" ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மனங்களை வென்ற இருவர் "
- ஜாவீத் -
நீட் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கராப்பான்பூச்சி ஜனதா கட்சி (காக்ரோச் ஜனதா பார்ட்டி) சார்பில் 35 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. மூன்று வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இணைந்தனர். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் மேற்கொண்ட பேரணியை காவல் துறை ஒடுக்கியது. போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக, ஜுலை மாதம் இறுதியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தில் மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த போராட்டம், நாட்டின் பிற மாநிலங்களிலும் எதிரொலித்தது. சமூக உணர்வுடன், அக்கறையுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முஸ்லிம் இளைஞர்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வழங்கினார்கள். இத்தயை சூழ்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், தங்களது அழகிய செயல்கள் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தார்கள்.
முஹம்மது ஜுனைத்தின் அழகிய செயல் :
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய பலரில், முஸ்லிம் இளைஞர் முஹம்மது ஜுனைத்தும் ஒருவரும் ஆவார். மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த அழகிய தியாகத்தை முஹம்மது ஜுனைத் செய்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் செய்த ஒரு நல்ல செயல், நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனைத்து தரப்பு மக்களும் முஹம்மது ஜுனைத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.
இப்படி தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற 35 நாட்களும், சேவை செய்த முஹம்மது ஜுனைத், போராட்டம் முடிவுக்கு வந்தபிறகு, சந்தித்த பிரச்சினைகள் கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தன. தன்னைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக உத்தரப் பிரதேச போலீஸார் காசியாபாத்தில் உள்ள தனது குடும்பத்தினரைத் தடுத்து வைத்து, அவர்களின் தனிப்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த போலீஸார், தனது தந்தையை அழைத்துச் சென்று பின்னர் அதே நாள் இரவு விடுவித்ததாக முஹம்மது ஜுனைத் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மறுநாள் காலையில் அதிகாரிகள் மீண்டும் வந்து தனது தந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோன்று, மீரட்டில் இருந்த தனது சகோதரியின் மாமனார் மற்றும் மைத்துனரை போலீஸார் தடுத்து வைத்து, காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மசூரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார். போலீஸார் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் வங்கிப் புத்தகங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளைப் பறிமுதல் செய்ததாகவும் ஜுனைத் செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஜுனைத்தை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்பதாக அதிகாரிகள் தனது குடும்பத்தினரிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். எந்தவொரு குற்ற வழக்கிலும் தான் தேடப்படும் நபர் அல்ல என்றும், தான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும் ஜுனைத் கூறினார்.
கோடைக்கால வெப்பத்தில் போராட்டக்காரர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதைக் கண்ட பிறகு, ஜூன் 6 அன்று தொடங்கிய ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தான் தொடர்ந்து ஈடுபட்டு சேவை செய்ததாக ஜுனைத் தெரிவித்தார். முதலில் தண்ணீர் விநியோகிக்கும் பணியைத் தொடங்கியதாகவும், பின்னர் தன்னார்வலர்கள் இணைந்து உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில் அந்த முயற்சியை விரிவுபடுத்தியதாகவும் அவர் கூறினார்.
தன்னார்வலரைக் குறிவைக்கும் போலீசார் :
உத்தரப் பிரதேச காவல்துறையின் இந்த நடவடிக்கையை விமர்சித்த காக்ரோச் ஜனதா பார்ட்டி, குற்றவாளிகளுக்குப் பதிலாக ஒரு தன்னார்வலரைக் குறிவைப்பதன் மூலம் உத்தரப் பிரதேச போலீஸார் தங்கள் நேரத்தை வீணடிப்பதாகக் கூறியது. சட்டவிரோதமான எந்தவொரு காவல் துறை நடவடிக்கையையும் எதிர்த்துச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது மேலும் தெரிவித்தது. இருப்பினும், ஜுனைதின் குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீரட் காவல் துறை மறுத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டது. அத்தகைய விவகாரம் எதுவும் என் கவனத்திற்கு வரவில்லை என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் பாண்டே செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அதேநேரத்தில் மீண்டும் மீண்டும் முயற்சித்த போதிலும், கருத்து கேட்பதற்காகக் காசியாபாத் காவல் துறையின் மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
யார் இந்த முகமது இர்பான்?
தனது அழகிய மனிதநேய செயல்கள் மூலம் உலகத்தின் கவனத்தை முஹம்மது ஜுனைத் ஈர்க்க, டெல்லியைச் சேர்ந்த கைவண்டி இழுக்கும் தொழிலாளியான மற்றொரு முஸ்லிம் இளைஞர் முகமது இர்பான், காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டங்களின் போது வெளிப்படுத்திய வலுவான கருத்துகளுக்காக இணையத்தில் வைரலாகியுள்ளார். பள்ளிக்குச் செல்லாத போதிலும், 'கூகுள் வாய்ஸ் சர்ச்' (Google Voice Search) மூலம் சுயமாகக் கற்றுக்கொள்ளும் அவர், தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியம், சுகாதாரம் மற்றும் சமத்துவமின்மை குறித்துப் பேசுகிறார். தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்றும், காந்திய அகிம்சை கொள்கையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறும் இர்பான், இந்தியாவின் தொழிலாளர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் ஒரு குரல் தனித்துத் தெரிந்தது. டெல்லியின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த கைவண்டி இழுக்கும் தொழிலாளியான முகமது இர்பான், சமூக ஊடகங்களில் வெளியான தனது நேர்காணல்கள் மூலம் வைரலாகியுள்ளார். அவர் ஏதேனும் அரசியல் கட்சியையோ அல்லது மாணவர் அமைப்பையோ சார்ந்தவர் என்பதற்காக அல்லாமல், சாமானிய மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த அவரது ஆழமான கருத்துகளுக்காகவே அவர் கவனம் ஈர்த்துள்ளார். தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் குறித்துப் பேசுவதற்காகத் தானாக முன்வந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக இர்பான் கூறுகிறார்.
கூகுள் மூலம் சுயமாகக் கற்றல் :
பள்ளிக்குச் சென்றதில்லை என்பதாலும், எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதாலும், தான் கற்றுக்கொள்வதற்கு ஒரு தனி வழியைக் கண்டறிந்துள்ளதாக இர்பான் குறிப்பிட்டார். தனது ஸ்மார்ட்போனில் உள்ள 'கூகுள் வாய்ஸ் சர்ச்' வசதியைப் பயன்படுத்தி, வரலாறு, அரசியல், இலக்கியம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த தகவல்களை அவர் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ஒரு கருத்தை உருவாக்கும் முன், பலமுறை தேடித் தகவல்களைச் சரிபார்ப்பதாக அவர் கூறுகிறார். போராட்டத்தின் போது, டெல்லியில் உள்ள தொழிலாளர்களின் நிலை குறித்து இர்பான் கவலை தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, அரசுப் பதிவுகளில் குறைந்தபட்ச மாத ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பல தொழிலாளர்கள் தினமும் 10 முதல் 11 மணி நேரம் வேலை செய்தும் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர். வேலையின்மை காரணமாகத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் நிலவுவதாக அவர் குற்றம் சாட்டினார். பெரிய வணிக நிறுவனங்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக, தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இர்பான் வாதிட்டார்.
நிதி நெருக்கடி மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை எதிர்கொண்டு வருவதாக இர்பான் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். பல ஏழை மக்களிடம் ஆயுஷ்மான் அட்டைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதே வேளையில், சிகிச்சை பெறுவதற்கான நடைமுறைகளில் பெரும்பாலும் நீண்ட ஆவணப் பணிகளும் ஒப்புதல் பெறும் கட்டாயமும் உள்ளதாகவும், இதனால் அவசர மருத்துவச் சூழல்களில் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகிம்சையில் நம்பிக்கை :
மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் அமைதியான போராட்ட முறைகள் மீதான நம்பிக்கையை இர்பான் வெளிப்படுத்துகிறார். அரசியலில் ஈடுபடுவதற்கோ அல்லது மக்கள் தலைவராக மாறுவதற்கோ தனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறுகிறார். மாறாக, தொழிலாளர்கள், குடிசைப்பகுதி வாசிகள் மற்றும் கிராமப்புறச் சமூகங்களின் அன்றாடப் போராட்டங்கள் மீது அதிகாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்; ஏனெனில், இவர்களின் குரல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் கருதுகிறார். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது, முஸ்லிம் இளைஞர்கள் முஹம்மது ஜுனைத் மற்றும் முகமது இர்பான் ஆகிய இரண்டு பேர் வெளிப்படுத்திய மனிதநேயம், இந்திய வரலாற்றில் யாராலும் என்றும் மறக்க முடியாது என்பது உறுதி.
=======================







No comments:
Post a Comment