Thursday, July 9, 2026

சுவைமிகுந்த குவைத் பேரீச்சம் பழங்கள்....!

 " சுவைமிகுந்த குவைத் பேரீச்சம் பழங்கள் "

- அரிய தகவல்களுடன் கூடிய ஒரு ரிப்போர்ட் -

குவைத் முழுவதும் உள்ள பேரீச்சை மரங்களில், அறுவடை நெருங்கும் வேளையில், கொத்துகளாகத் தொங்கும் பேரீச்சம்பழங்களைச் சுற்றி வலைப் பைகள் கட்டப்பட்டிருப்பதை இப்போது காண முடிகிறது. இவை கடுமையான கோடை வெப்பம் மற்றும் தூசியிலிருந்து பழங்களைப் பாதுகாக்கின்றன. விரைவில், இந்த பருவத்தின் முதல் 'ருதாப்' (பாதி பழுத்த நிலையில் உள்ள மென்மையான பேரீச்சை) வரத் தொடங்கும். இது வீடுகள், சந்தைகள் மற்றும் 'திவானியா'க்களுக்கு (சமூகக் கூடல் இடங்கள்) புதிய பேரீச்சம்பழங்களைக் கொண்டு வரும்.

பல நிலைப் பயணங்கள் :

பேரீச்சை மரம் முதல் உணவு மேசை வரை பழங்கள் வந்து சேரும் பயணம் பல நிலைகளைக் கொண்டது. ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பேரீச்சம்பழங்கள் 'கலால்' அதாவது உறுதியான  நிலையிலிருந்து, மென்மையாகவும் பழுத்தும் காணப்படும் 'ருதாப்' நிலைக்கும், இறுதியாக முழுமையாக முதிர்ந்து உலர்ந்த 'தம்ர்'  நிலைக்கும் மாறுகின்றன.

மென்மையான தன்மை மற்றும் இனிப்புச் சுவைக்காகப் பலர் 'ருதாப்' வகையை விரும்பினாலும், பல குவைத் நாட்டினருக்குப் பேரீச்சம்பழங்கள் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. சுவையைத் தாண்டி, அவை பேரீச்சை மரத்துடனான ஒரு தனிப்பட்ட பிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. இதனால்தான் நேரம், உழைப்பு மற்றும் செலவு ஆகியவற்றைச் பொருட்படுத்தாமல் பலர் தங்கள் வீடுகளைச் சுற்றிப் பேரீச்சை மரங்களை நட்டுப் பராமரிக்கின்றனர். சந்தையில் பேரீச்சம்பழங்கள் எளிதாகக் கிடைத்தாலும், மக்கள் தங்கள் சொந்த மரங்களில் விளையும் பழங்களையே சாப்பிட விரும்புகிறார்கள். அதில் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. என்று 1990-களிலிருந்து குவைத்தில் பேரீச்சை மரங்களை விற்பனை செய்து வரும் முகமது அபூதி என்பவர் கூறுகிறார்.  

ஒரு சிறப்பான சுவை :

தனது வீட்டுத் தோட்டத்தில் பேரீச்சை மரங்களை வளர்த்து வரும் குவைத் வாசியான அபு தலால் என்பவரும் இதே உணர்வைக் கொண்டுள்ளார். இவர் மிகவும் இனிப்பான 'ருதாப்' பழங்களை விளைவிப்பவர் என்று அண்டை வீட்டாருக்கு நன்கு தெரிந்தவர். "நான் நட்டுப் பராமரித்த மரத்திலிருந்து கிடைக்கும் 'ருதாப்' பழங்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான மதிப்பு உண்டு. அதன் சுவையே தனித்துவமானது" என்று அவர் கூறி மகிழ்ச்சி அடைகிறார். 

இருப்பினும், பேரீச்சை மரங்களைப் பராமரிப்பதில் சில சவால்களும் உள்ளன. இதற்கு அதிக செலவாகிறது. ஏனெனில் குவைத்தின் மணல் பாங்கான மண் நீரை விரைவாக உறிஞ்சிவிடுகிறது. மேலும் நீர்ப்பாசனச் செலவுகளும் அதிகம். ஆனாலும் மக்கள் இதில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். பழங்களுக்காக மட்டுமல்லாமல், அவை தரும் பசுமைக்காகவும் பலர் பேரீச்சை மரங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் தங்கள் வீடுகள், விடுமுறை இல்லங்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்காகப் பேரீச்சை மரங்களை வாங்குகிறார்கள். முகாம்களில் கூட, அப்பகுதியை அழகாகக் காட்டுவதற்காகக் கூடாரங்களைச் சுற்றி மரங்களை வாங்கி வைக்கிறார்கள்.  தரமான தன்மை, வகை மற்றும் அளவைப் பொறுத்து பேரீச்சை மரங்களின் விலை 100 முதல் 500 குவைத் தினார்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குவைத்திற்கும் பேரீச்சை மரங்களுக்கும் இடையிலான பிணைப்பு பல தலைமுறைகளாகத் தொடர்கிறது. சவூதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற பிராந்தியத்தின் பெரிய உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடுகையில் குவைத் ஒரு சிறிய உற்பத்தியாளராக இருந்தாலும், அது பரந்த பேரீச்சை வளர்ப்புப் பகுதியின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. வஃப்ரா மற்றும் அப்தாலி போன்ற பகுதிகளில் உள்ள பண்ணைகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம் :

குவைத் மக்களைப் பொறுத்தவரை, பேரீச்சை மரத்தின் முக்கியத்துவம் அதன் பழத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பாரம்பரியமாக, அம்மரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு பயன்பாட்டைக் கொண்டிருக்கிறது. பேரீச்சை மரம் வீட்டில் ஒரு வரப்பிரசாதம். அதில் உள்ள அனைத்தும் பயன்படக்கூடியவை. மரத்தண்டு பாலங்கள் மற்றும் வீடுகளின் கூரைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நிழலுக்கும் தங்குமிடத்திற்கும், சமையலுக்கான விறகாகவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இன்றும் கூட, சிலர் எரிவாயுவிற்குப் பதிலாகச் சமையலுக்குப் பேரீச்சை இலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  அதன் உட்பகுதி கூட நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் அதன் நார் பகுதி ரொட்டி தயாரிப்பாளர்கள் மற்றும் பாரம்பரிய அடுப்புகளைப் பயன்படுத்துபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. பேரீச்சை மரம் முழுவதுமே நன்மை பயக்கக்கூடியது. அதிலிருந்து எதுவும் வீணாவதில்லை.

சில குவைத் மக்கள் தங்கள் சொந்தப் பழங்களைப் பறிக்கும் அனுபவத்திற்காக வீடுகளில் பேரீச்சை மரங்களை வளர்த்தாலும், பரந்த அளவிலான பேரீச்சை சந்தையானது பாரம்பரிய வகைகள் மற்றும் உயர்தர இறக்குமதி செய்யப்பட்ட வகைகளைத் தேடும் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இந்தியப் பேரீச்சை விற்பனையாளரான மாலிக், பேரீச்சம்பழங்களுக்கான தேவை ஆண்டு முழுவதும் வலுவாக இருப்பதாகவும், குறிப்பாக 'ருதாப்' (அரை பழுத்த நிலை) பருவத்தில் பல வாடிக்கையாளர்கள் அவற்றை விரும்புவதாகவும் கூறினார். புதிய மஞ்சள் நிறப் பேரீச்சம்பழங்கள் குறிப்பாகப் பிரபலமாக உள்ளன. முழுமையாகப் பழுத்த பேரீச்சம்பழங்களை விட இவை அதிக இனிப்புச் சுவை கொண்டிருப்பதால் பல குவைத் மக்கள் இவற்றை விரும்புகிறார்கள். இவை பொதுவாக ஒரு கிலோகிராம் 2 முதல் 2.5 குவைத் தினார்கள் வரை விற்கப்படுகிறது. 

உயர்தர வகைகள் :

வாடிக்கையாளர்கள் உயர்தர வகைகளையும் தேடுகிறார்கள்; குறிப்பாக 'மெட்ஜூல்'  வகை அதன் பெரிய அளவு, மென்மையான தன்மை மற்றும் செழுமையான இனிப்புச் சுவைக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறது. குவைத்தில் விற்கப்படும் மிகவும் விலையுயர்ந்த பேரீச்சம்பழங்களில் மெட்ஜூல் ஒன்றாகும். இதன் 'சூப்பர் ஜம்போ' ரகங்கள் ஒரு கிலோகிராம் சுமார் 6 முதல் 6 புள்ளி 5 குவைத் தினார்கள் வரை விற்கப்படுகின்றன.

===========

"குவைத் மக்களைப் பொறுத்தவரை, பேரீச்சை மரத்தின் முக்கியத்துவம் அதன் பழத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அம்மரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு பயன்பாட்டைக் கொண்டிருக்கிறது. பேரீச்சை மரம் வீட்டில் ஒரு வரப்பிரசாதம். அதில் உள்ள அனைத்தும் பயன்படக்கூடியவை. பேரீச்சை மரம் முழுவதுமே நன்மை பயக்கக்கூடியது. அதிலிருந்து எதுவும் வீணாவதில்லை"

===========

மெட்ஜூல் போன்ற உயர்தர வகைகளைத் தரும் பேரீச்சை மரங்கள் விவசாயிகளுக்கு அதிக மதிப்புமிக்கவையாகவும் உள்ளன. ஆனால் பல குவைத் மக்களைப் பொறுத்தவரை, பேரீச்சம்பழங்கள் அவற்றின் தரம் அல்லது விலையைத் தாண்டி மதிக்கப்படுகின்றன. அவை விருந்தோம்பல் மற்றும் சமூகக் கூடல்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பெரும்பாலான குவைத்தியர்கள், குறிப்பாக திவானியாக்களுக்காக, பாதாம் மற்றும் உலர்ந்த பழங்கள் நிரப்பப்பட்ட மெட்ஜூல் பேரீச்சைகளை வாங்குகிறார்கள். 

இதற்கான தேவை உள்ளூர் வாடிக்கையாளர்களைத் தாண்டியும் பரவியுள்ளது. பல வெளிநாட்டவர்கள் பரிசுகளாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல பேரீச்சைகளை வாங்குகிறார்கள், மற்றவர்கள் மொத்தமாக வாங்குகிறார்கள். வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 20 முதல் 25 கிலோகிராம் வரை தனது கடையிலிருந்து எடுத்துச் செல்கிறார்கள். பேரீச்சைகளின் இந்த பிரபலம், குவைத்தைத் தாண்டியும் பரந்து விரிந்த ஒரு பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் இப்பகுதியின் முக்கியப் பயிராக இருந்த பேரீச்சை மரம், இன்று ஒரு உலகளாவிய தொழிலாக வளர்ந்துள்ளது. இதன் உலகளாவிய உற்பத்தி 1990-ல் 3 புள்ளி 4 மில்லியன் டன்களிலிருந்து 2021-ல் 9 புள்ளி 6 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.  இது 181 சதவிகித அதிகரிப்பாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: