Friday, March 6, 2015

தொப்பி....!

தொப்பி....!



இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர் எஸ்.ஆர்.கே. (செந்தில் ராஜ்குமார் சன் தொலைக்காட்சி) அன்பைப் பொழிந்து மகிழ்ச்சியுடன் அளித்த வெள்ளை நிற தொப்பியை அணிந்து கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

கொள்கை கோட்பாடுகளில் நாம் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையான அன்பு மனித நேயம் மகிழ்ச்சி ஆகியவற்றை செலுத்துவதில் பரிமாற்றிக் கொள்வதில் நிஜ மனிதர்களாக இருந்து வருகிறோம்.

நம்மை போன்றவர்கள் நாட்டில் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

மூன்று பேர்...!

மூன்று பேர்...!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த சம்பவம் இது.

நீண்ட தாடி வைத்துக் கொண்டிருந்த இஸ்லாமியவர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கீழே தள்ளி நையப்புடைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு இஸ்லாமியனைப் பார்த்து எப்படிடா அந்த வார்த்தை கூறலாம் என கூறிக்கொண்டு மேலும் மேலும் அடித்து கொண்டிருந்தார்.

பிரச்சினை அவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு என்பது புரிந்தது.

ஆனால் அடித்துக் கொண்டிருந்த இஸ்லாமியரோ துணைக்கு இஸ்லாத்தையும் அழைத்துக் கொண்டார்.

மற்றொரு சம்பவம்.

ஒரு நாள் மாநகர பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூடவே மற்றொரு இஸ்லாமியரும் பயணம் செய்தார். நீண்ட தாடி இருந்தது.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த இஸ்லாமியருக்கு இடம் கிடைத்தது. எனினும் பலர் நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்தில் இடம் காலி ஆனதும் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் அதில் உட்கார ஆயுத்தமானார்.

ஆனால் அந்த இடத்தில் அமர அனுமதிக்காத இஸ்லாமியர் பேருந்தின் கடைசி பகுதியில் இருந்த தம்முடைய உறவினரை குவி குவி அழைத்தார். அவர் வரும் வரை யாரையும் காலியாக இருக்கும் பகுதியில் அமர அனுமதிக்கவில்லை.

எனவே அந்த இஸ்லாமியர் மீது பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் வெறுப்பு அடைந்து வாக்குவாதம் செய்தனர்.

மூன்றாவது சம்பவம்.

திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

அங்கேயும் நீண்ட தாடியுடன் வந்து இருந்த இஸ்லாமியர் அது சரியில்லை இது சரியில்லை என உரக்க உரக்க கூறி அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்.

மெஸ் ஊழியர்களைக் குறைக் கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் அவரும் மெஸ்ஸில் இருந்த மற்றவர்களின் பார்வையில் நீண்ட நேரம் பட்டுக் கொண்டே இருந்தார்.

மூன்று சம்பவங்களிலும் அந்த மூன்று இஸ்லாமிய சகோதரர்கள் நடந்து கொண்ட விதம் இஸ்லாமியர்கள் எல்லோருமே இப்படிதான் போல என்ற அபிப்பிராயம் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் எழுந்தது.

அது நியாயம்தான்.

நம்முடைய ஒவ்வொரு செயல்கள் மூலம்தான் இஸ்லாம் குறித்து மற்றவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல முடியும் என்பதை பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

சிதைக்கப்படும் உறவுகள்....! (2)

சிதைக்கப்படும் உறவுகள்....! (2)

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.

செல்பேசி புழக்கத்தில் வராத காலம் அது.

வீட்டில் தொலைபேசி இருப்பது பெருமையாக கருதப்பட்ட நேரம்.

அந்த கால கட்டத்தில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இருந்தேன்.

வரவேற்று தேநீர் கொடுத்தார். நலம் விசாரித்தார்.

நீண்ட நேர பேச்சின் போது தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது.

நண்பரின் முகம் திடீரென வேறு மாதிரியாக மாறியது.

தொலைபேசியின் அழைப்பை அவரது மகன் வந்து கவனித்தார்.

நான் இயல்பாக இருந்தேன்.

நண்பர் திடீரென என்னை பார்த்து இப்படி கூறினார்.

தொலைபேசி என்னுடைய உறவினர் ஒருவரது. சும்மா கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கட்டும் என கொண்டு வந்து வைத்துள்ளார்.

நான் புன்முறுவலை அவருக்குப் பதிலாக தந்தேன்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு நண்பரிடம் இருந்து விடைபெற்று வீடு திரும்பினேன்.

ஆனால் நண்பரின் செயல் மட்டும் என் மனதை விட்டு விலகவில்லை.

நண்பர் புதிதாக தொலைபேசி இணைப்பை வாங்கி உள்ளார். அது மகிழ்ச்சியான செய்தி.

ஆனால் அது தனது இல்லை. உறவினர் ஒருவரது என நண்பர் கூற காரணம் என்ன ?

எங்கே நான் பொறாமை அடைந்து விடுவோனோ என்ற தவறான எண்ணம்தான்.

ஒருவர் வாழ்க்கையில் முன்னேறும் போது அதைப் பார்க்கும் மற்றொருவர் தமக்கும் அது போன்ற வளர்ச்சி கிடைக்க வேண்டும் என நினைப்பது மனித இயல்பு.

அதை எப்படி பொறாமை என கற்பனை செய்து கொள்ளலாம்.

நண்பர் அப்படிதான் கற்பனை செய்து கொண்டார்.

அதனால் நல்ல உறவுகள் சிதைந்து போனது.

நண்பர் உடனான நட்பில் விரிசல் ஏற்பட்டது.

இப்போதும் சந்திக்கிறோம். ஆனால் உண்மையான அன்பு பரிமாற்றம் இல்லை.

இது போன்ற சம்பவங்கள் உங்களில் பலருக்கும் நிகழ்ந்து இருக்கலாம்.

வாழ்க்கையில் நாம் செய்யும் சில சந்தேகங்கள் கற்பனைகள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது.

அமைதியை இழக்கச் செய்கிறது.

உறவுகளை சிதைக்க காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே வீண் சந்தேகங்கள் கற்பனைகள் ஆகியவற்றை தவிர்ப்போம்.

அதன்மூலம் வாழ்க்கையில் உறவுகளைப் பேணி மகிழ்ச்சியாக அமைதியாக வாழ முயற்சி செய்வோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

சிதைக்கப்படும் உறவுகள்...!

சிதைக்கப்படும் உறவுகள்...!


இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.

நெருங்கி பழகிய நண்பர் ஒருவர் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்தார்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் நிலையில் நமக்கு நெருக்கமான நண்பர் வழக்கறிஞராக மாறியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளித்தது.

நண்பர் வழக்கறிஞராக பதிவு செய்த நாளில் என் சொந்த செலவில் சென்னைக்கு சென்று அவரை வாழ்த்தினேன்.

பல நண்பர்கள் வாழ்த்த நேரில் வரவில்லை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

வழக்கறிஞராக மாறிய நண்பரின் போக்கில் சிறிது நாட்களிலேயே மாற்றங்கள் காண முடிந்தது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சிகளில் என்னை புறக்கணிக்க ஆரம்பித்தார்.

தம்முடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கு நான் ஏற்றவன் இல்லை என்பது அவரின் ஒவ்வொரு செயல்களும் உணர்த்தின.

என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.

இருந்தும் நான் நண்பரிடம் வழக்கம் போலதான் அன்பு பாராட்டி வந்தேன்.

ஈத் பெருநாள் வந்த போது நண்பர் வழக்கமாக வரும் குறிப்பிட்ட அந்த அலுவலகத்திற்கு சென்றேன்.

நண்பர் அன்று அங்கு வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்தேன். நண்பர் அலுவலக ஊழியருக்கு தொலைபேசி செய்தார்.

நான் வந்திருப்பதை அலுவலக ஊழியர் நண்பரிடம் தெரிவித்தார்.
நான் பேச விரும்புவதாகவும் கூறினார்.

நண்பர் பேசுவார். அவருக்கு ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவிக்கலாம் என ஆவலுடன் காத்திருந்தேன்.

நண்பர் என்ன செய்தார் தெரியுமா...!

தொலைபேசியில் பேசிய அலுவலக ஊழியரிடம் அவருக்கு நீயே வாழ்த்து சொல்லிடுப்பா என கூறி தொலைபேசி இணைப்பை தூண்டித்தார்.

சார் உங்களுக்கு லாயர் சார் வாழ்த்து சொல்ல சொன்னார் சார் என்றார் அலுவலக ஊழியர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நல்ல நாளிலும் வாழ்த்துக்களை அன்பைப் பரிமாற்றிக் கொள்ள நண்பர் விரும்பவில்லை. அவருக்கு மனம் இருக்கவில்லை.

என்னிடம் பழகுவதை கவுரவ குறைச்சலாக கருதினார். தமது அந்தஸ்துக்கு ஏற்றதில்லை என எண்ணினார்.

அந்த நண்பரின் நட்பை அன்றே உதறி தள்ளினேன்.

மதிக்காதவர்களின் வீட்டில் பிணமாக கூட படுக்காதே என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் செல்வம் அந்தஸ்து உயரும் போது வேறு மாதிரியாகவும் கண்டும் காணாமல் போகும் இத்தகைய மனிதர்களின் நட்பு தொடர்ந்தால் என்ன தொடராமல் போனால் என்ன.

உறவுகளைச் சிதைக்கும் இத்தகைய நபர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எனக்கு அனுபவம் சொல்லித் தந்த பாடம் இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Friday, December 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (105)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 105

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக  அறிவிக்கப்பட்டு, அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும்.....!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்......!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் (19.12.2014) அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்ற பள்ளி  சிறுமியும், வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்ற பள்ளி சிறுமியும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம்  நிகழ்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அவலம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுபழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், செல்போனிலும், கணினிகளிலும் பாலுறவு காட்சிகளை கொண்ட இணையதளங்களால்  இளைஞர்கள் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் கிருத்திகாவை பாலுறவுக்கு கட்டாயப்படுத்திப் படுகொலை செய்த மாணவன் இணையதளங்களில்  காட்சிகளைப் பார்க்க கூடியவன் என்று கூறப்படுவதாகவும், அவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் பாலுறவு அடங்கிய இணையதளங்களை 100 சதவீதம் தடை செய்தை சுட்டிக் காட்டியுள்ள தொல்.திருமாவளவன்,  இந்திய அரசும் அத்தகைய இணையதளங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், மதுபான கடைகளை  அரசு உடனடியாக மூட வேண்டும் என்றும், பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொல்.திருமாவளவனின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

இளைஞர் சமுதாயம், இனிய சமுதாயமாக, நல்ல சமுதாயமாக, நாட்டின் வளர்ச்சியில், வீட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சமுதாயமாக மலர வேண்டும் என்றால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இதுதான் எமது விருப்பம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, December 18, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (104)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! 

 நாள் - 104


தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை மதிமுகவின் போராட்டம் ஓயாது....!

வைகோ அறிவிப்பு.....!!

தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுக்கடைகளை இழுத்து மூட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தெருக்கு தெரு அதிகரித்து வரும் டாஸ்மாக் மது கடைகளால் குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் கற்பழிப்பு, விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து நடக்கும் சூழ்நிலை உள்ளது என்றும்,  பெற்றோர்களிடம் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை பற்றி தவறாக கூறி பெற்றோர் அடியாட்களை ஏவி ஆசிரியர்களை தாக்கும் சூழ்நிலை உள்ளது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். .

வேலூர் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சரி.....


இவையெல்லாம் வைகோ எங்கே கூறினார் என்று நீங்கள் வினா எழுப்புவது புரிகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டும் செயலை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்திட வேண்டியும் தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்க வேண்டியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அய்யம்பேட்டை மதகடி பஜாரில் கடந்த 18.12.2014 அன்று  மக்களோடு கலந்துரையாடினார்.

அப்போது பேசியபோதுதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மதுவுக்கு எதிராக வைகோவின் போராட்டத்திற்கு நமது ஆதரவு எப்போதும் உண்டு.

மதுவுக்கு எதிரான அவரது பணி தொடரட்டும்.

தமிழகத்தில் இருந்து மது ஒழியட்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Wednesday, December 3, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (103)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"  நாள் - 103

தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது? 

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி......!

தமிழகத்தில் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளால், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் இளம் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வருகிறது.

இதனால், சமூகம் சீரழிந்து வருகிறது.

சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இளம் பெண்கள் விதவைகளாகும் நிலை உருவாகி வருகிறது.

குடும்பங்கள் வறுமையில் தவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் மதுதான்.

இந்நிலையில்,  2011ல் நிகழ்ந்த விபத்துக்கான இழப்பீடு குறித்து மணிவிழி மற்றும் பாலு என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த (03.12.2014) அன்று விசாரித்து உயர்நீதிமன்றம், மதுவால் அதிக விபத்துகள் ஏற்படுவதால் தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும், மோட்டார் வாகன மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த கேள்விக்கு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.

டஸ்மாக் கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம்  கிடைகிறது.

தமிழக அரசு, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து விரிவான பதிலை டிசம்பர் 12ம் தேதிக்குள்  தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.


டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்வி.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக மதுக்கடைகளை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசின் வழியில், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, பிறகு நிரந்தரமாக மது கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்.

இதுதான், பெண்களின் எதிர்பார்ப்பு....

சமூகத்தில் அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள்..விருப்பம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================