Saturday, July 18, 2026

தொகுதி மறுவரையறை விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை....!

 

தொகுதி மறுவரையறை விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை

அரசியலமைப்புச் சட்ட சமநிலையை மாற்றியமைக்கு பாஜக அரசின்

முயற்சியை இந்தியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டம்

 

புதுடெல்லி, ஜுலை.19- தொகுதி மறுவரையறை என்பது இந்தியா கூட்டணியின் பிரச்சினை மட்டுமல்ல, அது நமது இந்திய அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்போடு தொடர்புடையது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் 20.07.2026 திங்கட்கிழமையன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதனால் தேசிய அரசியல் சூழல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கே.சி. வேணுகோபால் உறுதி :

இந்த சூழ்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தொகுதி மறுவரையறை என்பது காங்கிரஸின் பிரச்சினையோ அல்லது இந்தியா கூட்டணியின் பிரச்சினையோ மட்டுமல்ல. இது ஒரு தேசியப் பிரச்சினை. ஏனெனில் இது இந்தியாவின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்போடு தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "கூட்டாட்சித் தத்துவத்தையும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்ட சமநிலையை மாற்றியமைக்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் அடிப்படையில் எதிர்க்கிறோம்" என்று கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார். அத்துடன், மாநில நலனில் அக்கறை கொண்டு, உறுதியாக செயல்படும் திமுக கூட, தொகுதி மறுவரையறை மசோதாவை உறுதியாக எதிர்க்கும் என்று தாங்கள் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் அவர் தேரிவித்துள்ளார்.

முக்கிய பிரச்சினைகள் :

இதேபோன்று, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்ட (131-வது திருத்த) மசோதாவை பாஜக முன்னெடுப்பது, எதிர்க்கட்சிகளின் பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகளால் தேர்வுகள் மீதான நம்பிக்கையை மாணவர்கள் இழப்பது, எரிபொருளில் எத்தனால் கலப்பது குறித்து வாகன உரிமையாளர்கள் மத்தியில் நிலவும் கவலைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள கே.சி. வேணுகோபால், மக்கள் நலனுக்கு எதிரான எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக எதிர்க்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

============================

 

No comments: