" தமிழக வரலாற்றில் முதல்முறையாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தாக்கல் செய்த சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை "
சமுதாயம் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிபொறுப்பை ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. கடந்த ஆகஸ்ட் 5ஆம் த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகளின் சார்பில் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. விதி 110-இன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு அறிவிப்புகளையும் நடந்துமுடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தார்.
சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை :
இப்படி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு முக்கிய நாளாக அமைந்து இருந்தது. ஆம், அன்றைய தினம், கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிவரும் ஏ.எம்.ஷாஜஹான், ஆகஸ்ட் 27ஆம் தேதி பேரவையில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஒருவர் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று சமுதாயம் வியக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிவிப்புகளுக்கும், தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் முந்தைய காலங்களில் வெளியாகவில்லை என்பது தான் வரலாறாக இருந்தது. ஆனால், அந்த வரலாற்றை தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தனது அறிவிப்புகள் மூலம் உடைத்துள்ளார்.
அறிவிப்புகளில் முக்கிய அம்சங்கள் :
சரி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்த முக்கிய அம்சங்கள் நாம் அறிந்துகொள்வோம். சிறுபான்மையின மக்கள் சிறுதொழில்கள் தொடங்கும் வகையில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நவீன காலத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்., சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடங்கள் கட்டப்படும்., அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்விஉதவித்தொகை வழங்கப்படும், இதற்காக 8 கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்., இஸ்லாமிய மாணவியர் உயர்கல்வியைத் தொடர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்விக் கட்டணத் தொகையை அரசே வழங்கும். , சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 10 மாவட்டங்களில் 4கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் போன்று முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், முஸ்லிம் வக்பு சொத்துகளையும், கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், கட்டங்களைக் கட்ட வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு 40 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்., தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் சென்னையில் சிறுபான்மையினர் மகளிர் கல்லூரி ஒன்று புதிதாக உருவாக்கப்படும்., தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்., உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹானால் பேரவையில் வெளியிடப்பட்டன.
அறிவிப்புகளால் என்ன பலன் கிடைக்கும் ? :
தமிழக பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகளால், சமுதாயத்திற்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற வினா நம்மில் பலருக்கு எழுந்துள்ளது. அது நியாயம் கூட. ஏன் எனில், ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் சமுதாயதத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலன் கிடைத்து இருக்கிறதா என்பது ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது. ஆனால், த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்புகளும் முத்தான அறிவிப்புகள் ஆகும். மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும், சிறுபான்மை சமுதாயத்தை கைத்தூக்கிவிடும் வகையில் அமைந்துள்ளன என்று உறுதியாக கூறலாம்.
========================
"த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.ஏம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனது மானியக் கோரிக்கையில் முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயம் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவியர், இளைஞர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."
========================
குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்விஉதவித்தொகை வழங்கப்படும், இளநிலை படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டண தொகையை அரசு வழங்கும் போன்ற அறிவிப்புகளின் மூலம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகளின் கல்வி இனி தடைப்படாமல், இடையில் நின்றுவிடாமல் தொடரும் என்ற நல்ல சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம், உயர்கல்வியில் முஸ்லிம் மாணவிகளின் கவனம் சென்று அவர்கள், நல்ல உயர்கல்வியைப் பெற்று வாழ்க்கையில் சாதிக்க வழி கிடைக்கும். முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயமாக இருந்து வரும் நிலையில், இனி, முஸ்லிம் சமுதாயம் நல்ல கல்வி பெற வேண்டும்., உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டண தொகையை அரசே வழங்கும் என்ற அறிவிப்பை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.
இதேபோன்று, சிறுபான்மையின மக்கள் சிறுதொழில்கள் தொடங்கும் வகையில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நவீன காலத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலனை தரும் என்று உறுதியாக கூறலாம். தமிழக சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம், திறமையான இளம் இஸ்லாமிய இளைஞர்கள் உருவாகி, சிறுதொழில்கள் தொடங்க புதிய முயற்சியில் தன்னம்பிக்கையுடன் இறங்குவார்கள். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை வளமான வாழ்க்கையாக அமையும்.
மேலும், சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 10 மாவட்டங்களில் 4கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சமுதாய இளைஞர்கள் அந்த பணிகளில் சேர புதிய ஆர்வம் பிறக்கும், அதன்மூலம் அவர்களின் குடும்ப சூழல் மாறி, ஒரு புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்கும். தமிழக சட்டமன்ற வரலாற்றில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் சாதனை படைத்துள்ளார்.
விழிப்புணர்வை அவசியம் தேவை :
த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.ஏம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனது மானியக் கோரிக்கையில் முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயம் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவியர், இளைஞர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரத்தை இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமல்லாமல் பிற முஸ்லிம் இயக்கங்களும் சேர்ந்து செய்ய வேண்டும். அதன்மூலம் மட்டுமே, சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்த திட்டங்கள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். இனி வரும் காலங்களில் முஸ்லிம் மாணவியர்கள் யாரும் உயர்கல்வி பெறவில்லை என்ற அவல நிலை ஒருபோதும் இருக்கக் கூடாது. கல்வி தான் வாழ்க்கையை வசப்படுத்திதரும் என்பதை மனத்தில் உள்வாங்கிக் கொண்டு, கல்வி தொடர்பாக அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவிப்புகளையும் சமுதாயம் பயன்டுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
===========================












