Tuesday, July 7, 2026

பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்து நகரம்...!

" மேற்குப் பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்து  நகரம் "

 - எகிப்து அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை -

உலகம் முழுவதும்  பல்வேறு  நாடுகளில் அகழாய்வு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வு என்பது பண்டைய மனித நாகரிகங்களின் எச்சங்களை மண்ணில் இருந்து கவனமாக தோண்டி எடுத்து, ஆவணப்படுத்தி ஆய்வு செய்யும் முறையாகும். தொல்பொருட்கள், கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் மூலம் மனிதனின் பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய புதிய உண்மைகளை அறிய இது உதவுகிறது

இந்நிலையில், எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்தை நகரம் ஒன்றை அந்நாட்டு அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  கடந்த ஜுலை 4ஆம் தேதி சனிக்கிழமையன்று எகிப்து அறிவித்த இரண்டு முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளில், மேற்குப் பாலைவனத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட பைசண்டைன் காலத்து குடியிருப்பு நகரமும் ஒன்றாகும்.

டாக்லா சோலை மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகிலுள்ள மரினா எல்-அலமீன் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள், நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் துறையை (இது தொல்பொருள் சின்னங்களைப் பார்வையிடுவதை பெரிதும் நம்பியுள்ளது) மேம்படுத்தும் என்று எகிப்திய அரசு நம்புகிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயைப் போலவே, நிதி நெருக்கடியில் உள்ள இந்நாட்டிற்குச் சுற்றுலாவும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.

எகிப்து பைசண்டைன் பேரரசு :

எகிப்து பைசண்டைன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த நான்காம் நூற்றாண்டில், டாக்லா சோலைப்பகுதியில் நிலவிய அன்றாட வாழ்க்கை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்துவதாக எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கண்டறியப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வடக்கு-தெற்குப் பாதைகளை கிழக்கு-மேற்கு வீதிகள் குறுக்கிட்டுச் செல்லும் அமைப்பு காணப்படுகிறது. இது திறந்தவெளி சதுக்கங்களையும் பொது இடங்களையும் உருவாக்குகிறது என்று தொல்பொருள் சின்னங்களுக்கான உச்ச சபையின் பொதுச் செயலாளர் ஹிஷாம் எல்-லீதி தெரிவித்தார்.

நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த ஒரு 'பசிலிக்கா' தேவாலயம் இந்த குடியிருப்பின் முக்கிய வீதிகளை நோக்கியவாறு அதன் முகப்பில் அமைந்துள்ளது. அத்துடன் புறப்பகுதிகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இரண்டு கண்காணிப்பு கோபுரங்களின் எச்சங்களும் அங்கு காணப்படுகின்றன என்று தொல்பொருள் ஆய்வுக் குழுவின் தலைவர் மஹ்மூத் மசூத் கூறினார்.

பாலைவனத்தில் ஒரு சோலைப்பகுதி :

எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் உள்ள 'நியூ வேலி' மாகாணத்தில் அமைந்துள்ள இந்தச் சோலைப்பகுதி, யுனெஸ்கோவின் 'உலக பாரம்பரியப் பட்டியலில்' இணைக்கப்படுவதற்கு முந்தைய நிலையான 'தற்காலிகப் பட்டியலில்' இடம்பெற்றுள்ளது.

தடிமனான பாதுகாப்புச் சுவர்களுடன் கூடிய பலமான கட்டமைப்பு மற்றும் வரவேற்பு அறைகள், வளைவு வடிவ கூரைகள்கொண்ட பல வீடுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டதாக தொல்பொருள் ஆய்வுக் குழுவின் தலைவர் மஹ்மூத் மசூத் தெரிவித்தார். 

அவற்றில் 'டிசஸ்'  என்பவரின் வீடும் அடங்கும். இவர் தேவாலயத்தின் திருத்தொண்டராக இருந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இந்த வீடு, நகரின் பசிலிக்கா தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு 'வீட்டுத் தேவாலயமாக'  செயல்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ரொட்டி சுடும் அடுப்புகள், சமையலறைகள் மற்றும் கல் அரைக்கும் கருவிகளையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 

பைசண்டைன் பேரரசர்களின் உருவங்கள் :

மேலும், பைசண்டைன் பேரரசர்களின் உருவங்கள், லத்தீன் கல்வெட்டுகள் மற்றும் கிறிஸ்தவ சின்னங்கள் பொறிக்கப்பட்ட நன்கு பாதுகாக்கப்பட்ட வெண்கல நாணயங்களும், ரோமானியப் பேரரசர் கான்ஸ்டான்டியஸ் II-ன் (கி.பி. 337 முதல் 361 வரை ஆட்சி செய்தவர்) காலத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களின் தொகுப்பும் கண்டறியப்பட்டதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்லாமிய, காப்டிக் மற்றும் யூத தொல்பொருள் துறையின் தலைவர் டியா ஜஹ்ரான், எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய சுமார் 200 மட்பாண்டத் துண்டுகளைத் தாங்கள் கண்டெடுத்ததாக தெரிவித்தார். 

'ஓஸ்ட்ராகா' என்று அழைக்கப்படும் இத்துண்டுகளில் வணிகப் பரிவர்த்தனைகள், கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற விவரங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

======================

"எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் மறைந்திருந்த பைசண்டைன் காலத்தை நகரம் ஒன்றை அந்நாட்டு அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  டாக்லா சோலை மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகிலுள்ள மரினா எல்-அலமீன் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகள், நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்று எகிப்திய அரசு நம்புகிறது"

======================

இதற்கிடையில், மத்திய தரைக்கடல் நகரமான அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள 'மரினா எல்-அலமீன்'  தொல்பொருள் தளத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 18 பழங்கால கல்லறைகளைக் கண்டறிந்துள்ளனர். கண்டறியப்பட்டவற்றில் சராசரியாக 8 மீட்டர் ஆழம் கொண்ட பாறையில் செதுக்கப்பட்ட 11 கல்லறைகளும், சுண்ணாம்புக்கல்லால் மேற்பரப்பில் கட்டப்பட்ட ஏழு கல்லறைகளும் அடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மொத்த கல்லறைகளின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.

அரியப் பொருட்கள் கண்டெடுப்பு :

இங்கு மட்பாண்டங்கள், ஆம்போராக்கள் (நீண்ட கழுத்து கொண்ட ஜாடிகள்), விளக்குகள், தட்டுகள், பலிபீடங்கள் மற்றும் சுண்ணாம்புக்கல் தொட்டிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. ஆய்வுக் குழுவின் தலைவர் எமான் அப்தெல்-காலிக் கூறுகையில், 2 புள்ளி 5 மீட்டர் நீளமுள்ள கிரானைட் கல் சவப்பெட்டி ஒன்றையும், அதனுள் எலும்புக்கூட்டு எச்சங்களையும் கண்டெடுத்ததாகவும், அவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அந்தச் சவப்பெட்டிக்கு அருகில், பிளாஸ்டரால் செய்யப்பட்ட 'ஸ்பிங்க்ஸ்'  சிலையின் எச்சங்களையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இறந்தவர்களின் வாயில் வைக்கப்பட்டிருந்த 4 தங்கத் துண்டுகளையும் தாங்கள் கண்டெடுத்ததாக அவர்கள் கூறினர். இவை "தங்க நாக்கு" என்று அழைக்கப்படுகின்றன. அக்காலகட்டத்தின் இறுதிச் சடங்கு நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு வழக்கமாக இது இருந்தது.

'மரினா எல்-அலமீன்' என்பது எகிப்தின் வடக்குக் கடற்கரையில் உள்ள அலமீன் நகருக்கு அருகிலுள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். 1986-இல் கண்டறியப்பட்ட இத்தளம், மத்திய தரைக்கடலில் அமைந்திருந்த 'லுகாஸ்பிஸ்' என்ற பழங்கால கிரேக்க-ரோமானியத் துறைமுக நகரமாக இருந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, நான்காம் நூற்றாண்டு வரை செழித்து விளங்கியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 எகிப்தின் சுற்றுலாத்துறை :

பல ஆண்டுகால அரசியல் கொந்தளிப்பு, வன்முறை மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு எகிப்தின் சுற்றுலாத்துறை தற்போது மீளத் தொடங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு சாதனை அளவாக 19 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எகிப்தைப் பார்வையிட்டனர். இது முந்தைய ஆண்டை விட 21 சதவீத வளர்ச்சியாகும். 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5 புள்ளி 7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 6 புள்ளி 1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால் எகிப்து சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொருளாதார ரீதியாக பலன்கள் கிடைத்து வருகின்றன. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: