ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களில் மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்களை இடிக்கும் பாஜக அரசின் முயற்சி
அதிரடி தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
ஜமியத் உலமா இ ஹிந்த தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை
புதுடெல்லி, ஜுலை.19- ராஜஸ்தானின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்காள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள் மீது கண்வைத்துள்ள ஆட்சியாளர்கள், அங்குள்ள மஸ்ஜித்துகள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்களை இடிக்க முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது. பாஜக அரசின் இந்த முயற்சிக்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த முயற்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜமியத் உலமா இ ஹிந்த் வழக்கு :
இந்நிலையில் ராஜஸ்தான் ல்லை மாவட்டங்களில் மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்கள், வீடுகள் மற்றும் பிற கட்டுமானங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்துக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உட்பட மொத்தம் எட்டு மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்டு மனுதாரர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 'இன்ட்ரா-கோர்ட்' மேல்முறையீட்டை தாக்கல் செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டது.
மஸ்ஜித்துகளை இடிக்க இடைக்காலத் தடை :
எனினும், ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களில் மஸ்ஜித்துகள் இடிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு சொத்தையும் இடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதுடன், மனுதாரர்களை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை அணுகுமாறும் அறிவுறுத்தியது. மஸ்ஜித்துகள், மதரஸாக்கள், தர்காக்கள், வீடுகள் மற்றும் பிற கட்டுமானங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இடைக்கால நிவாரணம் அளிக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு எந்தவித இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"உயர்நீதிமன்றம் ரிட் மனு அல்லது ரிட் மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை, இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர்களுக்கு எதிராக எதிர்தரப்பினர் எவ்வித கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது. நாங்கள் இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்யவில்லை என்பதையும், வழக்கின் தகுதித்தன்மை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். மனுக்களை அவற்றின் தகுதித்தன்மையின் அடிப்படையில் பரிசீலிப்பது உயர்நீதிமன்றத்தின் பொறுப்பாகும்," என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வழக்கு விவரம் :
ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் மஸ்ஜித்துகள், கபர்ஸ்தான்கள் மற்றும் தர்காக்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்களைப் பாதிக்கும் வகையிலான இடிப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு ஜூலை 13 அன்று, தள்ளுபடி செய்திருந்தது. சர்வதேச எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து இந்த இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவிவகாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், மத ரீதியான பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இயற்கை நீதியின் கோட்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, பாதிக்கப்பட்ட வேறு சில தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்க மறுத்து, மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதுடன், அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கியது. மனுதாரர்கள் தங்கள் மனுவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ஹுசேஃபா அஹ்மதி ஆகியோர் ஆஜராகினர். உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா மஹமூத் அசாத் மதனி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தங்கள் அமைப்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மஸ்ஜித்துகள் இடிக்கப்படுவதை தடுக்க சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் மஹமூத் அசாத் மதனி உறுதிப்பட கூறியுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment