Tuesday, September 30, 2025

காசாவில் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம்


காசாவில் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 

20 அம்ச அமைதித் திட்டம்

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு

காசாவில் விரைவில் அமைதி திரும்பும் என நம்பிக்கை

நியூயார்க்,செப்.30-காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் வரவேற்றள்ளன.

காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல், காசா மக்கள் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலக நாடுகள் கோரிக்கை :

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் உடனே தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரண்டு நாடுகள் தீர்வை முன்வைத்து பேசின. மேலும், இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களையும் பல நாடுகள் தெரிவித்தனர். இஸ்ரேல் பிரதமர் ஐ.நா.பொது அவையில் பேசும்போது பெரும்பாலான நாடுகள் அவரது பேச்சை புறக்கணித்தன.

டிரம்ப் 20 அம்ச அமைதித் திட்டம் :

இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்து பேசிய அதிபர் டிரம்ப், காசாவில் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையில், அமைதி மிகவும் அவசியம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிபர் டிரம்ப்பின் இந்த இஸ்ரேல் பிரதமர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து விரையில் 20 அம்ச அமைதித் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு :

காசாவில் போரை நிறுத்த அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்திற்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்றும்,   சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றுபட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று தாங்கள் நம்புகிறோம் கூறியுள்ளார்.

இதேபோன்று, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பாகிஸ்தான், சவுதி ஆரேபியா உள்ளிட்ட பல நாடுகள்  20 அம்ச அமைதித் திட்டத்தை வரவேற்றுள்ளன. ஹமாஸ் போராளிகள் குழுவும் இந்த திட்டத்திற்கு சம்பந்தம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

இரு தரப்பும் இந்த திட்டத்தை ஒப்புக் கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும். இஸ்ரேல் காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தி படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழு காசாவில் இடைக்கால நிர்வாகத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட குழு இந்த திட்டத்தைக் கண்காணிக்கும். பாலஸ்தீன் ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிவுக்கும் வரை காசாவில் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இந்த குழுவின் பணியாகும். இப்படி பல அம்சங்கள் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, September 26, 2025

True journalism...!

 This is called true journalism.

Must watch this episode of Ravish Kumar fearlessly discussing the former CJI Chandrachud's comment on the Babri Masjid verdict.

Hats off to Ravish Kumar.



விளக்கம்....!

 நான் முதல்வன் திட்டம்...?



Wednesday, September 24, 2025

மனிதநேயப் பணி....!

" ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்களின்னி மனிதநேயப் பணி "

'காஸாவில் உயிர் பிழைக்க ஓடும் மக்கள்' என்ற தலைப்பில் கடந்த 19ஆம் தேதி மணிச்சுடர் நாளிதழில், தொடரும் காஸா மக்களின் துயரங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அந்த கட்டுரையில் சிறுவன் ஜாதூவா தனது தம்பி கலீத்தை முதுகில் சுமந்து கொண்டு அழுதுக் கொண்டே ஓடிச் செல்லும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் இந்த துயரமான புகைப்படம் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளுக்கு ஒரு சிறிய சான்றாக அமைந்து இருந்தது. இதேபோன்று, ஆயிரக்கணக்கான குழந்தைகள் காஸாவில் சிக்கி உயிர் பிழைக்க நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செய்தியும் தற்போது உலகம் முழுவதும் எட்டிக் கொண்டிருக்கிறது.

கூடாரத்தில் தஞ்சம் :

சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் புகைப்படம் வெளியான பிறகு, ஒரு ஊடகவியலாளரின் உதவியுடன் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அகதிகளுக்கான கூடாரத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, உணவு, உடை உள்ளிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால்

 காஸாவில் இஸ்ரேலிய தாக்குல் காரணமாக இடம்பெயர்வின் கடுமையான சாலைகள் வழியாக ஜாதூவா தனது தம்பி கலீத்தை தோள்களில் சுமந்து சென்ற துயரம் தற்போது நீங்கி, தற்போது இருவரும் கூடாரத்தில் அமர்ந்து துயரத்தை கொஞ்சம் மறந்து சிரித்து விளையாடி மகிழ்கிறார்கள்.

போரின் சுமையைத் தாங்கும் குழந்தைப் பருவத்தின் அடையாளமாக இருந்த அவர்களின் வாழ்க்கை தற்போது மாறி,இரண்டு சகோதரர்கள் ஒரு எளிய கூடாரத்திற்குள் அமர்ந்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட குழந்தைப் பருவத்தை  மீட்டெடுக்கும் வகையில் ஒரு சிறிய சிரிப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் உயிர்வாழும் ஒரு தலைமுறையின் கதையாக உள்ளது. மேலும் இது உலகிற்கு மீள்தன்மையின் பாடத்தை வழங்குகிறது.

எகிப்து தொழில் அதிபரின் மனிதநேயம் :

இது ஒருபுறம் இருக்க, எகிப்து தொழில் அதிபரின் மனதை கூட சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் துயரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வளர்க்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். காஸா போரில் தாய், தந்தையை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை அந்த தொழில் அதிபர் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அழகிய வாழ்வை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோருக்கும் உதவ அவர் முன் வந்துள்ளார். சிறுவர்கள் இருவர் குறித்த விவரங்களை ஊடகவியலாளர் ஒருவரிடம் கேட்டுள்ள அந்த தொழில் அதிபர், முழு விவரங்களையும் அனுப்ப அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, சிறுவர்கள் இருவரின் விவரங்கள் தற்போது எகிப்து தொழில் அதிபரின் பார்வைக்கும் கவனத்திற்கும் சென்றுள்ளது.இதன்மூலம் ஜாதூவா மற்றும் கலீத் ஆகிய இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புகைப்படக் கலைஞர்களின் சேவை :

காஸாவின் துயரங்களை நேரடியாக படம் பிடித்துக் காட்டும் புகைப்படக் கலைஞர்களின் அரிய சேவை மூலம் காஸா சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்றே கூறலாம்.

காஸா போர்க்களத்தில் துணிச்சலுடன் செயல்படும் ஊடகவியலாளர், புகைப்படக் கலைஞர்கள் மூலமாக இஸ்ரேலின் கொடூரம் உலகம் முழுவதும் சென்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது. காஸா மக்கள் மீது குறிப்பாக, சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்தும் தாக்குதல்கள், செய்யும் கொடுமைகள் தற்போது உலகம் நேரடியாக கண்டு வருகிறது. இஸ்ரேலிய அரசுக்கு மேற்கத்திய நாடுகள் பெரும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தற்போது நிலைமை மாறி வருகிறது. இதன்மூலம் காஸாவில் போர் நின்று விரைவில் அமைதி திரும்ப வாய்ப்பு உருவாகியுள்ளது என்றே கூறலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, September 23, 2025

நவீன சவூதி அரேபியாவின் தந்தை.....!

 " நவீன சவூதி அரேபியாவின் தந்தை மன்னர் அப்துல்அஜீஸ் அல் சவுத் "

உலகமே வியக்கும் வகையில் தற்போது சவூதி அரேபியா  நவீனமயமாக காட்சி அளிக்கிறது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகள் மூலம், உலகம் முழுவதும் இருந்து வரும் முஸ்லிம்கள், அந்த நகரங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு, வியப்பு அடைவதுடன், சிறப்பான வசதிகளையும் பெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். 

சவூதி இஸ்லாமியர்களின் வரலாற்று தாயகமாகும். சவூதி அரேபியா கலாச்சாரத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் உரிமைகள் மற்றும் சமூக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் சமூக வாழ்வில் அதிக அளவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர். இது சவூதி அரேபியாவின் சமூக அமைப்பில் ஒரு பெரிய மாற்றமாகும். நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் நவீனமடைந்து வருகிறது. புதிய நகரங்களும், பெரிய திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.  நாட்டின் பொருளாதாரம் எண்ணெயை மட்டும் சார்ந்திராமல், சுற்றுலா மற்றும் பிற துறைகளிலும் வளர்ந்து வருகிறது.  சவூதி அரேபியா நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இது சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இப்படி சவூதி அரேபியாவின் பல மாகாணங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. உலக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரியாத், ஜித்தா மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் பணிகள் மூலம் சவூதி அரேபியா நவீனமயமாக காட்சி அளிக்கிறது.  சரி, இந்த நவீனமயமாக்கலின் தந்தை யார் என கேள்வி எழுப்பினால், மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவுத் என்று அனைவரும் சொல்கிறார்கள். அவரது பணிகள் மூலம் பாலைவன நாடாக இருந்து எண்ணெய் வளத்தையும், நவீன உள்கட்டமைப்புத் திட்டங்களையும் கொண்ட ஒரு தேசமாக உருவெடுத்துள்ளது. இது மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஒரு அரபு நாடு, மற்றும் அதன் வரலாறும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது என்றாலும் தற்போது இந்த வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்து நவீனத்தை நோக்கிப் பயணிக்கிறது. 

நவீன சவூதி அரேபியாவின் தந்தை :

மன்னர் அப்துல்அஜீஸ் அல் சவுத்தின் ஆட்சி, நவீன சவூதி அரேபியாவின், தொடக்கத்தின்  முதல்  காலமாகும். 1932 ஆம் ஆண்டில் சவூதி ராஜ்ஜியத்தை ஒன்றிணைத்த மன்னர் அப்துல்அஜீஸ் அல் சவுத், ஒரு நவீன அரசின் அடித்தளத்தை கட்டியெழுப்பத் தொடங்கினார். அவரது தலைமையில் தொடங்கிய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஒப்பந்தங்கள், வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு சவூதி அரேபியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன. 

1932 இல் வெளியிடப்பட்ட சவூதி ராஜ்ஜியத்தின் முதல் பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி  14 மில்லியன் ரியால்கள் ஆகும். இன்றைய தரநிலைகளின்படி அது எளிமையானது. இது செங்கடலில் இருந்து அரேபிய வளைகுடா வரை நீண்டிருந்த ஒரு மாநிலத்தில் நிதி நிர்வாகத்தை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. இது இறுதியில் சவூதி ராஜ்ஜியத்தை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றும் ஒரு செயல்முறையின் தொடக்கத்தையும் குறித்தது.

முதல் அமைச்சகங்கள் :

அரசு கட்டமைப்பின் ஆரம்பகால செயல்களில் அமைச்சகங்களை உருவாக்குவதும் அடங்கும். 1930 இல் நிறுவப்பட்டு இளவரசர் பைசலுக்கு ஒப்படைக்கப்பட்ட வெளியுறவு அமைச்சகம், அரேபிய தீபகற்பத்தின் முதல் நவீன அமைச்சகமாகும். பின்னர், வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிக்க அப்துல்லா பின் சுலைமான் அல்-ஹம்தான் தலைமையில் நிதி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் நாட்டை பொருளாதார சவால்களை கடந்து செல்லவும் வெளிநாட்டு உறவுகளை கட்டியெழுப்பவும் அனுமதிக்கும் நிர்வாக முதுகெலும்பை வழங்கின.

1933 ஆம் ஆண்டில், மன்னர் அப்துல்அஜீஸ் கலிபோர்னியாவின் ஸ்டாண்டர்ட் ஆயிலுடன் முதல் சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது சவூதி இராச்சியத்தில் எண்ணெய் ஆய்வுக்கு வழிவகுத்தது. பல வருட ஆய்வுகள் மற்றும் துளையிடுதலுக்குப் பிறகு, 1938 ஆம் ஆண்டில், தம்மம் கிணறு எண் 7 வணிக அளவில் எண்ணெயை உற்பத்தி செய்தபோது திருப்புமுனை ஏற்பட்டது. ஒரு வருடம் கழித்து, 1939 ஆம் ஆண்டில், மன்னர் தனிப்பட்ட முறையில் ராஸ் தனுராவில் உள்ள வால்வைத் திறந்து சவூதி கச்சா எண்ணெயின் முதல் கப்பலை ஒரு டேங்கரில் ஏற்றினார். இது நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணம்.

முதல் ரயில், விமான நிலையங்கள் :

தனது பரந்த சவூதி ராஜ்ஜியத்தை இணைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மன்னர் அப்துல்அஜீஸ் போக்குவரத்து உள்கட்டமைப்பின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டார். முதல் ரயில் ரியாத்தை தம்மத்துடன் இணைத்தது. இது நவீன நிலப் போக்குவரத்திற்கான அடித்தளத்தை அமைத்த ஒரு திட்டமாகும். நீண்ட கேரவன் வழித்தடங்களை நம்பியிருந்த ஒரு நாட்டில், தகவல் தொடர்பு மற்றும் பயணத்தை எளிதாக்கும் ஆரம்பகால விமான ஓடுபாதைகளுடன் விமான நிலையங்களும் தோன்றத் தொடங்கின.

இதேபோன்று, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பும் முன்னுரிமைகளாக இருந்தன. மன்னர் அப்துல்அஜீஸின் கீழ் நிறுவப்பட்ட முதல் பள்ளிகள் எழுத்தறிவு மற்றும் கற்றலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. ரியாத், தைஃப் மற்றும் ஜித்தாவில் பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்  கட்டப்பட்டன. இவை ஒரு காலத்தில் வரையறுக்கப்பட்ட வசதிகள் மட்டுமே இருந்த கட்டமைக்கப்பட்ட சுகாதார சேவைகளை வழங்கின. இந்த நிறுவனங்கள் பிற்கால தசாப்தங்களில் பின்பற்றப்படும் நாடு தழுவிய அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தன.

உலக அரங்கில் சவூதி அரேபியா :

மேலும், மன்னர் அப்துல்அஜீஸ் சவூதி அரேபியாவை உலக அரங்கில் நிலைநிறுத்தினார். அவர் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். தூதரகங்களைத் திறந்தார். வெளிநாட்டு தூதர்களை வரவேற்றார். 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதில் அவரது இருப்பு, சர்வதேச நிறுவனங்களில் சவூதி இராச்சியத்தின் முதல் பங்கேற்பைக் குறித்தது. சவூதி அரேபியாவை ஒரு பிராந்தியத் தலைவராகவும் உலகளாவிய தலைவராகவும் அவரது பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த முதல் முயற்சிகள் ஒவ்வொன்றும்  பட்ஜெட்டுகள், அமைச்சகங்கள், சலுகைகள் மற்றும் நிறுவனங்கள் நிர்வாகச் செயல்களை விட அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தின. சவூதி அரேபியாவை ஒருங்கிணைந்த நிலத்திலிருந்து நவீன நாடாக மாற்றுவதில் அவை மைல்கற்களாக இருந்தன. சவூதி இராச்சியம் அதன் 95வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், மன்னர் அப்துல்அஜீஸின் கீழ் இந்த தொடக்கங்களின் நினைவு நிலைத்திருக்கிறது. இன்றைய செழிப்பான தேசத்தின் அடித்தளங்கள் மீள்தன்மை, தொலைநோக்கு மற்றும் வரலாற்று முதன்மையான சாதனைகளின் சகாப்தத்தில் அமைக்கப்பட்டன என்பதை அவை நினைவூட்டுகின்றன.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, September 22, 2025

உதவி....!

 பஞ்சாப் கனமழை, வெள்ளம்....!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆய்வு..!



Sunday, September 21, 2025

மதரஸா, பள்ளி மாணவர்களின் ரோஜா பூ வரவேற்பு.....!

மதரஸா, பள்ளி மாணவர்களின் ரோஜா பூ வரவேற்பு.....!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.....!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 1500 பிறந்தநாள் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி சிறப்பாக வரவேற்பு அளித்தனர். கலைவாணர் அரங்கத்திற்குள் முதலமைச்சரின் வாகனம் நுழைந்ததும், வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதலமைச்சருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி, மதரஸா மற்றும் பள்ளி மாணவர்களின் அன்பான ரோஜா பூ வரவேற்பாக இருந்தது. ஒவ்வொரு மாணவர்களும், தங்களது கைகளில் வைத்திருந்த ரோஜா பூவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து, தங்களது அன்பை வெளிப்படுத்தி, அவரை மகிழ்ச்சியுடன் விழாவிற்கு அழைத்தனர். அப்போது முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து ரோஜா பூவைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் மாணவர்களின் தோளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். சில மாணவர்களிடம் அவர்கள்  படிக்கும் படிப்பு மற்றும் நலன் குறித்தும் அவர் கேட்டு, சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். 

முதல் வரிசையில் இருந்த மதரஸா மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், எதிர்திசையில் இருந்த இரண்டாவது வரிசைக்கு சென்றபோது, மீண்டும் வரிசையில் இருந்த முதல் மாணவனின் திசைக்குச் சென்று, அங்கிருந்த மாணவனின் கைகளில் இருந்து ரோஜா பூவைப் பெற்றுக் கொண்டு வரவேற்பை தொடங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்ற காணொளியை காணும்போது, உண்மையில் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது. முதலமைச்சருக்கு வித்தியாசமான முறையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அவரை பெரிதும் கவர்ந்தது என்பதை அவரது முகத்தை காணும்போது தெளிவாக தெரிந்தது. புன்சிரிப்புடன், ஒவ்வொரு மாணவரும் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்ததும், காணொளியில் மூலம் அருமையாக தெரியவந்தது. உண்மையில் மதரஸா மற்றும் பள்ளி மாணவர்களின் இந்த அன்பான வரவேற்பு, முதலமைச்சரை மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமுதாயத்தையும் தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றது என்றே கூறுலாம்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=================================