சர்வதேச புனித குர்ஆன் விருதுக்கான 29வது பதிப்பு அறிவிப்பு
பரிசு தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடி வழங்கப்படும்
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உறுதி
துபாய், ஜுலை.08- சர்வதேச புனித குர்ஆன் விருதுக்கான 3 புள்ளி 3 மில்லியன் டாலர் பரிசுகளை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடி) வழங்கப்படும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
துபாய் அரசாங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க குர்ஆன் போட்டிகளில் ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள சிறந்த குர்ஆன் மனப்பாடம் செய்யும் ஹாபிஸ் மற்றும் இனிமையாக ஓதுபவர்களைக் கண்டறிந்து கௌரவிப்பது இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும். குர்ஆன் ஓதுதல் பிரிவில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் வெற்றியாளர்களுக்கு பல கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது.
துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு :
இந்நிலையில், திருக்குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களைக் கௌரவிக்கும் உலகின் மிகப்பெரிய விருதான 'துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது'-இன் 29-வது பதிப்பைத் தொடங்குவதாக துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் 07.07.2026 செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். இவ்விருதுப் போட்டியின் முந்தைய பதிப்பில் 105 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 618 ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு, பரிசுத் தொகையாக 3 புள்ளி 3 மில்லியன் டாலர்கள் (12 மில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகம், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, 123 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 826 போட்டியாளர்கள் குர்ஆன் விருதுப் போட்டிகளின் 28 பதிப்புகளில் பங்கேற்றுள்ளனர். முதல் பதிப்பிலிருந்து இதுவரை 67 மில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 'உலகளாவிய குர்ஆன் ஆளுமை விருது' (Global Quranic Personality Award) மூலம் 24 தனிநபர்களும் மூன்று நிறுவனங்களும் கௌரவிக்கப்பட்டுள்ளன.
ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உறுதி :
இந்த விருது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மத்தூம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதில், "இறைவனின் வார்த்தைகள் ஒளியாகவும், வழிகாட்டுதலாகவும், அருளாகவும் திகழ்கின்றன. 29 ஆண்டுகளாக நாங்கள் குர்ஆனை மனப்பாடம் செய்தவர்களைக் கௌரவித்து வருகிறோம். இறைவனின் அருளால், இந்தப் பாதையிலும் பயணத்திலும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். மேலும், இந்த ஆண்டுக்கான விருது வென்றவர்கள் 2027-ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் கௌரவிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "உலகிலேயே மிக அழகான குர்ஆன் ஓதும் குரல்களை நாங்கள் தேடுகிறோம். அவர்களைக் கௌரவிக்கவும். அவர்களுக்குப் பின்னால் நின்று தொழவும் விரும்புகிறோம்" என்றும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
மூன்று பிரிவுகள் :
சர்வதேச அளவில் பங்கேற்பை விரிவுபடுத்தும் விருதுக்கான உத்தியை மேம்படுத்தும் வகையில், 29-வது பதிப்பில் புதிய தரமான மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டுப் பதிப்பில் விருதுக்கான பிரிவுகள் மற்றும் தகுதி வரம்புகளில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதல் பிரிவு: துபாய் சர்வதேச குர்ஆன் விருது - ஆண்கள் பிரிவு (16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் - வயது வரம்பு இல்லை) இரண்டாம் பிரிவு: துபாய் சர்வதேச குர்ஆன் விருது - ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு (16 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள்) மூன்றாம் பிரிவு: உலகளாவிய குர்ஆன் ஆளுமை (Global Quranic Personality)
முதல் பிரிவில் பங்கேற்க குர்ஆன் ஓதுதல் மற்றும் 'தஜ்வீத்' விதிகளுக்கு உட்பட்டு, புனித குர்ஆனை முழுமையாகவும் மிகச்சிறப்பாகவும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். மே 31, 2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். போட்டியின் முந்தைய பதிப்புகளில் இறுதிச் சுற்றை எட்டியிருக்கவோ அல்லது கௌரவிக்கப்பட்டிருக்கவோ கூடாது. தங்கள் நாட்டின் பாரம்பரிய உடையை அணிய வேண்டும். நல்ல நடத்தையை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறைகள் மற்றும் பொது ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பரிசுத் தொகை அறிவிப்பு :
போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 1 மில்லியன் டாலரும் இரண்டாமிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் டாலரும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசுத் தொகை அளிக்கப்படும். இதேபோன்று இரண்டாம் பிரிவில் பங்கேற்க, பங்கேற்பாளர், ஓதுதல் மற்றும் 'தஜ்வீத்' விதிகளுக்கு உட்பட்டு, புனித குர்ஆனை முழுமையாகவும் மிகச்சிறப்பாகவும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். 16 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; ஜூன் 1, 2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். போட்டியின் முந்தைய பதிப்புகளில் இறுதிச் சுற்றை எட்டியிருக்கவோ அல்லது கௌரவிக்கப்பட்டிருக்கவோ கூடாது. தேர்வுக்கான குறிப்பிட்ட நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நல்ல நடத்தையை வெளிப்படுத்த வேண்டும்; அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறைகள் மற்றும் பொது ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 1 மில்லியன் டாலரும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ஒரு லட்சம் டாலரும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசு வழங்கப்படும்.
இந்த ஆண்டு புதிதாக என்ன இருக்கிறது?
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் ஊக்கமளிக்கும் அம்சங்களில், பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முயற்சியும் அடங்கும். இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெறும் சிறந்த போட்டியாளர்கள் துபாய்க்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள முக்கிய மஸ்ஜிதுகளில் 'தராவிஹ்' தொழுகையை வழிநடத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து, அப்போட்டியாளர்களில் உலகின் மிகச் சிறந்த குர்ஆன் ஓதுதல் திறனாளரைத் தேர்ந்தெடுக்கப் பொதுமக்களின் வாக்குப்பதிவு நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, போட்டியாளரின் சொந்த நாடு அல்லது அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மையம் மூலமான வழக்கமான பரிந்துரை நடைமுறையுடன், தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் இப்போட்டி வழங்குகிறது. இதன் மூலம், உலகம் முழுவதிலும் உள்ள குர்ஆன் திறமையாளர்களுக்கான பங்கேற்பு வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன; இது ஒரு முன்னணி உலகளாவிய தளமாக இப்போட்டி கொண்டுள்ள நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
பங்கேற்பது எப்படி?
போட்டியாளர்கள் www.quran.gov.ae என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, மின்னணு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தங்கள் கடவுச்சீட்டு மற்றும் தனிப்பட்ட புகைப்படத்தின் நகலைப் பதிவேற்றி, ஒரு காணொளியைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்







No comments:
Post a Comment