Tuesday, April 28, 2015

நியாயமா மக்களே....!

தீர்ப்பு இப்படிதான் இருக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா மக்களே....!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இப்படிதான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி இருப்பது நியாயமா.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கூடாது என மறைமுகமாக சொல்கிறதா உச்சநீதிமன்றம்.

ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீதி நியாயம் வென்று விட்டது என கருத்து கூறும் திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீதி வென்று விட்டது என கூறுவாரா.

ஒன்று மட்டும் உறுதியாக புரிகிறது.

ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டால் தங்களால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியாது.

ஆட்சியை கைப்பற்றி மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர்த்த முடியாது என திமுக தரப்பு உறுதியாக நம்புகிறது.

அதனால்தான் ஜெயலலிதாவின் வழக்கில் திமுக அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது.

நாட்டில் எவ்வளவோ ஊழல் வழக்குகள் உள்ளன. ஏன் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் புகார்கள் உள்ளன.

ஊழலை ஒழிக்க திமுகவிற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் இந்த வழக்குகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பது ஏன் ?

இப்படி மக்கள் கேட்பது நம் காதுகளில் விழுகிறது.

நீதிமான்களே பதில் தேவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Saturday, April 25, 2015

சிதைக்கப்படும் உறவுகள் - 3

யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்....!


(சிதைக்கப்படும் உறவுகள் - 3)

மொல்லமாரி கேப்மாரி நாதாரி பேமானி இப்படி எந்த வார்த்தைகளிலும் அந்த கேடு கெட்ட மனிதனை அழைக்கலாம்.

ஏன் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் உள்ள பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகளில் அந்த துரோகியை அழைப்பதில் தவறு இல்லை.

சிரிக்க சிரிக்க பேசி பலரின் மூளையை சலவை செய்து அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து இருக்கிறான் இந்த பாவி.

இந்த மதி கெட்ட மனிதனின் வலையில் வீழ்ந்து வீழ்ச்சியை சந்தித்தவர்களில் நானும் ஒருவன்.

தினமும் காலை நேரத்தில் செல்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் வரை எனக்கு நன்மை செய்வது போன்ற பாணியில் பேசுவான்.
அவனது அந்த பேச்சு என் மீது அந்த பொறம்போக்கிற்கு மிகப் பெரிய அக்கறை இருப்பதாக காட்டியது

அதனால்தான் அவனை முழுமையாக நம்பி விட்டேன்.

பின்னர்தான் எனக்கு அவனுடைய உண்மையான முகம் தெரிய வந்தது.

அதற்குள் என்னுடைய முன்னேற்றத்திற்கு வேட்டு வைக்கப்பட்டு விட்டது.

எல்லாம் அந்த துரோகியை உண்மையாக நம்பியதுதான் காரணம்.
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இவன் சிரிக்க சிரிக்க பேசி அவர்களின் மூளையை சலவை செய்து அதன்மூலம் அவர்களது வளர்ச்சியை தடுத்து இருக்கிறான்.

இந்த தகவல் நண்பர் ஒருவர் மூலம் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது.

எனவே நண்பர்களே உங்களிடம் சிரிக்க சிரிக்க பேசி உங்கள் மீது உண்மையாகவே அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் நபர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள்.

குறிப்பாக ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்கள் அதே துறையில் உள்ள இதுபோன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இல்லாவிட்டால் உங்களது வளர்ச்சி முன்னேற்றம் தடுக்கப்படும்.

ஏன் நல்ல வாய்ப்புகள் பின்னர் கிடைக்காமலேயே போய்விடும்.

அந்த பொறுக்கியை உண்மையாக நம்பியதால் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனுபவம் இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Friday, April 17, 2015

காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!

காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!

இயக்குநர் மணிரத்னம்.....!!




உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை.

கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது.

ஆகையால் காதலை வைத்து திரைப்படம் பண்ணுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

========================


தப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்....!

இயக்குநர் மணிரத்னம்.....!!

படம் தோல்வி அடைந்தால் அதை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்.

படத்தில் தப்பு இருக்கலாம். ஆனால், நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக்கியம்.

தப்பு செய்வதற்கு பயப்படாமல்தான் படம் பண்ணுகிறோம்.

தப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.

அனைவருக்குமே இறங்கு முகம் வரும்.

அதை பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும்.

ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால் எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன். அவ்வளவுதான்.

=======================

மனிதரில் இத்தனை நிறங்களா...!

மனிதரில் இத்தனை நிறங்களா...!


ஏக இறைவனின் படைப்புகளில் மனித படைப்பு மிகவும் அற்புதமானது.

வித விதமான மனிதர்கள். ஆனால் அனைவருக்கும் தனித்தனி பண்புகள். குணங்கள். திறமைகள்.

மனிதரில் இத்தனை நிறங்களா என ஆச்சரியப்படும் அளவுக்கு இறைவன் அற்புதம் நிகழ்த்தியுள்ளான்.

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.



கலை துறையில் ஆர்வம் கொண்ட எழிலன் ஒரு பல்கலை வித்தகர்.
சாதிக்க துடிக்கும் நல்ல பண்பாளர்.

அவரிடம் இருக்கும் பல திறமைகளை கண்டு நான் வியப்பு அடைவது உண்டு.

இறைவனின் படைப்பில் இத்தனை அற்புதங்களா என நினைப்பது உண்டு.

பல திறமைகள் கொண்ட எழிலன் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Thursday, April 16, 2015

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஜூம்மாவிற்காக சென்னை தி.நகர் அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.

அண்ணா அறிவாலயம் எதிரே இருக்கும் விஜயராகவ ராவ் சாலையில் புகழ் பெற்ற இந்த பள்ளிவாசல் உள்ளது.

எளிய உர்துவில் குறிப்பிட்ட ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மவுலவி ஆற்றிய ஜூம்மா பேருரையை இன்னும் மனது அசை போட்டுக் கொண்டே இருக்கிறது.

தமது உரையின் இறுதியில் மவுலவி ஓர் அழகிய பிரார்த்தனை செய்தார்.
உலக அமைதிக்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏக இறைவனிடம் துவா செய்தார்.

இறைவா இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வழியை ஏற்படுத்தி தா.

நாம் அனைவரும் இந்த நாட்டின் மக்கள். எனவே நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற எங்களுக்கு சக்தியை தா.

முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்முடைய பிற சமுதாய மக்களை உண்மையாக நேசித்து அவர்களுடன் பாசத்துடன் நேசத்துடன் பழகி வாழ வழியை ஏற்படுத்தி தா.

நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றத்தை தா.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைய முயலும் சக்திகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று.

உலக அளவில் இந்தியாவின் புகழ் பரவ வழியை ஏற்படுத்தி தா.

இப்படி ஓர் அழகிய பிரார்த்தனையை மவுலவி செய்த போது ஜூம்மா தொழுகைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆமீன் என்று முழக்கம் எழுப்பினர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

பயம்....!

பயம்....!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகி விட்டால் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதி.

ஏன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவர் தலைமையிலான அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தற்போது திமுக தரப்பு செய்து வரும் சில செயல்களின் மூலம் இப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடம் மாற்றம் செய்யக்கூடாது என திமுக தரப்பு போர்க்கொடி தூக்கி இருப்பதன் மூலம் எங்கே ஜெயலலிதா விடுதலை ஆகிவிடுவாரோ என்ற பயம் திமுகவிற்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது.

மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும் கனவு கலைந்து போகும்.

எனவேதான் ஜெயலலிதா வழக்கில் திமுக மிகவும் அக்கறையுடன் இறங்கியுள்ளது.

ஆனால் திமுக தரப்பு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்து வருகிறது.

மக்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிதான் தமிழக தேனீர் கடைகளில் ஓட்டு போடும் மக்கள் விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நடத்தும் இந்த விவாதங்களை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது சரி என தெரியவரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

காலத்தை வென்றவன்....!

காலத்தை வென்றவன்....!



இளைஞர் கதீர் சரவணனை நான் மக்கள் தொலைக்காட்சியில் பணி புரிந்த போது முதல் முறையாக சந்தித்தேன்.

FTP பிரிவில் மிகவும் துடிப்புடன் அவர் பணி ஆற்றியது என்னை வெகுவாக ஈர்த்தது.

அத்துடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் துடிப்பு சரவணனிடம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

ஓய்வு நேரத்தில் படத்தொகுப்பு கலையை அவர் கற்றுக் கொண்டார்.

மக்கள் தொலைக்காட்சியிலேயே தமக்கு படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என சரவணன் எதிர்பார்த்தார்.

ஆனால் பல காரணங்களால் அது நிறைவேறவில்லை.

பொறுமை காத்தார் சரவணன். பலன் இல்லை.

பிறகு அவர் சிறிதும் கூட தயங்கவில்லை.

தனது பதவியை துறந்து கிராமத்திற்கு செல்வதாக அவர் அலுவலகத்தில் சொன்னபோது அனைவரும் சிரித்து விட்டோம்.

பின்னர் தனது கடுமையான முயற்சியால் சில தொலைக்காட்சிகளில் பணியாற்றிய சரவணன் இன்று உலகப் புகழ் பெற்ற சன் தொலைக்காட்சியில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்து வருகிறார்.

தமிழக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஓர் இளைஞன் தனது கடும் முயற்சியால் இன்று வெற்றி கனியை பறித்துள்ளார்.

அதுவும் போட்டி பொறாமை அரசியல் செய்து மற்றவர்களை வீழ்த்தி மகிழ்ச்சி அடைதல் என அனைத்து கெட்ட குணங்களும் நிறைந்த மனிதர்கள் அதிகம் கொண்ட ஊடகத்துறையில் சரவணன் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
காலத்தை வென்ற கதீர் சரவணனுக்கு வாழ்த்துக்கள்.

சரவணன் இன்னும் சாதிக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.