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெத்தா நகரில் உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்குத் தொடர்ந்து பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை இந்த அருங்காட்சியகம் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விரு பிராந்தியங்களுக்கும் இடையே பகிரப்படும் உணர்வுப்பூர்வமான மற்றும் பொருள்சார் பாரம்பரியத்தை, குறிப்பாக உணவு மற்றும் நறுமணப் பொருட்கள் சார்ந்த அம்சங்களை 'தார் அஸ்ஸாம்'-இன் நிறுவனர் ஆகிய அஸ்ஸாம் அல்-கம்தி ஆராய்ந்தார். "தாயிஃப் மற்றும் பரந்த ஹிஜாஸ் பிராந்தியம் ஆகியவை நீண்ட காலமாக இயற்கை விளைபொருட்களின் வர்த்தகத்தில் முக்கிய மையங்களாகத் திகழ்ந்து வருகின்றன. 'சலீக்' (saleeg) போன்ற பாரம்பரிய உணவுகளுக்கும், ரோஜா, வார்ம்வுட் (wormwood), எலுமிச்சை புல் (lemongrass) மற்றும் லாவெண்டர் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் இயற்கை நறுமணப் பொருட்களுக்கும் நாங்கள் பெயர் பெற்றவர்கள். இந்த மரபுகள் உணவு மற்றும் நறுமணம் ஆகிய இரண்டிலும் தூய்மை மற்றும் உண்மையான தன்மையைப் பிரதிபலிக்கின்றன," என்று அவர் கூறினார்.
தாயிஃபின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி :
தாயிஃபின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியுடன் இந்த மாலைப் பொழுது நிறைவடைந்தது. அதோடு, அல்-கம்தி இயற்கை நறுமணம் பிரித்தெடுக்கும் செயல்முறையையும் செய்து காட்டினார். இது கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்ட கலாச்சார நடைமுறைகளை நேரில் காணும் அனுபவத்தை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை நடைபெறும் "Sunken Treasures" (மூழ்கிய பொக்கிஷங்கள்) உள்ளிட்ட நிரந்தர மற்றும் தற்காலிகக் கண்காட்சிகளுடன், பல்வேறு வயது மற்றும் அணுகல்தன்மைத் தேவைகளைக் கொண்டவர்களுக்கான மாதாந்திரக் குழு விவாதங்கள், உரைகள் மற்றும் பயிலரங்குகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் மூலமாகவும் 'செங்கடல் அருங்காட்சியகம்' (Red Sea Museum) ஒரு சமூக மையமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக செங்கடல் அருங்காட்சியகத்தின் இயக்குநர் இமான் ஜிதான் கூறினார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment