நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்
வரும் 20ஆம் தேதிதொடக்கம்
டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து
எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு
புதுடெல்லி, ஜுலை.19- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
வரும் திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 19.07.2026 ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைத்து முக்கியக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் உட்பட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு :
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிருப்தி எம்.பி.க்கள் குழுவின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, ஜேஎம்எம், ஆம் ஆத்மி கட்சி, நேஷனல் கான்பரன்ஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளன. இதற்குக் காரணம், அங்கீகரிக்கப்படாத என்ற பிரிவின் கீழ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் பலம் 28 உறுப்பினர்கள் என்று நாடாளுமன்றச் செயலகம் வழங்கிய பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. 'கிளர்ச்சியாளர்கள்' என்று கூறப்படும் அந்த 20 எம்.பி.க்களின் இணைப்புக்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் 20-ம் இன்னும் நிலுவையில் உள்ளன. 91-வது சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, தனி அணியாகச் செயல்பட இடமில்லை. அப்படியிருக்க, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த 20 கிளர்ச்சி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் எப்படி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்? நாங்கள் எங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து, அதன் அடையாளமாக வெளிநடப்பு செய்துள்ளோம். மேலும், எங்கள் எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
=======================


No comments:
Post a Comment