தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மும்முரம்
முறைகேடுகளை தடுக்க வீட்டு ஸ்டிக்கர் சரிபார்ப்பு முறையை அமல்படுத்த வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
ஹைதராபாத், ஜுலை.11- தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது, முறைகேடுகளை தடுக்க வீடுகளில் ஸ்டிக்கர் சரிசாப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, தற்போது கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஜுலை மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின்போது பல்வேறு பிரச்சினைகளை வாக்காளர்கள் சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை :
இந்நிலையில், இந்த பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், முறைகேடுகளை தடுக்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தெலங்கானா இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் முகமது ஷகீல், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், வாக்குச்சாவடி அலுவலர்களின் பாரபட்சமான நடத்தை, தனியார் செயலிகள் மூலம் அரசியல் அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத தரவு சேகரிப்பு, மற்றும் வேண்டுமென்றே செய்யப்படும் எழுத்தர் பிழைகள் மூலம் வாக்காளர்களை திட்டமிட்டு நீக்குதல் போன்ற பரவலான குற்றச்சாட்டுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டு ஸ்டிக்கர் சரிபார்ப்பு முறை :
இத்தகைய முறைகேடுகள் அச்சம் மற்றும் குழப்பமான சூழலை உருவாக்கி, ஏழை மற்றும் நலிவடைந்தப்பிரிவு குடிமக்கள், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வீட்டு ஸ்டிக்கர் சரிபார்ப்பு முறையை உடனடியாகவும் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்றும் முகமது ஷகீல் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஸ்டிக்கர் முன்னெடுப்பு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே வாக்காளர் பட்டியில் திருத்தம் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், பொறுப்புக்கூறலுக்காக மாநிலம் முழுவதும் கடுமையான, சீரான செயலாக்கம் தேவைப்படுகிறது என்றும் இ.யூ.முஸ்லிம் லீக் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
முஸ்லிம் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல் :
இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது, அம்மாநிலத்தில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர் வாக்காளர்கள் அவசியம் பங்குகொண்டு, வாக்காளர் பட்டியில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா விடுத்துள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியில் ஒவ்வொரு வாக்காளர்களின் பெயர்களும் கட்டாயம் இடம்பெற காங்கிரஸ் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு மற்றும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகள், சதிகளின் மூலம் சிறுபான்மையினர் வாக்காளர்களின் உரிமையை பறிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக விமர்சனம் செய்துள்ள சித்தராமையா, எனவே முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருந்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment