Wednesday, October 2, 2024

உர்தூ மொழி.....!

 உர்தூ மொழியின் சிறப்பு.....!

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உர்தூ மொழி பேசப்பட்டு தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் உர்தூ மொழிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவுக்கு வேறுபாடு எதுவும் இல்லை. உங்களுக்கு மொழி புரிந்துவிட்டால், அதை இந்தி என்றும் புரியாவிட்டால், உர்தூ என்றும் நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். உண்மையில் நாம் தற்போது பேசும் மொழி தான் உண்மையான உர்தூவாகும். 

உர்தூ மொழி என்பது என்ன? அந்த மொழியில் பிற மொழிகளின் வார்த்தைகள் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா? என பலர் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த மொழியாக இருந்தாலும், அதில் பிற மொழிகளின் வார்த்தைகள் கலப்படம் செய்து பேசுவது தற்போது இருப்பது இயல்பாகிவிட்டது. ஆனால், உர்தூ மொழி பிற மொழிகளை சார்ந்து இருக்கவில்லை. பிற மொழிகளால் மட்டுமே உர்தூ மொழி உயிருடன் இருக்கவில்லை.  இதுகுறித்து லக்னோவைச் சேர்ந்த ஒரு கவிஞர் சவால் என்று விடுத்து இருந்தார். அந்த சவால்படி, எந்த ஆங்கிலம், அரபி மற்றும் பிற மொழிகள் எதுவும் கலப்படம் இல்லாமல், ஒரு அற்புதமான நூலை அவர் உர்தூ மொழியை மட்டுமே பயன்படுத்தி எழுதி முடித்தார்.  இதுதான் உண்மையான உர்தூ மொழியாகும். 

உர்தூ மொழி சில தகவல்கள்:

தற்போது நாம்,எப்படி உர்தூ மொழியை பேசுகிறோம். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். இதற்காக ஒரு சிறிய சம்பவத்தை உதாரணமாக கூறுகிறேன். கேளுஙகள். 'ஒரு சிறிய வீட்டில் அழகிய குழந்தை ஒன்று இருந்தது. அங்கு சமையல்காரர் வந்து அந்த குழந்தைக்கு காலை உணவை அளித்தார். அந்த உணவில் துவரம் பருப்புடன் கூடிய பல உணவு வகைகள் இருந்தன. பின்னர் அந்த சமையல்காரர் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து, வீட்டில் இருந்து வெளியே கோபத்துடன் சென்றார். அப்போது மிகப்பெரிய அளவுக்கு கூச்சல் ஏற்பட்டது'. இது ஒரு உதாரண சம்பவம் தான். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உர்தூ வார்த்தைகள் குறித்து நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 

மகான் (வீடு) என்ற வார்த்தை அரபியாகும். சீட்டா என்ற வார்த்தை பஞ்சாபியாகும். நன்னா முன்னா பச்சா என்பது  குஜராத்தி மற்றும் பர்சியன் மொழியில் உள்ள வார்த்தைகள் ஆகும்.  பாவர்ஜி (சமையல்காரர்) துருக்கி வார்த்தையாகும். பால்டி என்ற வார்த்தையும் பிற மொழியாகும். இப்படி பல மொழிகளுடன் நாம் உர்தூ மொழியை பயன்படுத்தி வருகிறோம். பிஸ்டோல் (துப்பாக்கி) என்ற வார்த்தை ஆங்கிலமாகும். சொந்தூக், பந்தூக் ஆகியவை துருக்கி வார்த்தைகளாகும். தீவார் (சுவர்) மற்றும் ரஸ்தா (பாதை) பராசீக மொழியாகும். இவை அனைத்துதையும் நாங்கள் தவிர்த்துவிட்டு, மொழியை பயன்படுத்த ஆரம்பித்தால், நம்மால் நிச்சயம் பேசவே முடியாது. புரிந்துகொள்ள முடியாது.  இதேபோன்று துவ்வர் (துவரம் பருப்பு) என்ற வார்த்தை தமிழ் மொழியாகும். 

நாம் இரண்டு நிமிடங்கள் பேசினால், அதில் பத்துக்கும் மேற்பட்ட பிற மொழிகளின் வார்த்தைகள்ப் பயன்படுத்துகிறோம். இதனால், உர்தூ மொழி ஒருபோதும் அழிந்து போவதில்லை. பேசும் மொழி ஒருபோதும் எழுதும் மொழியாக இருந்துவிட முடியாது. 

உர்தூ மொழியில் நாம் எழுதிவிட்டால் மட்டுமே, ஒரு வார்த்தை, அது ஆங்கில வார்த்தையாக கருதிவிட முடியாது. அது எழுது வடிவமாக கூட கருதிவிட முடியாது. உதாரணமாக பஞ்சாபி மொழி மூன்று கலை வடிவங்களில் எழுதுப்படுகிறது. தேவநாகி, உர்தூ மற்றும் பார்சி ஆகியவற்றில் எழுதுப்படுகிறது. எப்படி எழுதினாலும், அது பஞ்சாபியாக இருக்கும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான மொழியாக இருந்துவிட முடியாது. உதாரணமாக  ஏர் கண்டிஷனிங்  என்ற வார்த்தையை நாம் உபயோகித்தால், உடனே அது ஒரு மொழியின் அடையாக மாறிவிடாது. ஹால் மற்றும் ஏர் கண்டிஷனிங் என்ற ஆங்கில வார்த்தையை நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், நமது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நமது மொழிகளில் பல்வேறு மொழிகளின் வார்த்தைகள் பயன்படுத்துவது இயல்பாக மாறிவிட்டது. மொழி என்பது தன்னுடைய கம்பீரமான நடையில் மட்டுமே நீடித்து நிற்கும் என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்துஸ்தானி மொழி:

இப்போது உர்தூ குறித்து நாம் சிறிது அறிந்துகொள்வோம். உர்தூ என்பது என்ன? நாம் இந்தி, இந்துஸ்தானி மற்றும் உர்தூ என கூறும் அனைத்திலும் ஒரேவிதமான இலக்கணம் கடைப்பிடிக்கக்கப்பட்டு வருகிறது. 'நான் வருகிறேன். நீங்கள் போகிறீர்கள், எனக்கு தாகம் ஏற்படுகிறது. நீங்கள் சாப்பாடு சாப்பிடுகிறீர்களா, எங்கே போகிறீர்கள். எப்போது வருவீர்கள்' என நாம் உர்தூவில் பேசும்போது, இவை அனைத்தும் எந்த மொழி என நீங்கள் கேள்வி எழுப்பலாம்.  இதுதான் இந்தி, உர்தூ மற்றும் இந்துஸ்தானி ஆகும். நீங்கள் எப்படி எழுதினாலும், மொழி மொழியாக தான் இருக்கும். ஒரு சாதாரண மனிதன் புரிந்துகொள்ளும் வகையில் மொழி இருக்க வேண்டும். அந்த வகையில் உர்தூ மொழி இருந்து வருகிறது. எனவே தான் அதை இந்துஸ்தானி என கூறுகிறேன். மகாத்மா காந்தி கூட, நாட்டின் ஆட்சி மொழியாக இந்துஸ்தானி இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். மாறாக இந்தி, உர்தூ மொழி என வேறுப்படுத்தி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். 

உர்தூ மொழியின் வேகம்:

ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், உர்தூ மொழியின் எழுத்து வடிவத்தை அழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், உர்தூ மொழி இன்னும் மிக வேகமாக, அதிக வீரியத்துடன் மற்றவர்களிடம் பரவிக் கொண்டே செல்கிறது. உர்தூ மொழி மீதான காதல், அன்பு மக்களிடம் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. அது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காரணம், இது ஒரு சாதாரண மனிதனின் மொழியாகும். 

சாதாரண மக்களிடம் எப்போதும் பேசப்பட்டு வரும் மொழி தான் எப்போதும் உயிருடன் இருக்கும். அதிகாரத்துடன் எந்தவொரு மொழியையும் நாம் வளர்க்க முடியாது. அப்படி செய்து இருந்தால், இந்தியாவில் ஆங்கிலம் அல்லது பார்சி மொழி மட்டுமே இருந்து இருக்கும். இந்தியாவில் பல நூற்றாண்டுகள் ஆட்சி மொழியாக பார்சி இருந்து இருக்கிறது. இதேபோன்று, ஆங்கிலமும் இருந்து இருக்கிறது. இருந்தும் ஆட்சியாளர்களின் அதிகாரம், நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கூட, இந்தியாவில் உர்தூ மொழி நிலைத்து இருக்கிறது. இந்துஸ்தானி ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்கிறது. திரைப்படத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு ஆதிக்கம் செலுத்திய மொழியாக உர்தூ இருந்தது. தற்போதும் இருந்து வருகிறது. கவிதைகள், பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் உர்தூ தன்னுடைய கம்பீரமான மொழி அழகின் மூலம் ஆதிக்கம் செலுத்தியது. தற்போதும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. 

மாறிவரும் நிலைமை:

தற்போது நிலைமை மாறி, இந்திய மொழிகளின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் குழந்தைகளிடம் பேசும்போது, அவர்கள் ஆங்கில வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பதை பார்க்கலாம். மொழியின் அழகை சிறப்பான முறையில் பயன்படுத்தி, ரசிக்க மக்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவைகளிலும் மிகவும் சுருக்கமாக மொழி பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நாம் ஆய்வு செய்தால், அனைத்து நிலைகளிலும் உர்தூ மொழி ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடியும். பெரும்பாலான எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அனைவரும் உர்தூ மொழி மூலம் மட்டுமே, தங்களுடைய படைப்புகளை எழுதினார்கள். உர்தூ மொழியுடன் கூடிய வசனம் மற்றும் பாடல்களுடன் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள், இந்தி மொழி திரைப்படங்கள் என அழைக்கப்பட்டன. ஆனால் உர்தூ மொழியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம், உர்தூ மொழியில் பாடல்கள், வசனங்கள் எழுதினாலும், திரைப்படத்துறையில் பணியாற்றுவது நல்ல செயல் அல்ல என்று அவர்கள் கருதினார்கள். அதன் காரணமாக மௌனமாக இருந்துவிட்டார்கள். இது பின்னர்,  அவர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

தற்போது நிலைமை மாறிவிட்டதால், அனைத்து உர்தூ மற்றும் இந்தி ஆர்வலர்கள் ஒன்று கூடி ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவு, இந்துஸ்தானியை நாம் எப்படி பாதுகாப்பது என்ற வகையில் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும்.  

குறிப்பு: பிரபல உர்தூ கவிஞர் ஜாவீத் அக்தர், உர்தூ மொழியில் ஆற்றிய உரையின் தமிழக்கம் தான் இது.

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: