Sunday, October 5, 2025

அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையும் மீறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குல்....!

 

அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையும் மீறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குல்: 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்தில் நடத்த ஏற்பாடு

காஸா, அக்.05- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்கதல் நடத்தியதில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள்.

20 அம்ச அமைதித் திட்டம்:

காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடக்கும்  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்தார். இந்த திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக் கொண்ட ஹமாஸ் போராளிகள், மற்ற நிபந்தனைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, காஸா மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்.

எச்சரிக்கையும் மீறி தாக்குதல் :

காஸா மீது தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையும் மீறி இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டார்கள். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  சிறைபிடிக்கப்பட்டவர்கள் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது குண்டுவீச்சு நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 70 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது.

எகிப்தில் பேச்சுவார்த்தை :

இந்நிலையில் போர் நிறுத்துவது தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னதாக ஹமாஸ் போராளிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் எகிப்தில் ஒன்றுகூடுகின்றனர்.

இதனிடையே .சனிக்கிழமை 04.10.2025 அன்று ஐரோப்பாவில் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், காஸாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பிரதேசத்திற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் ஒரு கடற்படையில் உள்ள ஆர்வலர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தனர்.

அக்டோபர் 2023 முதல் காஸா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 67 ஆயிரத்து 100 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 430 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாக நம்பப்படுகிறது. அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களில் மொத்தம் ஆயிரத்து 139 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=========================

Saturday, October 4, 2025

காஸா - ஹமாஸ்.....!

  "காஸாவும், ஹமாஸ் போராளிகளும் "

உலகின் உள்ள அழகிய நகரங்களில் ஒன்றாகவும், பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும் இருக்கும் காஸாவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் சீரழித்துவிட்டு வருகிறது. காஸா மக்களை துன்பங்களுக்கு மேல் துன்பங்களை சுமக்கும் வகையில் இஸ்ரேல் பல்வேறு கொடுமைகளை, திட்டங்களை, சதிகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. உலக மக்களின் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து இஸ்ரேல் அட்டகாசம் செய்து வந்தாலும், காஸா மக்களில் பெரும்பாலானோர், தங்களுடைய சொந்த மண்ணைவிட்டு வெளியேற மறுத்து வருகிறார்கள். தற்போது போர் நிறுத்தம் செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் காஸா குறித்தும் ஹமாஸ் போராளிகள் குறித்தும் பல சுவையான தகவல்களை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். 

அழகிய காஸா :

காஸா பகுதி என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் காஸா, மேற்கு ஆசியாவின் தெற்கு லெவண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலஸ்தீன பிரதேசமாகும். இது உலகளவில் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். தென்மேற்கில் எகிப்தையும் கிழக்கு மற்றும் வடக்கில் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்டுள்ளது. தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் கொண்ட பகுதி காஸா நகரம் ஆகும். சுமார் 21 லட்சம் மக்கள் வாழும் காஸாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் 44 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.

காஸாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் ஆவார்கள். ஒரு சிறிய பாலஸ்தீனிய கிறிஸ்தவ சிறுபான்மையினர் காஸாவில் வசித்து வருகிறார்கள். காஸா பல ஆண்டுகளாக தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இங்கு 46 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் இருந்து வருகிறது. இளைஞர்களில் 70 சதவீதம் பேர் வேலையில்லாமல் வாழ்க்கையில் வேதனைகளை சுமந்துகொண்டே இருக்கிறார்கள். 

இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் மையப் புள்ளி :

1990 ஆண்டுகளில் பாலஸ்தீன ஆணையம் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதால், காஸா எகிப்திய மற்றும் இஸ்ரேலிய ஆட்சி உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளின் கீழ் உள்ளது. இஸ்ரேலுக்கும் காஸாவில் ஆளும் அதிகாரமான ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள், பதட்டங்கள் நிலவி வருவதால், காஸா முற்றுகைகள், மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. காஸா பகுதி இஸ்ரேலிய -பாலஸ்தீன மோதலின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. குடியேற்றங்கள், எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் வளங்களை அணுகுவது போன்ற பிரச்சினைகள் சிக்கலுக்கு பங்களிக்கின்றன. அவ்வப்போது வன்முறை வெடிப்புகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் குறித்த கவலைகளுடன் நிலைமை நிலையற்றதாகவே உள்ளது. 

ஹமாஸ் போராளிகள்  : 

ஹமாஸ் இயக்கம், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் என்ற இராணுவப் பிரிவைக் கொண்ட ஒரு பாலஸ்தீனிய சன்னி இஸ்லாமிய அமைப்பாகும். 1987 ஆம் ஆண்டு பாலஸ்தீன இஸ்லாமிய அறிஞர் அகமது யாசினால் நிறுவப்பட்ட ஹமாஸ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான முதல் இன்டிபாடாவின் போது உருவானது. இதன் முதன்மை நோக்கம் பாலஸ்தீனத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதாகும். அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு என்பது ஹமாஸின் ஆயுதப் பிரிவாகும். இது இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகும். பாலஸ்தீன சட்டமன்றத்தில் பெரும்பான்மையை வென்ற பிறகும், போட்டி பிரிவான ஃபதாவிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகும், 2007 முதல் ஹமாஸ் காஸா பகுதியை ஆட்சி செய்து வருகிறது.

இஸ்ரேலுடனான மோதல் : 

கடந்த 2008, 2009, 2012, 2014, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த மோதல்கள் உட்பட ஹமாஸ் போராளிகள் குழு, இஸ்ரேலுடன் பல போர்களில் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை ஹமாஸ் நடத்தியது.  ஹமாஸின் 1988 சாசனத்தில் யூத எதிர்ப்பு மொழி இருந்தது. ஆனால் அதன் 2017 சாசனம் இந்த மொழியை நீக்கி சியோனிசத்திற்கு எதிரான எதிர்ப்பில் கவனம் செலுத்தியது. 1967 எல்லைகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு ஈடாக 10 ஆண்டு ஹுட்னா (போர் நிறுத்தம்) உட்பட இஸ்ரேலுடன் போர் நிறுத்தங்களை குழு முன்மொழிந்துள்ளது. ஜூலை 2024 இல் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் காஸாவில் ஹமாஸின் தலைவரான யஹ்யா சின்வார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஹமாஸின் தலைமை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. பின்னர் 2024 அக்டோபரில் இஸ்ரேலிய துருப்புக்களால் சின்வார் கொல்லப்பட்டார். முகமது சின்வார் உட்பட குழுவின் தற்போதைய தலைமை இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

ஈமானில் உறுதி :

பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வந்தாலும், ஹமாஸ் போராளிகள் தங்களுடைய ஈமானில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்கள். இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை குறையவே இல்லை. அவர்களுடைய வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருவது இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காஸா மக்களின் துயரங்களை துடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கிலும் ஹமாஸ் போராளிகள் தங்களுடைய உயிர்களையும் துச்சம் என மதித்து, தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள். காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்களும் ஈமானின் மிகமிக உறுதியாக இருந்து வருவதை, இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு அவர்கள் சொந்த மண்ணைவிட்டு செல்லாமல் இருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். காஸா இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து நிச்சயம் விடுபடும். அதற்கு முக்கிய காரணம், காஸா மக்களின் உறுதியான ஈமான் என்றே கூற வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

காஸாவிலிருந்து கிடைத்த நன்றி....!

 " கேரளப் பெண்ணுக்கு காஸாவிலிருந்து கிடைத்த நன்றி "

இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு ஆளான காஸா பல்வேறு துயரங்களை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுவீச்சு, மறுபக்கம் பசி, பட்டினி, தாகம் என காஸா மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் கனத்த இதயத்தையும் வெடிக்கச் செய்துவிடும். காஸா மக்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும், அவற்றை தடுத்து நிறுத்திவிட்டு, காஸா மக்கள் கடும் இன்னல்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என இஸ்ரேல் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. 

இதனால், பசி, பட்டினி, நோய், தாகம் என பல்வேறு துயரங்களை காஸா மக்கள் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், தெற்கு காஸாவின் புழுதி காற்று நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் அவசர தேவையாக தண்ணீர் இருந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தண்ணீர் குழாய்கள் உடைந்துவிட்டதால், காஸா மக்கள் தண்ணீர் கிடைக்காமல் நாள்தோறும் வேதனைகளை சுமந்துகொண்டே இருந்தார்கள். தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் அடையும் துன்பங்கள் ஏராளம். இந்த துயரங்களின் கதைகள் உலகத்தை எட்டிக் கொண்டே இருக்கிறது. எனினும் பலர் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். பலர் மனதில் வேதனை அடைந்து காஸா மக்களுக்கு உதவ முடியவில்லையே என்று துயரம் கொள்கிறார்கள். 

கேரள பெண்ணின் மனிதநேயம் :

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலித்தைச் சேர்ந்த ஸ்ரீரேஷ்மி உதயகுமார் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் தெற்கு காஸா மக்களின் துயரங்களை அறிந்து மிகவும் வேதனை அடைந்தார். காஸா மக்கள் எந்த வகையிலாவது உடனே உதவ வேண்டும் என அவர் துடித்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நேரமும் தாம் தண்ணீர் குடிக்கும்போது காஸா மக்களின் தாகம் தன்னுடைய மனக் கண் முன்வந்து சென்றுக் கொண்டே இருந்தது. 

இதுகுறித்து தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் ஸ்ரீரேஷ்மி கலந்து ஆலோசித்தார். எப்படியாவது காஸா மக்களுக்கு தண்ணீர் அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது. தண்ணீரின் அருமை குறித்தும் அதன் தேவை குறித்தும், அது கிடைக்காமல் போனால் சந்திக்கும் துயரங்கள் குறித்து அவர் நிறைய அனுபவம் பெற்று இருந்தால், காஸா மக்களின் துயரங்களை உடனே போக்க வேண்டும் என நினைத்தார். அந்த நினைப்பு அவரை அமைதியாக இருக்க விடவில்லை. உடனே காஸா மக்களின் தண்ணீர் துயரத்தை போக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். 

அதன்படி, சுமார் 250 பாலஸ்தீன் மக்களுக்கு வினியாகம் செய்ய 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரியை அவர் ஏற்பாடு செய்தார். இதன்மூலம் தனது மனிதநேயத்தை ஸ்ரீரேஷ்மி உதயகுமார் அருமையாக வெளிப்படுத்தினார். இந்த 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரி காஸா பகுதியை மக்களை சென்று அடைந்ததும் அந்த மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம். 

காஸாவிலிருந்து  கிடைத்த நன்றி :

காஸா மக்களின் மீது மனிதநேயம் கொண்டு, கேரள பெண் ஸ்ரீரேஷ்மி உதயகுமார் செய்த இந்த உதவிக்கு காஸாவில் இருந்து அவருக்கு நன்றி கிடைத்து பாராட்டு கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. காணொளிகள் மூலம்  ஸ்ரீரேஷ்மி உதயகுமார்  தெற்கு காஸா மக்கள் நன்றி தெரிவித்து பாதாகைகள் மூலம் நன்றி வசகங்களை எழுதி மிகுந்த ஆனந்தம் அடைந்து இருக்கிறார்கள். இந்த காணொளிகளை கண்டு கேரள மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்களும் கூட வியப்பு அடைந்து ஸ்ரீரேஷ்மி உதயகுமாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 

ஸ்ரீரேஷ்மி உதயகுமார்  அனுப்பி வைத்த 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரி மட்டுமே, காஸா மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியாது என்பது உண்மையாகும். எனினும், அவர் மேற்கொண்ட முயற்சி, காஸா மக்கள் மீது காட்டிய பரிவு, அன்பு அனைத்தும் மிகப்பெரிய நன்மை அளிக்கும் செயல் என்றே கூற வேண்டும். அந்த மனிதநேய சேவைக்காக ஸ்ரீரேஷ்மி உதயகுமார் யாரிடமும் நன்கொடை பெறவில்லை. வெறும் தனது மனிதநேயத்தை அழகிய செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  காஸா மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் மனிதநேயம் கொண்ட மக்கள் கூட, ஸ்ரீரேஷ்மி உதயகுமாரின் அழகிய செயலை காணொளி மூலம் பார்த்து மகிழ்ச்சி அடைந்து அவரது செயலை பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஸ்ரீரேஷ்மி உதயகுமார் மகிழ்ச்சி :

காஸா மக்களுக்கு தாம் அனுப்பி வைத்த தண்ணீர் கேரளப் பெண்ணுக்கு காஸாவிலிருந்து நன்றி கிடைக்கும் தொடர்பான காணொளி காட்சிகளை காணும் போது கேரள மக்கள் மட்டுமல்ல, மனிதநேய உதவி செய்த ஸ்ரீரேஷ்மி உதயகுமாரும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார். ஒரு சிறிய உதவி உலக மக்களின் கவனத்தை எப்படி கவரும் என்பதற்கு கேரள பெண் ஸ்ரீரேஷ்மி உதயகுமார் ஒரு நல்ல உதாரணமாக இருந்து வருகிறார். காஸா மக்களின் துயரங்களை கண்டு அவர் அடைந்த வேதனை, அவரை வீட்டில் சும்மா அமர்ந்து கொள்ள வைக்கவில்லை. மாறாக தண்ணீர் இல்லாமல் துன்பம் அடையும் காஸா மக்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று நினைத்து அதை செயலிலும் காட்டியுள்ளார். 

காஸாவில் துன்பம் அடையும் மக்கள் அனைவரும் முஸ்லிம் மக்கள் ஆவார்கள். அப்படி இருந்தும், மத ரீதியாக சிந்திக்காமல், மனிதநேய சிந்தனை மூலம் தனது அழகிய செயலை வெளிப்படுத்தி ஸ்ரீரேஷ்மி உதயகுமார் உண்மையில்  உலக மக்களுக்கு ஒரு அழகிய படிப்பினையை சொல்லித் தந்து இருக்கிறார். உலகில் யார் வேதனை அடைந்தாலும், துயரம் அடைந்தாலும் அவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். மத ரீதியாக சிந்தித்து யாரும் உதவி செய்ய முன்வரக் கூடாது. இதைத் தான் இஸ்லாம் உதவி செய்வதில், மனிதநேயம் மட்டுமே கட்டாய வேண்டும் என்று அழகிய முறையில் சொல்லி வருகிறது. அதைத் தான் உலக முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, October 3, 2025

காஸாவில் போர் நிறுத்த ஹமாஸ் போராளிகள் ஒப்புதல்....!

காஸாவில் போர் நிறுத்த அமெரிக்க அதிபரின் 20 அம்ச அமைதித் திட்டம்..! 

சில அம்சங்களுக்கு ஹமாஸ் போராளிகள் ஒப்புதல்.....!! 

டொனால்ட் டிரம்ப் வரவேற்பு....!!! 

வாஷிங்டன், அக்.04- காஸா மீதான இஸ்ரேல் நடத்தி வரும்  இரண்டு ஆண்டு இனப்படுகொலைப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்பின் 20 அம்ச அமைதித் திட்டிடத்தின் சில அம்சங்களை ஹமாஸ் போராளிகள் குழு ஏற்றுக் கொண்டு, மேலும் பேச்சுவார்தை மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளது. 

20 அம்ச அமைதித் திட்டம் :

காஸாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போய்விட்டனர். இத்தகைய சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தின. உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் குழுவினருக்கும் இடையே போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் பிரதமல் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். டிரம்ப்பின் இந்த அமைதி திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றன.

ஹமாஸ் போராளிகள் ஒப்புதல் :

இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தின் பல அம்சங்களை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.ஆனால் திட்டத்தின் சில கூறுகள் மேலும் பேச்சுவார்த்தைகள் தேவை என்றும் அந்த குழு கூறியுள்ளது.

ஹமாஸ் போராளிகளின் இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் காஸா மீது குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தாம் இஸ்ரேலுக்கு கட்டளையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும் ஹமாஸ் நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து டிரம்பின் காஸா திட்டத்தின் முதல் கட்டத்தை உடனடியாக செயல்படுத்த தயாராகி வருவதாகக் கூறிய பின்னர், காஸாவில் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைக்க இராணுவத்திற்கு இஸ்ரேல்  அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வரவேற்பு :

இதனிடையே, காஸாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார். தமது சமூக வலைத்தளப்பதிவில் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு குறிப்பிட்டத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நியாயமான முறையில் அமைதியை நோக்கி எடுக்கப்படும் எந்த முடிவுகளுக்கும் இந்தியா தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். 

இதேபோன்று, ஹமாஸ் போராளிகளின் முடிவு உலகின் பல நாடுகள் வரவேற்றுள்ளன. விரைவில் காஸாவில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

============================


Thursday, October 2, 2025

முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் நவி பிள்ளை பேட்டி....!

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு  இந்தியா ஆயுதங்களை வழங்குவது உறுதினால் அது மிகவும் வெட்கக்கேடானது.....!

மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் நவி பிள்ளை  பேட்டி....!!

காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்களை முழுவதும் அழிக்கும் நோக்கில், இஸ்ரேல் முறையாக திட்டமிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மீது மட்டுமல்லாமல், சுகாதார கட்டமைப்புகளை முற்றிலும் அழிக்கும் நோக்கில் இந்த தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலை குறித்து கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்று, சர்வதே விசாரணை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  ஆணையத்திற்குத் தலைமை தாங்கிய முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை நடத்தி வருகிறது என்பதை உறுதி செய்தார். 

செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு புரட்சிகரமான அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு சமம் என்று முடிவு செய்தது. மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் நவி பிள்ளை தலைமையில், ஆணையம் இரண்டு ஆண்டுகள் உன்னிப்பாக ஆதாரங்களைச் சேகரித்து சரிபார்த்து, 18 ஆயிரம் குழந்தைகள் உட்பட 60 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களின் உயிரிழப்புகளை  ஆவணப்படுத்தியது. மேலும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு, சுகாதார வசதிகள் மற்றும் காஸாவின் மிகப்பெரிய கருவுறுதல் மருத்துவமனையை முறையாக அழித்தது என்றும் உறுதி செய்தது. 

இத்தகைய சூழ்நிலையில், முனீப் கான் என்ற பத்திரிகையாளர் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவர்  நவி பிள்ளையிடம் நடத்திய சிறப்பு நேர்காணல் ஒன்றை, தி இந்து ஆங்கில நாளிதழ் 03.10.2025 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த நேர்காணலை மணிச்சுடர் நாளிதழ் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அழகிய தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அதை மணிச்சுடர் நாளிதழ் வாசர்களின் பார்வைக்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 

கேள்வி : காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை தொடர்ந்து, உங்களது முக்கியமான அறிக்கை சட்ட ரீதியாக நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக உங்களுடைய ஆதாரங்கள் குறித்து சர்வதேச சமுதாயம் என்ன நினைக்கிறது. இதன் உடனடியாக தாக்கங்கள் என்னவாக இருக்கும்?

பதில் : எங்களுடைய ஆணையம் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆதாரங்களை திரட்டி, அதை முழுமையாக ஆய்வு செய்து, ஒரு இறுதியாக முடிவுக்கு எட்டியது. எனவே சர்வதேச சமுதாயம் ஒருபோதும் தாமதம் செய்யாமல், ஐ.நா.வின் அறிக்கை மீது சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச  சட்டங்கள் இனப்படுகொலைகளை தடுக்க வேண்டும் என்று உறுதியாக செல்கிறது. இதைத் தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் சர்வதேச நீதிமன்றம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் எங்களது அறிக்கை காஸாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டு உண்மை என்பதை உறுதி செய்கிறது. எனவே உலக நாடுகள் இஸ்ரேல் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து காஸாவில் நடைபெற்றுவரும் இனப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். 

கேள்வி : உங்களது ஆணையம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குழந்தைகள் 18 ஆயிரம் பேரும், பெண்கள் 10 ஆயிரம் பேரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் என்ன செய்தியை உலகிற்கு சொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் யார் ? எத்தகைய வகையான போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன? உங்களது கண்டுபிடிப்புகளின் உண்மை என்ன?

பதில் :  காஸாவில் கொல்லப்பட்டவர்களின் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள், குழந்தைகள், மற்றும் மூத்த குடிமக்கள் ஆவார்கள். பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள் அவர்களின் சதித்திட்டங்களை வெளிச்சப்படுத்தியுள்ளது. ஹாமாஸ் போராளிகளை அழிப்பதற்காக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. மேலும் பிணைக்கைதிகளை விடுக்க வேண்டும் என்றும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பாலஸ்தீன் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே இருக்கிறது. 

கேள்வி : காஸாவின் வாழ்க்கை தரம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே ஆண்டில் 75 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏன் இந்த ஜனநாயக சீர்குலைவு ஏற்பட்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது?

பதில் : இஸ்ரேல் தனது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் ஆயுதங்கள் மூலம் மட்டுமல்லாமல், பட்டினி, ஊட்டச்சத்து குறைப்பாடு, சுகாதார குறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காஸாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை ஒரே ஆண்டில் மட்டும் இஸ்ரேல் செய்து முடித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கேள்வி : காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனை ஐ.சி.எஃப்.யின் அழிவையும் அறிக்கை ஆவணப்படுத்துகிறது. இது இனப்படுகொலை மரபுகளுக்குள் எவ்வாறு பொருந்துகிறது. மேலும் குழுக்களுக்குள் பிறப்புகளைத் தடுப்பதைத் தடை செய்கிறது?

பதில் : மருத்துவமனையில் இருந்து 4 ஆயிரம் கரு மற்றும் ஆயிரம் விந்துகளின் மாதிரிகளை திரட்டப்பட்டு இருந்தன. இவற்றை இஸ்ரேல் முற்றிலும் சீரழித்துவிட்டது. மேலும் கரு மற்றும் விந்துகளை சேமிக்கும் வங்கிகளையும் இஸ்ரேல் அழித்துவிட்டது. இதன்மூலம் பாலஸ்தீன மக்களின் பிறப்பு விகிதம் திட்டமிட்டு குறைக்கும் வகையில் காரியங்கள் அரங்கேற்றப்பட்டன. பாலஸ்தீன மக்களின் ஜனத்தொகை உயரக் கூடாது என்ற நோக்கதில் இஸ்ரேலிய நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டதை எங்களது ஆணையம் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. 

கேள்வி : கடந்த மே 2025 முதல், உணவு வினியோகம் செய்யும் மையங்களில் மட்டும் ஆயிரத்து 300 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எப்படி இனப்படுகொலையை இஸ்ரேல் செய்தது என அறிக்கையில் தெரிவித்து இருக்கிறீர்கள் ?

பதில் : நான் ஏற்கனவே சொல்லியது போல பாலஸ்தீன மக்களை கொல்லும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. காஸாவில் இருந்து பாலஸ்தீன மக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது இஸ்ரேலின் நோக்கமாகும். அப்பாவி மக்கள் மீது தாக்குதல், சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல் என பல்வேறு நிலைகளில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. 

கேள்வி : கடைசியாக உங்கள் அறிக்கையின்படி சர்வதேச சட்டத்தின் கீழ் எத்தகைய நடவடிக்கைளை உலக நாடுகள் எடுக்க வேண்டும். மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் எப்படி, வழக்கின் விசாரணை மேற்கொள்ள வேண்டும்?

பதில் :  சர்வதேச விசாரணை ஆணையத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விட வேண்டும்.  இனப்படுகொலைக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும். அத்துடன் இஸ்ரேல் மீது பல்வேறு சர்வேதேச நெருக்கடிகளை விதிக்க வேண்டும். சர்வதேச விசாரணைஆணையம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பல நாடுகள் இஸ்ரேலுக்கு வினியோகம் செய்யும் ஆயுதங்கள் மூலம் மட்டுமே காஸாவில் இனப்படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச விசாரணை ஆணையத்தில் ஒரு நீதிபதி இருப்பதில் பெருமைப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அல்லது இராணுவ ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் இந்தியா உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டால் அது அவமானம் மற்றும் கவலைக்குரிய விஷயமாகும். சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். 

- நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில் : சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், 

Wednesday, October 1, 2025

சவூதி சுகாதார அமைச்சகம் சாதனை....!

 " ஐ.நா. நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருது "

 சவூதி சுகாதார அமைச்சகம் வென்று சாதனை....! 

 உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பல்வேறு துறைகளில் சவூதி அரேபியா தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, சவூதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உலக முஸ்லிம்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் சவூதி அரேபியா தற்போது ஈர்த்து வருகிறது. சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து உலக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சவூதிக்கு வரும் வகையில் அனைத்து நவீன வசதிகளையும் அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இதனால், சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

புனித உம்ரா பயணம் மேற்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம்  மட்டும் உலகம் முழுவதும் இருந்து 5 கோடியே 35 லட்சம் முஸ்லிம்கள் மக்கா மற்றும் மதீனா புனித நகரங்களுக்கு வந்து சென்று இருக்கிறார்கள் என சவூதி அரேபிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு புனித நகரங்களிலும் அனைத்து நிலைகளிலும் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், எந்தவித சிரமமும் இல்லாமல் முஸ்லிம்கள் தங்களது புனித பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. 

மக்கா, மதீனா புனித நகரங்களில் மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் வகையில் சவூதி அரேபியா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் சுகாதாரம், பொருளாதரம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் சவூதியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, சுகாதாரத்துறையில் உலகமே வியக்கும் வகையில் சவூதி அரேபியா தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 

சவூதி சுகாதார அமைச்சகத்திற்கு பணிக்குழு விருது :

உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரம் மேம்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஐ.நா. நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடல் பருமன் மற்றும் தொற்றாத நோய்களை நிவர்த்தி செய்வதற்கான விரிவான மற்றும் புதுமையான கொள்கைகளை அங்கீகரிப்பதற்காக சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது. 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வின் போது நியூயார்க் நகரில் நடைபெற்ற 10வது ஆண்டு நண்பர்கள் பணிக்குழு கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு  ஆகியவற்றால் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதில் எம்.ஓ.எச்.-இன் செஹாட்டி செயலி; உலகின் மிகப்பெரிய செஹா மெய்நிகர் மருத்துவமனை; ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களை ஈடுபடுத்திய ஆரோக்கியமான நகரங்கள் திட்டம் மற்றும் வாக் 30 போன்ற சமூக முயற்சிகள்; சர்க்கரை-இனிப்பு பான வரியை விதிக்கும் ஊட்டச்சத்து கொள்கைகள் மற்றும் தொழில்துறை டிரான்ஸ் கொழுப்புகளை நீக்குதல்; மற்றும் விதிமுறைகள் முழுவதும் சுகாதாரக் கருத்துக்களை ஒருங்கிணைப்பதற்கான அனைத்து கொள்கைகளிலும் ஆரோக்கியத்திற்கான அமைச்சக குழு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையில் விரைவான முன்னேற்றம் :

இந்த அங்கீகாரம் சுகாதாரத் துறையில் விரைவான முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  அத்துடன் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை மேம்படுத்துவதற்கும் சவுதி அரேபியாவின் பங்கை வலுப்படுத்துகிறது என்று  எஸ்.பி.ஏ. அறிக்கை தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் சேஹா மெய்நிகர் மருத்துவமனை, உலகின் மிகப்பெரிய ஆன்லைன் மருத்துவ முயற்சியாக கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் கண்டுபிடிப்பு மூலம் சுகாதார அணுகல் மற்றும் செயல்திறனை மாற்றுவதில் முன்னணியில் உள்ளது.

சவூதி முழுவதும் 200 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வசதி, புவியியல் வரம்புகளை நீக்கி மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் நோயாளி பராமரிப்பை மறுவடிவமைத்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அளவுகோல்களின் கீழ், சவூதி இராச்சியத்தில் உள்ள பதினாறு நகரங்கள் "ஆரோக்கியமான நகரங்கள்" என்று பெயரிடப்பட்டுள்ளன. மேலும் 2 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மத்திய கிழக்கில் முதல் நகரங்களாக ஜித்தா மற்றும் மதீனா தனித்து நிற்கின்றன.

பாதுகாப்பு, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, நவீன பொது வசதிகளை வழங்குதல் மற்றும் வளர்ச்சி லட்சியங்களை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் சேவை செய்யும் உறுதியான யதார்த்தங்களாக மாற்றுவதற்கான நகரத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் இந்த சாதனைக்குக் காரணம். சுகாதாரத்துறையில் சவூதி அரேபியா உலகத்தின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், பல்வேறு விருதுகளை வென்று சாதனை புரிந்து வருகிறது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு மிகப்பெரிய சாதனையாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

விமர்சனம்....!

 ஆர்.எஸ்.எஸ்.

காங்கிரஸ் விமர்சனம்...!