Tuesday, June 2, 2026

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்....!

" பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” 

- முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையில் நியாயம் உள்ளதா? -

- ஜாவீத் -

இந்திய திருநாட்டில் பசுவை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், அப்பாவி ஏழை முஸ்லிம்கள் மீது வட மாநிலங்களில் நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை தடுக்க அரசுகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அண்மையில்  நடைபெற்ற தியாகத் திருநாள் அன்று, பசு மாட்டை குர்பானி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எச்சரித்தன. அத்துடன், மேற்கு வங்கத்தில் புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட பாஜக அரசு, பசு மாடுகளை குர்பானி கொடுக்க பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. 

மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல், தலைநகர் டெல்லியில் கூட மாடுகளை குர்பானி கொடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் கலாச்சாரம், விவசாயம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக பசு கருதப்படுகிறது. எனவே, பசுவின் பேரில் ஏழை முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், தியாகத் திருநாளின்போது பசு மாட்டை குர்பானி கொடுப்பதை தடுக்கும் பாசிச அமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  ஜமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவித்துவிட்டால்,  பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. 

தேசிய விலங்காக பசுவை அறிவிப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் பலமுறை விளக்கம் அளித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசிய விலங்காக அறிவிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. பொருளாதார இழப்புகள், பால் உற்பத்தி பாதிப்பு மற்றும் இறைச்சி ஏற்றுமதி போன்ற காரணங்களை முன்வைத்து இதற்கு எதிர் கருத்துக்களும் நிலவுகின்றன.அனைத்து தரப்பு மக்களிடையே ஒருமித்த கருத்து மற்றும் பல்வேறு அரசியல், பொருளாதார காரணிகள் இதற்கு தடையாக உள்ளன.

முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையில் உள்ள நியாயம் :

இத்தகைய சூழ்நிலையில் தான், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையின்போது இந்த கோரிக்கை மேலும் வலுவடைந்தது. இது போன்ற கோரிக்கைகள் இதுவரை இந்து அமைப்புகளிடமிருந்தே வந்துள்ள நிலையில், முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் இக்கோரிக்கை தனித்துவமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

அகில இந்திய முஸ்லிம் ஜமாத்' அமைப்பின் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி, பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க வேண்டும் என்ற மதானியின் கோரிக்கைக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளார். “இக்கோரிக்கை தொடர்பாகப் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முதன்மையான நோக்கம். அந்த நோக்கத்தை முன்னிறுத்தி, முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய ஒரு கூட்டு மனு தயாரிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இக்கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி வலியுறுத்தி உள்ளார்.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் தேசியப் பொதுச்செயலாளர் மவுலானா யாசூப் அப்பாசும் இந்த கோரிக்கையை வரவேற்றுள்ளார். “பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. அக்கோரிக்கையின் மீது முழு மனதுடன் செயல்படுவது அரசின் பொறுப்பு. சில மாநிலங்களில் பசுக்கள் மீதான தடைகள் எதுவும் இன்றி உண்ணப்படுகிறது. அதேவேளையில், வேறு சில மாநிலங்களில் பசுவின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படும் முரண்பாடான சூழல் நிலவுகிறது. இதை தடுக்க, பசுக்கள் குறித்த அரசின் நோக்கம், அதன் கொள்கைகளில் தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு சீரான அணுகுமுறை உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் கவுசர் ஹயாத் கானும் ஆதரவு தெரிவித்துள்ளார். “இக்கோரிக்கை தொழில்நுட்ப ரீதியாகச் சரியானதே. அதனை அரசு முழுமையான நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்த வேண்டி முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒரே மேடையில் திரண்டால் மட்டுமே பலன் கிடைக்கும். கோவா, அசாம் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி இன்றும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உண்ணப்படுகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பசுவதை அரசியல்மயமாக்கப்படுகிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது” என்றும் கவுசர் ஹயாத் கான்  விமர்சித்துள்ளார். 

சன்னி பிரிவு முஸ்லிம்களின் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூத்த நிர்வாக உறுப்பினரான மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹாலி, “நமது இந்து சகோதரர்கள் பசு மீது மதரீதியான உணர்வுகளைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பசுவதை தொடர்பான சட்டங்களில் ஒருமைப்பாடு இருக்க வேண்டும். இதற்காக, பசுவதைக்கு எதிரான ஒரே சீரான சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். .

இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் 'குரேஷி' சமூகத்தினரின் முக்கிய அமைப்பான 'அகில இந்திய குரேஷி ஜமாத்' தலைவர் சிராஜ் குரேஷி, “மேற்கு வங்கத்தில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகளே இதற்கு காரணமாகி விட்டது. பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க தேவைப்படும் பட்சத்தில், பிரதமரைச் சந்தித்துப் பேச எனது அமைப்பு முயற்சிக்கும். ஏனெனில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

வலுக்கும் கோரிக்கைகள் :

இதுஒருபுறம் இருக்க, பசு வதை தொடர்பாக நடைபெறும் அரசியல் ஆதாய முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும், கும்பல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் இத்தகைய முயற்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த முஸ்லிம் அமைப்புகள் தம் சமூகத்தினர் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில், ஆக்ராவில் தியாகத் திருநாள் அன்று ஈத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, 'உத்தரப் பிரதேச முஸ்லிம் மகாபஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி பதாகைகளை ஏந்தி நின்றனர். அந்தப் பதாகைகளில், கோமாதாவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் பசு என்பது நாட்டின் கலாச்சாரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் சின்னமாகும். எனவே, அதற்கு தேசிய விலங்கு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.  நாட்டில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி சீலம்பூா் பகுதியில் பக்ரீத் தொழுகைக்குப் பின்னா் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பொதுவாக இந்த வகையான கோரிக்கைகள் இந்து அமைப்புகளுடன் தொடா்புடையதாக கருதப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைப்புகள் இதனை முன்வைத்திருப்பது நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்திய முஸ்லிம் சமூகத்தினா் புதிய சீலம்பூரின் குறுகிய தெருக்களில் ஊா்வலமாகச் சென்றனா். ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் அஷ்ரத் மதானி முன்வைத்து வரும் இந்த கோரிக்கைக்கு உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், தில்லியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

உயர்நீதிமன்றம் கருத்து :

பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும், எனவே இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், பசு பாதுகாப்பு பணி ஒரு மதத்தின் பணி மட்டுமல்ல, பசு இந்தியாவின் கலாச்சாரமாகும், மதத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பணி இதுவாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களில், அரசு கோசாலைகளை கட்டுகிறது. ஆனால் பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை. அதுபோலவே, தனியார் கோசாலைகளும் இன்று வெறும் போலித்தனமாக மாறிவிட்டன. இவர்கள் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று அரசாங்கத்தின் உதவியுடன் பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் செய்கிறார்கள், ஆனால் அதை தங்கள் சொந்த நலனுக்காக செலவிடுகிறார்கள் மற்றும் பசுவை கவனித்துக்கொள்வதில்லை என தெரிவித்திருக்கிறது. 

மத்திய அமைச்சர் விளக்கம் :

அதேநேரத்தில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை குறித்து கருத்து கூறியுள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், 'இது இரட்டை நிலைப்பாடு. ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்கும் இடையிலான உறவை வரையறுக்க, முறையான அறிவிப்பு எதுவும் தேவையில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய சூழ்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தேசிய விலங்காக பசு அறிவிப்பது குறித்து கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது. பல்வேறு அமைப்புகள் மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து இந்த கோரிக்கை வந்து இருந்தாலும், இந்த கோரிக்கைகள் எதுவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,பசுவதை தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டங்கள் மாறுபட்டவை என்றும், தேவைக்கேற்ப அங்கு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மேக்வால் விளக்கம் அளித்துள்ளார்.  இதன்மூலம் பசு மாடுகளை பலியிடம் விவகாரத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது. பாஜகவின் அரசியல் விளையாட்டுகள் மூலம் பாதிப்பு அடைவது ஏழை கிராமத்து இந்து மக்களே என்பதையும் அண்மையில் நாடு நன்கு உணர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

=========================


No comments: