திருச்சியில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சுதந்திர போராட்ட வீரர் மௌலவி சையத் முர்துசாவின் அடக்கஸ்தலம்
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கவலை
சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளருமான மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் திருச்சியில் உள்ள அடக்கஸ்தலம் (சமாதி) சிதிலமடைந்த நிலையில் இருப்பது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஜாஃபர் ஷா தெருவில் உள்ள ஷம்ஸ் பீரன் மஸ்ஜித்துக்கு எதிரே, மகாத்மா காந்தியின் 1921-ஆம் ஆண்டு திருச்சி வருகையை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றிய தீவிர தேசபக்தரான மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் இறுதி ஓய்விடம் ஒரு ஃபிளக்ஸ் பலகை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு ஆஸ்பெஸ்டாஸ் தகடு, மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் சமாதியை சமூக விரோத சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, அந்த பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்கள் தங்களது வணிகத்தை வழக்கம்போல் செய்துகொண்டே இருக்கின்றன. இதனால் சாலையோரக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்துள்ள இடமாக அந்த பகுதி காட்சி அளிக்கிறது.
தியாக வரலாறு :
சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளருமான மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் தியாக வரலாற்றை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். சென்னை மாகாணத்தின் (மேலவை உறுப்பினராக) எம்.எல்.சி. ஆக 1912 இருந்த அவர், பின்னர் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு 24 ஆண்டுகள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதுபோன்ற பல தகவல்கள் மஸ்ஹர் அருகே வைக்கப்பட்டுள்ள பலகையில் வழிப்போக்கர்களின் தகவலுக்காக விவரமாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அன்றைய பிரிட்டிஷ் அரசு 1919ஆம் ஆண்டு கொண்டு வந்த ரௌலட் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் மிகப்பெரிய அளவுக்கு போராட்டம் நடத்திய பெருமை மௌலவி சையத் முர்துசா சாஹிப்பிற்கு உண்டு. பின்னர் இந்த போராட்டம் தேசிய இயக்கமாக மாற வழி வகுத்தது என்பது வரலாறாகும்.
கிலாபத் இயக்கத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட பெருமையும் சையத் முர்துசா சாஹிப்பிற்கு உண்டு. 1938ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன், அகில இந்திய வானொலி தெற்கு இந்திய ரயில்வே ஆகியவற்றின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் மௌலவி சையத் முர்துசா சாஹிப் சிறப்பாக சேவை ஆற்றியுள்ளார்.
அரபு மற்றும் பார்ஸி கலை வல்லுநர் :
நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சையத் முர்துசா சாஹிப் அவர்கள், அரபு மற்றும் பார்ஸி மொழிகளில் நன்கு புலமைப் பெற்று திகழ்ந்து இருந்தார். மேலும், இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதுடன், திருச்சியில் அரசு இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளி உருவாக்க முக்கிய காரணமாகவும் இருந்துள்ளார்.
========================
"கிலாபத் இயக்கத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட பெருமையும் சையத் முர்துசா சாஹிப்பிற்கு உண்டு. 1938ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்"
========================
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்டு, நாட்டின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்ட மௌலவி சையத் முர்துசா சாஹிப், மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டபோது திடீரென இடுப்பு எலும்பு இடப்பெயர்ச்சி ஏற்பட்டதால் கீழே விழுந்து பாதிக்கப்பட்டு, பின்னர் தனது 99வது வயதில் 1949ஆம் ஆண்டு, நவம்பர் 6ஆம் தேதி காலமானார்.
மஸ்ஹர் பராமரிப்பு :
மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் மஸ்ஹரை (அடக்கஸ்தலத்தை) அவரது குடும்ப வம்சாவளியினர் பராமரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மௌலவியின் மஸ்ஹர் இருக்கும் நிலப்பகுதி அவரது குடும்ப வம்சாவளியினருக்கு சொந்தமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய திருச்சி முஸ்லிம்களில் மௌலவி சையத் முர்துசா சாஹிப், மிகவும் முன்னணி வீரர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன்மூலம் சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர் முக்கிய இடத்தை பிடித்து இன்றும் நின்றுகொண்டிருக்கிறார். எனவே, தமிழ்நாடு அரசு மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் சமாதியை பாதுகாத்து சரியான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் இலக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சையத் ஜபார் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ்
தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






