Sunday, July 19, 2026

வந்தே மாதரம் - பொதுப் பள்ளி முறைக்கான மாநிலக் கூட்டமைப்பு வேண்டுகோள்...!

வந்தே மாதரம் முழுப் பதிப்பை தேசியப் பாடலாக ஆக்க ஆதரவு அளிக்கக் கூடாது

ஒன்றிய பாஜக அரசின் மசோதாவை நிராகரிக்க வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுப் பள்ளி முறைக்கான 

மாநிலக் கூட்டமைப்பு  வேண்டுகோள்


சென்னை, ஜுலை.20- வந்தே மாதரம் முழுப் பதிப்பை தேசியப் பாடலாக ஆக்க ஆதரவு அளிக்கக் கூடாது என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுப் பள்ளி முறைக்கான மாநிலக் கூட்டமைப்பு - தமிழ்நாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜுலை 20ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், வந்தே மாதரம் தொடர்பாக  'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026'-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. வந்தே மாதரத்தை அவமதிப்பதை ஒரு குற்றச் செயலாக ஆக்குவதற்கான மசோதாவை அரசு ஜுலை 20ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் :

இந்நிலையில், இந்த மசோதா அறிமுகப்படுத்துவதை எதிர்த்து, இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுப் பள்ளி முறைக்கான மாநிலக் கூட்டமைப்பு - தமிழ்நாடு  வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனந்தமட் நாவலில் இடம்பெற்றுள்ள வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை இந்தியாவின் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வதற்கான ஒரு சட்ட நடவடிக்கையாகவே இம்மசோதா அமைந்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளது.  மேலும், வந்தே மாதரம் (இதன் பொருள்: 'தாய்நாட்டை வணங்குகிறேன்') என்ற முழக்கம் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆனந்தமட் நாவலில் உள்ள முழுப் பாடலும் அப்போராட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்நாவலில் இடம்பெற்றுள்ள வந்தே மாதரம் பாடல், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைச் சார்ந்த தெய்வத்தையே இந்நாடாகச் சித்தரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரின்ஸ் கஜேந்திர பாபு விளக்கம் :

மேலும், பொதுப் பள்ளி முறைக்கான மாநிலக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ள விளக்கம் ஒன்றில்,  இந்திய அரசியலமைப்பின் 1-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நாட்டின் பெயர், வந்தே மாதரம் பாடலின் எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.  'இந்தியா' அல்லது 'பாரத்' என்பதே நமது தாய்நாட்டின் பெயர்களாகும் என்றும், ஆனால், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள பாடலில், இவ்விரு பெயர்களில் எதுவுமே இடம்பெறவில்லை என்றும் கஜேந்திர பாபு சுட்டிக் காட்டியுள்ளார். 

==========================

No comments: