மத்தியப் பிரதேச வக்பு வாரியம் மறுசீரமைப்பு
இரண்டு இந்து உறுப்பினர்களை நியமனம் செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவிப்பு
போபால், ஜுலை.07- மத்தியப் பிரதேச வக்ப் வாரியத்தில் இரண்டு இந்து உறுப்பினர்களைச் சேர்த்து மறுசீரமைப்பு செய்தது முறையற்றது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மேலும், அரசின் இந்த முடிவை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமையன்று மாநில வக்பு வாரியத்தை மறுசீரமைத்து, அதில் இரண்டு இந்து உறுப்பினர்களைச் சேர்த்தார். வக்பு திருத்தச் சட்டம், 2025-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த புதிய வாரியம், இந்து உறுப்பினர்களை நியமித்த நாட்டின் முதல் மாநில அளவிலான வக்பு வாரியம் ஆகும்.
10 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச வக்புவாரியத்தின் தலைவராக சன்வார் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் மல்பானி மற்றும் அனிமேஷ் பார்கவா ஆகியோர் இந்து உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். படேல் முதன்முதலில் 2023-ல் மத்தியப் பிரதேச வக்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு :
இந்நிலையில், மத்தியப் பிரதேச பாஜக அரசின் அறிவிப்கக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போபாலில் 06.07.2026 திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிஃப் மசூத், வக்பு சட்டம் தொடர்பான விவகாரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், அது குறித்த இறுதி முடிவு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை இத்தகைய நியமனங்களைச் செய்திருக்கக் கூடாது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், மத்தியப் பிரதேச அரசு வக்ப் வாரியத்தை மறுசீரமைத்து, அதில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்த்திருப்பது முறையற்றது. இது பல சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது. நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி, வக்ப் வாரியத்தின் உருவாக்கம் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று ஆரிஃப் மசூத் கூறினார்.
கவனத்தைத் திசைதிருப்பவே நடவடிக்கை :
இதேபோன்று, முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பி.சி. சர்மா, வக்பு வாரியத்தில் இந்து உறுப்பினர்களை நியமித்ததற்காக பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். ஆளும் கட்சிக்கு "இந்து-முஸ்லிம்" மற்றும் "இந்தியா-பாகிஸ்தான்" விவகாரங்களைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் மற்றும் முதல்வர் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பி.சி. சர்மா கூறினார்.
மத்தியப் பிரதேச மாநில அரசின் அறிவிப்பின்படி, 10 பேர் கொண்ட இந்த வக்பு வாரியத்தில் சன்வார் படேல், நஜ்மா ஹெப்துல்லா, ஆதிஃப் அகீல், ஃபைசான் கான், ஃபாத்திமா சவுத்ரி, ஷைஸ்தா சுல்தான், ஷபானா கான், மனோஜ் மல்பாணி மற்றும் அனிமேஷ் பார்கவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் ஆணையர் இக்குழுவின் பதவிவழி உறுப்பினராக உள்ளார்.
வக்பு வாரியம் என்பது மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்களை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். வக்ஃபு சொத்துக்களின் பதிவேடுகளைப் பராமரித்தல், அவற்றின் பயன்பாடு மற்றும் வருவாயைக் கண்காணித்தல், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளிலிருந்து அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மத, கல்வி மற்றும் சமூக நல நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை இதன் முக்கிய பணிகளாகும்.
இருப்பினும், ஆளும் பாஜக தலைவர்கள், வக்ப் வாரியம் என்பது மசூதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்பதால், இந்த முடிவை மதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்று கூறினர். சட்ட விதிகளுக்கு முழுமையாக உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வக்பு வாரியத் தலைவரும் தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment