" பெங்களூரு முஸ்லிம் நூலகம் "
- இந்திய முஸ்லிம் அறிவுசார் பாரம்பரியத்தின் மறக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் -
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சிவாஜிநகரின் குறுகிய சந்துகளில் மறைந்திருக்கும் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த, அதேசமயம் அதிகம் கவனிக்கப்படாத நிறுவனங்களில் ஒன்றாக 'பெங்களூரு முஸ்லிம் நூலகம்' இருந்து வருகிறது. கடந்த 1912-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி 'பெங்களூரு முஸ்லிம் நூலகம்' நிறுவப்பட்டது. கடைகளின் வரிசைக்கு மேலே அமைந்துள்ளதால் இந்த நூலகத்தை எளிதில் கவனிக்காமல் மக்கள் கடந்து சென்றுவிடக்கூடும். ஆனால் பெங்களூரு முஸ்லிம் நூலகத்தின் உள்ளே நுழைந்ததும், பரபரப்பான சந்தையின் இரைச்சல் மறைந்து அமைதி, கல்வி மற்றும் வரலாறு சார்ந்த சூழல் நம்மை வரவேற்கிறது.
அர்ப்பணிப்புடன் இயங்கும் நூலகம் :
அறிவுசார் விழிப்புணர்வு மற்றும் காலனித்துவ எதிர்ப்பு உணர்வு மேலோங்கியிருந்த காலகட்டத்தில், இந்திய முஸ்லிம்களிடையே உர்தூ மொழி, இலக்கியம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொலைநோக்கு பார்வை கொண்ட முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் சமூகத் தலைவர்களால் இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மிகச்சிறப்பான அம்சம் என்னவென்றால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அரசு மானியங்கள், அரசு சாரா அமைப்புகளின் (என்.ஜி.ஓ.) நிதி அல்லது வெளிநாட்டு நிதியுதவி ஏதுமின்றி, முழுக்க முழுக்க சமூகத்தின் ஆதரவு மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் இந்த நூலகம் இயங்கி வருகிறது.
தற்போது இந்த நூலகம் உர்தூ, பாரசீகம், அரபு, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பாதுகாத்து வருகிறது. அத்துடன் அரிய கையெழுத்துப் பிரதிகள், ஆரம்பகால உர்தூ இதழ்கள், ஹைதரி காலத்து ஆவணங்கள் மற்றும் புகழ்பெற்ற 'முன்ஷி நவல் கிஷோர் அச்சகத்தின்' (Munshi Nawal Kishore Press) மதிப்புமிக்க வெளியீடுகளையும் இந்த நூலகம் பொக்கிஷமாக கொண்டுள்ளது. இதன் விலைமதிப்பற்ற சேகரிப்புகளில் தக்ஷினி உர்தூ கையெழுத்துப் பிரதிகள், செவ்வியல் பாரசீகக் கவிதைகள், இஸ்லாமிய மருத்துவம் குறித்த அரிய நூல்கள் மற்றும் திப்பு சுல்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் ஆகியவை அடங்கும்.
இலக்கிய ஆளுமைகளின் பட்டியல் :
இந்த பெங்களூரு முஸ்லிம் நூலகத்தின் வருகையாளர் பதிவேடு இருபதாம் நூற்றாண்டின் முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளின் பட்டியலாகவே திகழ்கிறது. டாக்டர் முஹம்மது இக்பால், சையத் சுலைமான் நத்வி, மௌலானா அப்துல் ஹக் (பாபா-ஏ-உர்தூ), மௌலானா ஷௌகத் அலி, ஜோஷ் மலிஹாபாதி, ஜிகர் மொராதாபாதி, சீமாப் அக்பராபாதி, ஜஃபர் அலி கான் மற்றும் பல புகழ்பெற்ற அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் பொது ஆளுமைகள் இதன் அரங்குகளை அலங்கரித்துள்ளனர். 1929-இல் அல்லாமா இக்பால் பெங்களூருக்கு வருகை தந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நூலகம் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை ஏற்பாடு செய்து, அவருக்குப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கியது.
பெங்களூரு முஸ்லிம் நூலகம் என்பது வெறும் புத்தகங்களின் தொகுப்பு மட்டுமல்ல. இது இந்திய முஸ்லிம்களின் அறிவுசார், இலக்கிய மற்றும் கல்விசார் பாரம்பரியத்தின் ஒரு வாழும் சின்னமாகும். பல வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகங்கள் மறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஒரு நூற்றாண்டு பழமையான இந்த நிறுவனம் எதிர்கால சந்ததியினருக்காக ஒரு செழுமையான அறிவுசார் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. அல்லாஹ் இந்த விலைமதிப்பற்ற அறிவு மையத்தைப் பாதுகாப்பானதாக வைத்திருக்கவும், முஸ்லிம் உலகம் முழுவதும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கவும் அருள் புரிவ வேண்டும்.
பல பகுதிகளில் முஸ்லிம் நூலகங்கள் :
பெங்களூரு முஸ்லிம் நூலகத்தை போன்று நாட்டின் பல பகுதிகளில் இந்திய முஸ்லிம்களின் அறிவுசார், இலக்கிய மற்றும் கல்விசார் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பல முஸ்லிம் நூலகங்கள் இயங்கி வருகின்றன. நூற்றாண்டை தாண்டி இயங்கி வரும் இத்தகைய நூலகங்கள், முஸ்லிம் சமுதாய மக்கள் மத்தியில் இன்னும் கவனிக்கப்படாமல் இருந்து வருசின்றன என்பது தான் மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும். தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் முஸ்லிம் நூலகங்கள் இருந்தாலும், அந்த நூலகங்களின் மீது முஸ்லிம் மக்களின் பார்வை இன்னும் படாமல் இருந்து வருகிறது.
=============
"இந்திய முஸ்லிம்களிடையே உர்தூ மொழி, இலக்கியம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொலைநோக்கு பார்வை கொண்ட முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் சமூகத் தலைவர்களால் பெங்களூரு நூலகம் உருவாக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அரசு மானியங்கள், அரசு சாரா அமைப்புகளின் நிதி, வெளிநாட்டு நிதியுதவி ஏதுமின்றி, முழுக்க முழுக்க சமூகத்தின் ஆதரவு மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் இந்த நூலகம் இயங்கி வருகிறது"
=============
வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் நல்ல எண்ணத்துடன் அறிஞர் பெருமக்கள் உருவாக்கிய நூலகங்கள் இன்று சிதைந்துவிட்டன. பல நூலகங்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வணிக சந்தைகளாக மாறிவிட்டன. இதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகங்கள் பல மறைந்துவிட்டன. இதற்கு முக்கிய காரணம் வாசிப்பின் முக்கியத்துவத்தை சமுதாயம் சரியாக அறிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ளாமல் இருப்பதாகும்.
நூல் வாசிப்பின் முக்கியத்துவம் :
நூல் வாசிப்பு என்பது மனிதனின் அறிவை விரிவாக்கி, சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் ஒரு அரிய பழக்கம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, புதிய சொற்களஞ்சியத்தை வளர்த்து, மொழித் திறனை மேம்படுத்துவதோடு, பச்சாதாபம் மற்றும் உணர்வுப்பூர்வமான புரிதலையும் அதிகரிக்கிறது.பல்வேறு நூல்களை வாசிப்பதன் மூலம் உலகளாவிய தகவல்கள், கலாச்சாரங்கள் மற்றும் புதிய கருத்துக்களை எளிதாக அறிய முடியும். ஒரு நல்ல புத்தகம் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. இது அன்றாட கவலைகளை மறக்கச் செய்து, சிறந்த மன அழுத்த நிவாரணியாகச் செயல்படுகிறது.
வாசிப்பு நமது கற்பனை வளத்தைத் தூண்டி, பகுப்பாய்வு செய்யும் திறனையும், சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றலையும் உருவாக்குகிறது. புதிய வார்த்தைகளை அறிந்துகொள்வது எழுதும் மற்றும் பேசும் திறனை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்க்கும். வாசிப்புப் பழக்கத்தை நமது அன்றாட வாழ்க்கையில் கொண்டுவருவது வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றலுக்கு அடித்தளமாக அமைகிறது. இதனை இன்றைய இளைய சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். வேகமான நவீன விஞ்ஞானத்தின் பலன்களை சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளையில், நூல் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொண்டு, அதில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதை குறைத்துக்கொண்டு, நல்ல நூல்களின் மீது தங்களது கவனதை முஸ்லிம் இளைஞர்கள் திருப்ப வேண்டும்.
கடைசியாக, நாட்டின் பல பகுதிகளில் கவனிக்கப்படாமல் இருக்கும் முஸ்லிம் நூலகங்களை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சமுதாயம் முன்வர வேண்டும். நூல் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் நூலகங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அவற்றை பாதுகாக்க சமுதாயம் உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். அதன்மூலம், அரிய நூலகங்களில் உள்ள லட்சக்கணக்கான நூல்கள் பாதுகாப்படும் என்பது உறுதி.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment