Saturday, August 29, 2026

சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை - ஓர் பார்வை....!

 " தமிழக வரலாற்றில் முதல்முறையாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தாக்கல் செய்த சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை "

சமுதாயம் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிபொறுப்பை ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. கடந்த ஆகஸ்ட் 5ஆம் த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகளின் சார்பில் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. விதி 110-இன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு அறிவிப்புகளையும் நடந்துமுடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தார். 

சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை :

இப்படி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு முக்கிய நாளாக அமைந்து இருந்தது. ஆம், அன்றைய தினம், கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிவரும் ஏ.எம்.ஷாஜஹான், ஆகஸ்ட் 27ஆம் தேதி பேரவையில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

தமிழக அரசியல் வரலாற்றில் இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஒருவர் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று சமுதாயம் வியக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிவிப்புகளுக்கும், தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் முந்தைய காலங்களில் வெளியாகவில்லை என்பது தான் வரலாறாக இருந்தது. ஆனால், அந்த வரலாற்றை தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தனது அறிவிப்புகள் மூலம் உடைத்துள்ளார். 

அறிவிப்புகளில் முக்கிய அம்சங்கள் :

சரி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்த முக்கிய அம்சங்கள் நாம் அறிந்துகொள்வோம். சிறுபான்மையின மக்கள் சிறுதொழில்கள் தொடங்கும் வகையில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நவீன காலத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்., சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடங்கள் கட்டப்படும்., அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்விஉதவித்தொகை வழங்கப்படும், இதற்காக 8 கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்., இஸ்லாமிய மாணவியர் உயர்கல்வியைத் தொடர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்விக் கட்டணத் தொகையை அரசே வழங்கும். , சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 10 மாவட்டங்களில்  4கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் போன்று முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், முஸ்லிம் வக்பு சொத்துகளையும், கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளையும் பாதுகாக்கவும்  மேம்படுத்தவும், கட்டங்களைக் கட்ட வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு 40 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்., தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் சென்னையில் சிறுபான்மையினர் மகளிர் கல்லூரி ஒன்று புதிதாக உருவாக்கப்படும்., தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்., உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹானால் பேரவையில் வெளியிடப்பட்டன. 

அறிவிப்புகளால் என்ன பலன் கிடைக்கும் ? :

தமிழக பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகளால், சமுதாயத்திற்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற வினா நம்மில் பலருக்கு எழுந்துள்ளது. அது நியாயம் கூட. ஏன் எனில், ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் சமுதாயதத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலன் கிடைத்து இருக்கிறதா என்பது ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது. ஆனால், த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்புகளும் முத்தான அறிவிப்புகள் ஆகும். மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும், சிறுபான்மை சமுதாயத்தை கைத்தூக்கிவிடும் வகையில் அமைந்துள்ளன என்று உறுதியாக கூறலாம். 

========================

"த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.ஏம்.ஷாஜஹான்  சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனது மானியக் கோரிக்கையில் முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயம் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவியர், இளைஞர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

========================

குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்விஉதவித்தொகை வழங்கப்படும், இளநிலை படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டண தொகையை அரசு வழங்கும் போன்ற அறிவிப்புகளின் மூலம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகளின் கல்வி இனி தடைப்படாமல், இடையில் நின்றுவிடாமல் தொடரும் என்ற நல்ல சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம், உயர்கல்வியில் முஸ்லிம் மாணவிகளின் கவனம் சென்று அவர்கள், நல்ல உயர்கல்வியைப் பெற்று வாழ்க்கையில் சாதிக்க வழி கிடைக்கும். முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயமாக இருந்து வரும் நிலையில், இனி, முஸ்லிம் சமுதாயம் நல்ல கல்வி பெற வேண்டும்., உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டண தொகையை அரசே வழங்கும் என்ற அறிவிப்பை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும். 

இதேபோன்று, சிறுபான்மையின மக்கள் சிறுதொழில்கள் தொடங்கும் வகையில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நவீன காலத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலனை தரும் என்று உறுதியாக கூறலாம். தமிழக  சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம், திறமையான இளம் இஸ்லாமிய இளைஞர்கள் உருவாகி, சிறுதொழில்கள் தொடங்க புதிய முயற்சியில் தன்னம்பிக்கையுடன் இறங்குவார்கள். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை வளமான வாழ்க்கையாக அமையும்.  

மேலும், சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 10 மாவட்டங்களில்  4கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சமுதாய இளைஞர்கள் அந்த பணிகளில் சேர புதிய ஆர்வம் பிறக்கும், அதன்மூலம் அவர்களின் குடும்ப சூழல் மாறி, ஒரு புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்கும்.  தமிழக சட்டமன்ற வரலாற்றில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் சாதனை படைத்துள்ளார். 

விழிப்புணர்வை அவசியம் தேவை :

த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.ஏம்.ஷாஜஹான்  சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனது மானியக் கோரிக்கையில் முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயம் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவியர், இளைஞர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரத்தை இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமல்லாமல் பிற முஸ்லிம் இயக்கங்களும் சேர்ந்து செய்ய வேண்டும். அதன்மூலம் மட்டுமே, சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்த திட்டங்கள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். இனி வரும் காலங்களில் முஸ்லிம் மாணவியர்கள் யாரும் உயர்கல்வி பெறவில்லை என்ற அவல நிலை ஒருபோதும் இருக்கக் கூடாது. கல்வி தான் வாழ்க்கையை வசப்படுத்திதரும் என்பதை மனத்தில் உள்வாங்கிக் கொண்டு, கல்வி தொடர்பாக அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவிப்புகளையும் சமுதாயம் பயன்டுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 

===========================

பண்டைய மனிதக் குடியிருப்பை வெளிப்படுத்தும் நஜ்ரான்....!

  " பண்டைய மனிதக் குடியிருப்பை வெளிப்படுத்தும் நஜ்ரான் "

ஏக இறைவன் உருவாக்கிய பிரபஞ்சம் குறித்து முழுமையாக விவரங்களை தேடி மனித இனம் அலைந்துகொண்டே இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. உலகம் எப்படி தோன்றியது? மனித இனம் உலகில் எப்படி தோன்றி வேகமாக பரவியது? இப்படி பல கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் கிடைக்கவில்லை. தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள முடிவுகள் அனைத்தும், சொற்பம் என்றே கூற வேண்டும். 

அந்த வகையில் ஏக இறைவனின் படைப்பு இருந்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகள் தங்களது ஆய்வு குழுக்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் மனித நாகரீகம் எப்படி தோன்றியது என்பது குறித்து ஆய்வு செய்துகொண்டே இருக்கின்றன. இதற்கு சவூதி அரேபியாவும் விதிவிலக்கல்ல. அந்த நாடும் மனித பாரம்பரியம், குடியேற்றம் ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கிறது. 

நஜ்ரான் பகுதியில் ஆய்வு :

சவூதி அரசின் பாரம்பரிய ஆணையம், நஜ்ரான் பகுதியில் உள்ள ஷோயப் தஹ்தா தொல்பொருள் தளத்தை ஆய்வு மேற்கெசாண்டு ஒரு முக்கிய தகவலை கண்டுபிடித்துள்ளது.  மேலும், தெற்கு அரேபியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் மற்றும் இடம்பெயர்வுக்கான முக்கிய சான்றாக முன்னிலைப்படுத்தியுள்ளது. இங்கு 1 புள்ளி 2 முதல் 1 புள்ளி 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளத்தாக்கை நோக்கிய உயரமான சரளைக் கற்கள் நிறைந்த மேட்டு நிலங்களில் 1980-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தளத்தில், கடினமான, வளைக்கக்கூடிய குவார்ட்சைட் கல்லால் செய்யப்பட்ட 34 ஓல்டோவன் கற்கருவிகளின் முறையான மாதிரி கிடைத்தது.

இந்தக் கலைப்பொருட்களில், இறைச்சியை வெட்டுவதற்கும், எலும்புகளை உடைப்பதற்கும், தோல்களை உரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கூழாங்கல் வெட்டிகள், பலகோண வடிவக் கருவிகள், சுரண்டிகள், கத்திகள் மற்றும் சுத்தியல்கள் ஆகியவை அடங்கும்.

ஆரம்பகால மனிதர்களின் இருப்பு :

சவூதி பாரம்பரிய ஆணையத்தின் தொல்பொருள் துறையின் தலைமை இயக்குநர் அஜாப் அல்-ஒதைபி, இந்தத் தளம் அரேபிய தீபகற்பத்தில் ஆரம்பகால மனிதர்களின் இருப்பு குறித்த காலவரிசை பற்றிய முக்கியமான அறிவியல் நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்றுக்கு முந்தைய தளங்களை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், ஆய்வு செய்யவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

====================

"தெற்கு அரேபியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் மற்றும் இடம்பெயர்வுக்கான முக்கிய சான்றாக ஆய்வு முன்னிலைப்படுத்தியுள்ளது. இங்கு 1 புள்ளி 2 முதல் 1 புள்ளி 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன"

====================

சரவத் மலைகளின் கிழக்குச் சரிவுகளில் உள்ள வாடி நஜ்ரானுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த இடம், ஈரமான, நதியால் ஊட்டப்பட்ட ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தில் நீர், கருவி செய்யும் பொருட்கள் மற்றும் செழிப்பான தாவர, விலங்கினங்களை வழங்கியது. 

இப்படி பல சுவையான மற்றும் ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள் நஜ்ரான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலும் பல அற்புதமான தகவல்களை உலகத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அதன்மூலம் ஏக இறைவனின் வியப்பு மிகுந்த படைப்புகள் குறித்து பல அரிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்திற்கு தெரியவரும். எனினும், ஏக இறைவனின் படைப்புகள் குறித்து முழு ஞானமும் அவனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும், முழுமையாக தகவல்கள், உண்மைகள் அவனால் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மையாகும். அதை யாராலும் மறக்கவும் முடியாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, August 28, 2026

Nalini 60...!

Nalini 60 years to 60 sarees...

For Nalini's birthday, her brother... surprise .

How happy she is....



Hard times...!

Waves are inspiring. Not because they rise and fall. But because they never fail to rise again. So be positive. Hard times will go soon.



சும்மா தமாஷ்...!

 தமாஷ்!

இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். 

வாழ்க்கையில், உங்களுக்குகூட ஏற்பட்டு இருக்கலாம். 

கல்லூரியில் படித்தபோது, நண்பருடன் சேர்ந்து ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தேன். 

இந்தி படங்கள் பார்க்கும் ஆர்வம் காரணமாக,  விடுமுறை நாட்களில் நாங்கள் இரண்டு பேரும்  இப்படி, சென்னைக்கு வந்து செல்வது வழக்கம். 

வீட்டில் கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விடுவோம். 

புதிதாக ரில¦ஸ் ஆன இந்தி பாடத்தை பார்த்துவிட்டு திரும்பவும் ஊருக்கு கிளம்பி விடுவோம். 

இப்படிதான், ஒருநாள் சென்னைக்கு நண்பருடன் வந்திருந்தேன். 

இரண்டு பேரும் பாரீஸ் கார்னர் சென்றோம். 

பூக்கடை போலிஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் பூக்கடை மார்க்கெட்டிற்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றார். 

அவருக்கு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டது. 

அந்த மார்க்கெட்டில் இருந்த ஒரு கடையில், பளபளப்பான ஆப்பிள்களை கூடையில் அடுக்கி வைத்திருந்தார் வியாபாரி ஒருவர். 

ஐந்து ஆப்பிள்களை கொண்ட ஒரு குவியல் என 10 குவியல்களை அடுக்கி வைத்திருந்த அந்த ஆப்பிள் வியாபாரி, ஒன்று பத்து ரூபாய், ஒன்று பத்து ரூபாய் என ஒரு குவியலை காட்டி கத்திக் கொண்டிருந்தார். 

நண்பருக்கு ஆர்வம் அதிகமானது. 

ஐந்து ஆப்பிள்கள். 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

வாங்கி ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு, ஆப்பிள் வியாபாரியிடம் சென்றார். 

என்னப்பா ஆப்பிள் என்ன விலை என ஒரு குவியலை பார்த்து கேட்டார். 

10 ரூபாய் சார் என்றார் ஆப்பிள் வியாபாரி.

ஆப்பிள் நல்ல இருக்குமில்லே என திரும்ப கேட்டார் நண்பர். 

மிகச் சுவையாக இருக்கும் சார். இப்படிப்பட்ட ஆப்பிளை இதற்கு முன்பு நீங்கள் சாப்பிட்டு இருக்க முடியாது. 

இது ஆப்பிள் வியாபாரியின் பதில். 

நண்பர் ஐந்து குவியல்களை எடுத்து தன்னுடைய பையில் போட ஆரம்பித்தார். 

ஐந்து குவியல்களில் 25 ஆப்பிள்கள் இருந்தன. 

ஆப்பிள் வியாபாரியிடம் 50 ரூபாயை நீட்டினார் நண்பர். 

என்ன சார் 50 ரூபாய் கொடுக்கிறீங்க. 250 ரூபாய் கொடுங்க சார் என்றார் ஆப்பிள் வியாபாரி. 

நண்பருக்கு உடனே அதிர்ச்சி ஏற்பட்டது. 

என்னப்பா அநியாயம். ஒரு குவியல் 10 ரூபான்னா, 50 ரூபாதானப்பா கொடுக்கனும்.

ஒரு ஆப்பிள்தான் சார் 10 ரூபா. ஒரு குவியல் இல்லை என விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் ஆப்பிள் வியாபாரி. 

இதனால், நண்பருக்கும், ஆப்பிள் வியாபாரிக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. 

கடைசியாக 5 ஆப்பிள்களை நண்பரின் பையில் வலுக்கட்டாயமாக திணத்தார் அந்த ஆப்பிள் வியாபாரி. 

அதனை வாங்கிக் கொண்ட நண்பர், 50 ரூபாயை ஆப்பிள் வியாபாரிடம் கொடுத்து கோபத்துடன் என்னை நோக்கி வந்தார். 

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு ஏற்பட்டது. 

அதை அடக்க முடியாமல் நண்பரிடம் வெளிப்படுத்தினேன். 

ஒரு குவியல் ஆப்பிளை வைத்துக் கொண்டு, 10 ரூபாய் என சொல்லி மக்களை மடையர்களாக மாற்றி, வணிகம் செய்யும் சென்னை வியாபாரிகள் குறித்து, நண்பருக்கு அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. 

இருந்தாலும், அந்த ஆப்பிள் வியாபாரியின் சதூரியமான வணிக நுணுக்கத்தை கண்டு இரண்டு பேரும் நீண்ட நேரம்  பேசி சிரித்தோம்.

இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் வாழ்க்கையில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்டிருக்கும் இல்லையா!

அனுபவம் எல்லாம் தமாஷ்தான். சிரியுங்கள். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நட்பு...!

ஒவ்வொருவரின் வாழ்வில் 

மூன்று வகையான 

நண்பர்கள் உண்டு.  

காரணத்திற்காக நட்பு. 

காலத்திற்கேற்ப நட்பு. 

காலம் முழுவதும் நட்பு.

காலம் முழுவதுமான நட்பே 

சிறந்த நட்பு.



Brushing....!

 In Turkey, an elderly man who shines shoes for a living is visited each morning by a cat that comes for its daily brushing....