" பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய முஸ்லிம் நீதிபதி தபஸ்ஸும் கான் "
- மத ரீதியாக தாக்குதல் நடத்தும் இந்துத்துவ அமைப்புகள் -
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
இந்தியாவின் வடமாநிலங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடைபெறும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று இருந்தாலும், அவற்றை தடுத்து நிறுத்த எந்தவித முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கிராமங்களைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் விவசாயிகள் கடும் பாதிப்பு அடையும் நிலை உருவாகியுள்ளது. கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியதற்காக மத்தியப் பிரதேச முஸ்லிம் நீதிபதி ஒருவர் மத ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த ஜுன் மாதத் தொடக்கத்தில், நர்மதாபுரம் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான தபஸ்ஸும் கான், 2022-ல் ஷேக் லாலா நசீர் அகமது என்ற லாரி ஓட்டுநரை பசு கடத்தல் சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று, குற்றவாளிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகளைச் சிறைக்கு அழைத்துச் செல்ல முயன்ற காவல் வாகனத்தைத் தடுக்கவும் முயன்றனர்.
மத ரீதியான விமர்சனங்கள் :
இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, நீதிபதி தபஸ்ஸும் கானின் முஸ்லிம் மத அடையாளத்தை மையமாகக் கொண்டு அவரை இலக்காகக் கொண்ட பல காணொளிகளும் பதிவுகளும் இணையத்தில் வெளியாகின. நீதிபதி தபஸ்ஸும் கானுக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட மத ரீதியான இணையப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, சியோனி மால்வா காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக பி.என்.எஸ்.யின் பிரிவு 302 மற்றும் 196-ன் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
நீதிபதி தபஸ்ஸும் கானுக்கு எதிராக 'எக்ஸ்' வலைத்தளத்தில் ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. இதன் மூலம் யார் என்று தெரியவில்லை என்றாலும், அதில் குஜராத்தைச் சேர்ந்த விஷால் சிங் என்று கூறப்படும் நபர் ஒருவர், தண்டனை பெற்றவர்களை 10 நாட்களுக்குள் விடுவிக்கக் கோரி, நீதிபதியை மிரட்டுவதும் மத ரீதியான அவதூறு வார்த்தைகளைப் பேசுவதும் காணப்படுகிறது. இதேபோன்று, மற்றொரு காணொளியில், பஞ்சாபின் மொஹாலியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் பலர், நீதிபதியின் உருவ பொம்மையை எரித்து, குற்றவாளிகளை விடுவிக்கக் கோருவது பதிவாகியுள்ளது.
இந்து நேஷன் என்ற ட்விட்டர் கணக்கு வெளியிட்ட பதிவில் "நீதிபதி தபஸ்ஸும் கான் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கண்ணியமிக்க நீதிமன்றத்தின் விதிகளைப் புறக்கணித்து, உள்நோக்கத்துடன் பாரபட்சம் காட்டி, பசுப் பாதுகாவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளார். பொதுமக்களிடம் பாரபட்சம் காட்டியும் நீதித்துறையின் விதிகளை மீறியும் செயல்பட்ட நீதிபதி தபஸ்ஸும் கானை இடைநீக்கம் செய்யுமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் மக்களுக்கு நீதி கிடைப்பதோடு, பசுவைக் காப்பாற்றிய அனைத்து பசுப் பாதுகாவலர்களும் விடுவிக்கப்பட்டு மீண்டும் பசுக்களுக்குச் சேவை செய்ய வழிவகுக்கப்படும். மேலும், மதச் சார்புடையவர் என்று கூறப்படும் இந்த நீதிபதியின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தீர்ப்புகளும் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் கண்டனம் :
குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி 'கோ-ரக்ஷக்' (பசுப் பாதுகாப்பு) அமைப்பினர் ஊர்வலம் சென்றதை மற்றொரு காணொளி காட்டியது. நீதிபதி மத அடிப்படையில் தீர்ப்பளிப்பதாகக் குற்றம் சாட்டி, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் பயனர் ஒருவரால் இந்தக் காணொளி பகிரப்பட்டது. பசுப் பாதுகாப்பு என்பது குற்றம் அல்ல என்று அந்தப் பயனர் வாதிட்டார். ஒரு நீதித்துறை அதிகாரிக்கு எதிரான இந்த இணையவழித் துன்புறுத்தலைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படாததை, சியோனி மால்வா பிராந்தியத்தில் பயிற்சி பெறும் வழக்கறிஞர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கண்டித்து வருகின்றனர்.
முஸ்லிம் நீதிபதியை குறிவைக்கும் காணொளிக்கு எதிர்வினையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான பவன் கேரா, "குற்றவாளிகள் அனைவரும் இந்து ஆண்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக தண்டிக்கப்படவில்லை. கலவரம், கொலை முயற்சி மற்றும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானதாலேயே தண்டிக்கப்பட்டனர். இருப்பினும், காணொளியில் உள்ள நமது இந்து சகோதரர் அவர்களின் நடத்தையைக் கண்டு கொதிப்படையவில்லை. அவருக்குக் கோபத்தை ஏற்படுத்துவது ஒரே ஒரு விஷயம்தான்: அவர்களைத் தண்டித்த நீதிபதி ஒரு முஸ்லிம் பெண் என்பதுதான்," என்று கூறினார். நீதிபதிக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்புபவர்கள் மீது ஏன் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேரா கேள்வி எழுப்பினார்.
சட்டத்தை நிலைநாட்டிய முஸ்லிம் நீதிபதி :
நீதிபதிக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்த மூத்த வழக்கறிஞர் விவேக் தங்கா, "சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டத் துணிச்சலுடன் செயல்படும் நீதிபதிகளைப் பாராட்டிப் பாதுகாப்பதற்கான நேரம் இது. குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் விஷயத்தில் இது மிகவும் அவசியம்," என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் மௌனம் அதிர்ச்சியளிப்பதாக வழக்கறிஞர் விவேக் தங்கா மேலும் குறிப்பிட்டார்.
சம்பவத்தின் பின்னணி :
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் நர்தார்வாடாவிலிருந்து மகாராஷ்டிராவை நோக்கி கால்நடைகளை ஏற்றிச் சென்றபோது, சியோனி மால்வாவில் உள்ள பரகண்ட் கிராமத்திற்கு அருகே வழிமறிக்கப்பட்டனர். கிராமவாசிகள் அடங்கிய கும்பல் ஒன்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, கம்புகள் மற்றும் மரக்கட்டைகளால் அந்த மனிதர்களைக் கடுமையாகத் தாக்கியது. இதில் நசீர் அகமது காயங்களால் உயிரிழந்தார், அவரது கூட்டாளியான ஷேக் முஷ்டாக் காயமடைந்தார்.
இந்த சம்பவம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி, தண்டனை வழங்கிய முஸ்லிம் பெண் நீதிபதி தபஸ்ஸும் கானை இந்துத்துவ அமைப்புகள் மத ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக நலனில் அக்கறை கொண்ட, வழக்கறிஞர்கள் நாடு எந்த திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன என வேதனை தெரிவித்துள்ளனர்.
====================





No comments:
Post a Comment