உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கு
அறிவு, அறிவியல் மற்றும் மத விழுமியங்களின் பரிமாற்றத்திற்கு
இஸ்லாமிய நாடுகள் வழங்கும் முக்கிய பங்களிப்பு
முஸ்லிம் உலக லீக் பொதுச் செயலாளர்
ஷேக் முகமது அல்-இஸ்ஸா பெருமிதம்
தாஷ்கண்ட், ஜுலை.09- இஸ்லாமிய வரலாற்றில் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஆற்றிவரும் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது என்று முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது அல்-இஸ்ஸா பாராட்டு தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இஸ்லாமிய நாகரிகத்தின் விழுமியங்கள் குறித்த கருத்தரங்கு புதன்கிழமையன்று (08.07.2026) அன்று நடைபெற்றது. "இஸ்லாமிய நாகரிகம், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அறிவொளியின் பாதை" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது அல்-இஸ்ஸா, காணொளிக்கு காட்சி வாயிலாக உரையாற்றினார்.
உஸ்பெகிஸ்தானின் பங்கு :
அப்போது பேசிய அவர், இஸ்லாமிய வரலாற்றில் உஸ்பெகிஸ்தானின் பங்கை எடுத்துரைத்தார். குறிப்பாக, பண்டைய பட்டுப் பாதையில் அமைந்திருந்த சமர்கண்ட் மற்றும் புகாரா ஆகிய நகரங்கள் அறிவு, அறிவியல் மற்றும் மத விழுமியங்களின் பரிமாற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பை ஷேக் முகமது அல்-இஸ்ஸா சுட்டிக்காட்டினார்.
உஸ்பெகிஸ்தானின் மிகப்பெரிய கலாச்சார, அறிவியல் மற்றும் கல்வி வளாகமான 'இஸ்லாமிய நாகரிக மையம்' தாஷ்கண்டில் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டதை அல்-இஸ்ஸா குறிப்பிட்டார். மேலும், சமர்கண்ட் அருகே அமைந்துள்ள இமாம் அல்-புகாரி நினைவு வளாகம் குறித்தும் அவர் பேசினார். உஸ்பெகிஸ்தானில் பிறந்த இஸ்லாமிய அறிஞர்களான இமாம் அல்-புகாரி மற்றும் இமாம் அல்-திர்மிதி ஆகியோரின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், சட்ட அறிஞர் அல்-மத்துரிதியை கௌரவிக்கவும் இந்த வளாகம் செயல்பட்டு வருகிறது என்று அல்-இஸ்ஸா பெருமையாக கூறினார். .
இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு புத்துயிர் :
இத்திட்டங்கள் இஸ்லாமிய, அறிவுசார் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்குப் புத்துயிர் அளிப்பதாக அல்-இஸ்ஸா தெரிவித்தார். இதேபோன்று பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் அறிவு, அறிவியல் மற்றும் மத விழுமியங்களின் பரிமாற்றத்திற்கு இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய பங்கு ஆற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய உலக கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு' மற்றும் தாஷ்கண்டில் உள்ள இஸ்லாமிய நாகரிக மையம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கிற்கு, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் புரவலராக உள்ளார். வரும் சனிக்கிழமை வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment