2027ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம்:
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து உடனே வழங்க வேண்டும்.....!
அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு.....!!
புதுடெல்லி, ஜுலை.14- 2027ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய பயணிகள் அனைவருக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பார்ஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்திய பயணிகள் அனைவரும் இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து வருகிறார்கள்.
ஒன்றிய அரசு உத்தரவு :
இதுஒருபுறம் இருக்க, புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய பயணிகளுக்கு விரைந்து கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் துணைச் செயலாளர் சோமிகா ஸ்ரீவஸ்தவா பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய அரசின் துணைச் செயலாளர் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலன்துறை அமைச்சகத்தின் குறிப்பின்படி, 2027ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவுப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முடிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசு விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், எனவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளுக்கும் 31.12.2027 வரையில் செல்லத்தக்க வகையிலான பாஸ்போர்ட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் :
எனவே, புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், பாஸ்போர்ட் விண்ணப்பம் அளித்துள்ள அனைத்து பயணிகளின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனைச் செய்து விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காவல்துறை விசாரணை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை எளிமையாகவும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும்.
மேலும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்கும் நபர்களின் விண்ணப்பங்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய நபர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இதற்காக தனி சேவை மையங்கள் அமைக்க வேண்டும். அந்த மையங்கள் மூலம் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறப்பான பணியில் அனைத்து சரிபார்ப்பு அதிகாரிகள், பாஸ்போர்ட் வினியோகம் செய்யும் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் துணைச் செயலாளர் சோமிகா ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள குறிப்பாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment