Wednesday, October 23, 2024

'தி வயர் இணையதள ஊடகம்' கண்டனம்...!

"தனது மோசமான அயோத்தி தீர்ப்புக்காக கடவுளைக் குறை கூறக்கூடாது" நீதியரசர் சந்திரசூட்டிற்கு 'தி வயர் இணையதள ஊடகம்'  கண்டனம்.....!

வரலாற்று புகழ்பெற்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய நிலத்தை  இந்து கோவிலைக் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதேநேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியை மசூதிக்கு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்து அண்மையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "பெரும்பாலும் எங்களிடம் ஏராளமான வழக்குகள் உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்  இந்த வழக்குகள் குறித்து   நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கில் மூன்று மாதங்களாக என் முன்னே இருந்த அதேபோன்ற நிலை ஒன்று நடந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வேண்டினேன்" என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "என்னை நம்புங்கள், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்" என்று என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சர்ச்சைக்குள்ளான கருத்து:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த இந்த கருத்து நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. தலைமை நீதிபதிக்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இணையதள ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் 'தி வயர்' இணையதள ஊடகத்தில், சித்தார்த் வரதராஜன் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் பல அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார். 

அதன்படி, முதலாவதாக, தலைமை நீதிபதி சந்திரசூட்டும், அயோத்தி பெஞ்சும் நிச்சயமாக சர்ச்சைக்கு "தீர்வைக் காணவில்லை" என்று சாடியுள்ள சித்தார்த் வரதராஜன், தற்போது தலைமை நீதிபதி வேறுவிதமாக நடிப்பது நேர்மையற்றது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், செய்தது, மசூதியை சட்டவிரோதமாக இடித்ததில் சம்பந்தப்பட்ட சக்தி வாய்ந்த கட்சிக்கு ஆதரவாக இருப்பதுதான். இடிப்பு ஒரு கொடூரமான குற்றம் என்று நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்கள் சட்டவிரோதமாக சுத்தப்படுத்திய நிலத்தை நாசக்காரர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் உடைமையாக்க அனுமதிப்பதில் எந்த தவறும் இல்லை என்பது ஒரு தீர்வாகக் கருதப்பட முடியாது.

மேலும் புதிய மசூதிக்கு அயோத்திக்கு வெளியே ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி சந்திரசூட் அளித்த உத்தரவு, ஒருவித தெய்வீக நீதியைப் பிரதிபலிக்கிறது என்பதை நம்ப வேண்டும் என்று நீதிபதி சந்திரசூட் விரும்பினால் அது நகைப்புக்குரியது. முஸ்லிம்கள் வழிபடக்கூடிய மசூதி உள்ளதா என்பது அல்ல, மாறாக குண்டர்கள் ஒரு நபரையோ அல்லது சமூகத்தையோ வன்முறையில் அப்புறப்படுத்துவது அனுமதிக்கப்படுமா என்பதுதான் பெஞ்ச் முன் உள்ள பிரச்சினை. இந்திய நீதித்துறையின் நித்திய அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அயோத்தி பெஞ்ச் அந்த கேள்விக்கு சாதகமாக பதிலளித்தது.

 வழக்குகளின் தீர்ப்புகள் - கேள்விகள்:

இரண்டாவதாக, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991, கடுமையான தடையை மீறி ஞானவாபி சர்ச்சையை மீண்டும் திறக்க அவர் ஏன் உதவினார் என்பதை விளக்கலாம். ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த வழிபாட்டுத் தலத்தின் தன்மையை மாற்றியமைப்பது பற்றி. இந்துத்துவா குழுக்கள் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது உரிமைகோரல்களை எழுப்பும் போது, ​​நமது நீதிமன்ற அறைகளில் சந்தேகத்திற்கு இடமின்றி பின்பற்றப்படும் தெய்வீகத்தால் விதிக்கப்பட்ட தீர்வுகளுக்கு இது ஒரு சிறிய உதாரணமாகும். தலைமை நீதிபதி தனது ஓய்வுக்குப் பிறகு, என்னவாக இருக்க  வேண்டும் என உரக்க யோசித்துள்ளார்.  இதற்கு ஆச்சரியப்படவோ அல்லது கண்டுபிடிக்க நீண்ட நேரம் காத்திருக்கவோ தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளின் நூற்றுக்கணக்கான அழிவுகரமான கூற்றுகளுக்கு அவர் கதவைத் திறந்துள்ளார். அந்த வழக்குகளின் தீர்ப்புகள் நீதிபதி சந்திரசூட் நியமித்த புதிய "நீதி தெய்வத்தின்" காலடியில் மரியாதையுடன் வைக்கப்படலாம்.

முஸ்லிம் நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுகொள்வார்களா?

மூன்றாவதாக, அசல் தகராறில் ஒரு தரப்பினராக இந்து கடவுள் இருந்தபோது, ​சர்ச்சைக்குத் தீர்வு காண உதவுமாறு நீதிபதி சந்திரசூட் எவ்வாறு "தெய்வத்தை" கேட்டிருக்க முடியும்? இதுகுறித்து ஒரு கணம் சிந்தியுங்கள். ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்து இடையே ஏற்பட்ட கடுமையான தகராறு தொடர்பான வழக்கை, முஸ்லிம் நீதிபதி ஒருவர் விசாரித்து,  முஸ்லிம்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பை வழங்கிவிட்டு, இந்த வழக்கில்    'தீர்வு' அல்லாஹ்விடம் இருந்து வந்ததாகச் சொன்னால், என்ன நடக்கும்? தலைமை நீதிபதியின் நேர்மையைக் கண்டு சிலிர்த்துப் போன இந்துத்துவா அரசியல்வாதிகள்தான், இதற்கு என்ன பதில் கூறுவார்கள்?

நான்காவதாக, நீதிபதி சந்திரசூட், அயோத்தி விவகாரத்தில் வழங்க உதவிய தீர்ப்பு சட்டரீதியாக நியாயமற்றது என்பதை அறிந்ததால் தான், இந்த வகையான ‘தெய்வீக’ பகுத்தறிவு மற்றும் மகத்துவத்தில் அடைக்கலம் தேடுகிறார் என்பதே உண்மை. அவ்வாறு செய்வதன் மூலம், அவர் நிச்சயமாக ‘தெய்வத்துக்கும்’ பெரும் அநீதி இழைக்கிறார். சர்ச்சைக்குரிய தீர்ப்பு யாருடைய மீது சுமத்தப்படுகிறதோ. அது உண்மையில் சிறிய மனிதர்களின் கைவேலையாக இருந்தபோது, தங்களுடைய குறைபாடுள்ள பகுத்தறிவுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட் தனது சொந்த முடிவுகளுக்கு பொறுப்பேற்க கற்றுக்கொள்வதற்கு இதுவே சரியான நேரம்.

நீதி வழங்க உறுதிமொழி:

ஐந்தாவது, நீதிபதிகள் அரசியலமைப்பு மற்றும் சட்டப் புத்தகத்தில் வகுத்துள்ள சட்டங்களின்படி நீதி வழங்க உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்கள் தெய்வங்கள் அல்லது புனித நூல்களை நம்புவதற்கு சுதந்திரமாக உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் கட்டளைகளையும் வாய்மொழி ஞானத்தையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் நீதியை வழங்குவது என்று வரும்போது, ​​எந்த தெய்வமும் அரசியலமைப்பிற்கு மேலே இருக்க முடியாது. ஒரு முடிவின் ‘மூலமாக’ இருக்க முடியாது. ஆம், கடவுள் நம்பிக்கை சில சமயங்களில் கடினமான முடிவுகளை எடுக்கும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கும். பாபர் மசூதியை இடித்த மனிதர்கள் மற்றும் அமைப்புக்கள் அந்த நிலத்தின் கட்டுப்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தீர்ப்பளிக்க அளப்பரிய தைரியம் தேவைப்பட்டிருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அயோத்தி பெஞ்ச் தீர்ப்பில் எந்த தைரியமும் இல்லை. மத்தியில் ஆளும் கட்சி தேர்தல் முட்டுக்கட்டையாக ராமர் கோயிலுக்கு அரசியல் ரீதியாக அவநம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், கோயில் கட்டப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதற்கு தலைமை நீதிபதி உதவியுள்ளார். 

- நன்றி:  சித்தார்த் வரதராஜன், தி வயர் இணையதள ஊடகம்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

Saturday, October 19, 2024

நம்பிக்கை....!

 வலிமையான நம்பிக்கை....!

தமிழகத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்துளிலும் ஒவ்வொரு ஜூம்மா தொழுகைக்கு முன்பு இமாம் சாஹிப் அழகிய தமிழ் அல்லது உர்தூ மொழியில் பயான் (பிரசங்கம்) செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஜூம்மா சொற்பொழிவுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஒருசிலரை தவிர மற்ற இமாம்கள் அனைவரும் மிக அற்புதமான முறையில் பயான் செய்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாறு, திருக்குர்ஆன் போதிக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி அழகிய இஸ்லாமிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அதன்மூலம் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த வாழ்க்கை நெறியை நபித் தோழர்கள் எப்படி உறுதியாக கடைப்பித்தார்கள். அதன்மூலம் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் படிப்பினை என்ன? இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளாதாரம், இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை, இஸ்லாமிய சமூக மேம்பாடு என பல்வேறு தலைப்புகளில் அழகிய முறையில் ஆலிம் பெருமக்கள் ஆற்றும் சொற்பொழிவுகளை கேட்கும்போது, உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைகிறது. அன்றைய தினம் முழுவதும் ஜூம்மாவில் மெளலவி சாஹிப் ஆற்றிய உரை அடிக்கடி மனக் கண் முன்பு வந்து செல்கிறது.

வலிமையான நம்பிக்கை:

வழக்கம்போல் இந்த வாரம் ஜூம்மா தொழுகைக்கு சேப்பாக்கம் மஸ்ஜித்-எ-குத்தூஸியாவிற்கு சென்றிருந்தேன்.

இமாம் சாஹிப் எளிமையான உர்தூ மொழியில் ஜூம்மா உரை நிகழ்த்தி கொண்டிருந்தார்.

இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை, இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

குறிப்பாக, முஹரம், ஸபர் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களைச் செய்வது சரியல்ல என்ற தப்பான எண்ணங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதை சுட்டிக் காட்டி பேசிய இமாம் சாஹிப், நமது நம்பிக்கையை வலிமையானதாக மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நம்பிக்கை வலிமையாக இருக்க வேண்டும் எனில் முஸ்லிம்கள் தங்களுடைய செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை முறையில் மூட நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏக இறைவன் வழங்கிய அனைத்து நாட்களும் நல்ல நாட்களே. கெட்ட நாள், கெட்ட நேரம் என்பது இஸ்லாத்தில் ஒருபோதும் இல்லை. அனைத்து நாட்களிலும் ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு காரியங்களை தொடங்க வேண்டும். அனைத்துப் பணிகளையும் ஏக இறைவன் இலேசாக்கி வைப்பான் என்று உறுதியாக நம்ப வேண்டும். இப்படி நம்பிக்கை கொள்வதுதான் வலிமையான நம்பிக்கையாகும். இன்றில் இருந்து உங்கள் ஈமானை உறுதிப்படுத்த உங்களை தயார்படுத்திக் கொண்டு  பணிகளை ஆற்றுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வலிமையான நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை கொண்டு வந்து நிறுத்தும் என இமாம் சாஹிப் கூறியதை கேட்டபோது உண்மையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. சிந்தனைகள் அழகிய முறையில் சிறகடித்து பறந்தன.

வேதனை அளிக்கும் செயல்:

இமாம் சாஹிப் வலிமையான நம்பிக்கை குறித்து அழகிய உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை கவனித்தேன்.

அவர் வாட்ஸ்-அப்பில் சார்ட் செய்து கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பள்ளிவாசலில் ஜூம்மாவின் கண்ணியத்தை பின்பற்றாமல், ஜூம்மா உரை கேட்பதை விட, வாட்ஸ்-அப், முகநூலில் அதிக கவனம் செலுத்தும் இதுபோன்ற சில  சகோதரர்களை என்ன செய்வது?

அரை மணி நேர சொற்பொழிவை கேட்பதை விட, சமூக வலைத்தளத்தில் மூழ்கிவிடுவது சரியான செயலாக இருக்குமா? ஜூம்மா தொழுகைக்குப் பிறகு, வீட்டிற்கு சென்று வந்த தகவல்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யலாமே.

இதுபோன்ற செயல்கள் மூலம் எப்படி வலிமையான நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மலரும்? வலிமையான நம்பிக்கை மலர வேண்டும் எனில், முஸ்லிம்கள் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்மூலம் மட்டுமே பலன் கிடைக்கும்.

இப்படி சிந்தனைகளை மனதில் அசைப் போட்டுக் கொண்டு, மஸ்ஜித்தில் வெளியே வந்தேன். அத்துடன் அடுத்த ஜூம்மாவில் மெளலவி சாஹிப் ஆற்ற போகும் உரை கேட்க மனம் ஆவல் கொண்டது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

திராவிட மாடல் அரசு....!

மழைக்காலமும், திராவிட மாடல் அரசும்......!

வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு (அக்டோபர் மாதத்தில்)  கனமழை பெய்தது. இதேபோன்று, மாநிலத்தின் ஒருசில மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. எனினும், கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம், மற்றும் வானிலை ஆய்வாளர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த காரணத்தால், தமிழ்நாடு அரசு, கனமழையில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கனமழையின்போது, மக்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினார்கள். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு. சேகர் பாபு உள்ளிட்டோரும் பம்பரமாக சுற்றி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மழை நீர் தேங்கும் இடங்களில் முன்கூட்டியே சென்று, அங்கு தண்ணீர் தேங்காத வகையில், தீவிர பணிகளில் ஈடுபட்டு, அதிகாரிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். 

இப்படி, திராவிட மாடல் அரசு உரிய நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தால், சென்னையில் கடந்த 15 ஆம் தேதி, சுமார் 20 சென்டி மீட்டர் மழை பெய்தபோதும், பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. ஒருசில இடங்களில் தேங்கிய மழை நீரை கூட, உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு, தங்களுடைய பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்தார்கள். இவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய சேவையை சென்னை மாநகர மக்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள். 

மாநகராட்சியின் பணிகள்:

சென்னையில் மழைக்காலத்தில் மாநகராட்சி எத்தகை முறையில் சிறப்பாக பணியாற்றியது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சென்னையில் 300 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைத்து வரப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மையங்களில் குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. நிவாரண மையங்களில் உணவு வழங்க, 98 மைய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 388 அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக போக்குவரத்து சீராகப்பட்டது.  542 இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. சென்னையில் மழை காரணமாக சாய்ந்த 77 மரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. மீட்புப் பணிகளில் 103 படகுகள் பயன்படுத்தப்பட்டன. 213 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாங்கள் நடைபெற்றன. 

இப்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையின்போது, மக்கள் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழை பெய்தபிறகு, மேற்கொண்ட, பல அதிரடி நடவடிக்கைகள் மூலம், மழையால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சிய மக்கள், எந்தவித பாதிப்பும் இல்லாமல், வழக்கம் போல தங்களுடைய பணிகளை செய்ததால், நிம்மதி அடைந்தனர். 

மக்கள் போற்றும் மகத்தான பணிகள்:

சென்னையில் கடந்த 13ஆம் தேதி முதல், 18ஆம் தேதி வரை, அதாவது கனமழை தொடங்குவதற்கு முன்பு, அதைத் தொடர்ந்து மழை கொட்டியபோதும், பின்னர், மழை ஆபத்து நீங்கியபிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், இரவு பகல் பராமல் ஆற்றிய சேவையை பாராட்டாத மக்களே இல்லை என்று கூறலாம். சென்னையில் பொதுவாக மழைக்காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, அந்த பகுதிகளில் எப்போதும் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கும். அந்த பகுதிகளில் நிலைமை சீராக பல நாட்கள் ஆகும். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், அரசு மேற்கொண்ட பல அற்புதமான பணிகள் மூலம், மழைப் பெய்த சில மணி நேரத்தில், மழை நீர் தேங்கிய பகுதிகளில் நிலைமை சீராக மாறிவிட்டதைக் கண்டு, மக்கள் வியப்பு அடைந்தனர். இதுபோன்ற, ஒரு நிலைமையை தங்களுடைய வாழ்நாளில் தாங்கள் இதுவரை கண்டதில்லை என்றும் பலர் மகிழ்ச்சியுடன் கூறி, திராவிட மாடல் அரசுக்கு நன்றி கூறிக் கொண்டனர். 

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நிலைமையை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் பாலாஜி நகரில், மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிப் பொருட்களை வழங்கினார். மேலும் மழைக்காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களை கண்ணியப்படுத்தி, அவர்களுடன் இணைந்து தாமும், மதிய உணவு சாப்பிட்டு, தம்முடைய அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார். 

இதேபோன்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மீட்புப் பணிகளில் இரவு பகல் என பாராமல், உழைத்துக் கொண்டே இருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

கனமழையின்போது, சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு தூய்மைப் பணியாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தினார்கள். 

ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும்:

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தால், அரசுக்கு மிகப்பெரிய கெட்டப் பெயர் ஏற்படும் என கற்பனை செய்துகொண்டு, சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் செயல்பட்டன. ஒருசில இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மிகப்பெரிய பாதிப்புகள் போன்று, புகைப்படம் எடுத்து பொய்யான தகவல்களை செய்தியாக பரப்பின. இதேபோன்று அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், அரசு சரியாக செயல்படவில்லை என பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், மழை நீர் தேங்காமல் இருந்ததே, வெள்ளை அறிக்கை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்து, எதிர்க்கட்சிகளின் பொய்யான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இதேபோன்று, சில ஊடகங்கள், பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க நினைத்தன. சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.  ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், இனி மழைக்காலத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற ஒரே இலக்குடன் அரசு செயல்பட்டதால், போலியான, பொய்யான தகவல்களை, செய்திகளை ஒருபோதும் நம்பாமல், மக்கள் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி, மழைக்காலங்களில் ஒருபோதும் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அரசுக்கு குவியும் பாராட்டுகள்:

மழைக்காலத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆற்றியப் பணிகள் அற்புதமானவை என்பதால், அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எந்த பகுதிக்குச் சென்றாலும், திமுக மீது பற்று இல்லாதவர்கள் கூட, திமுகவை விரும்பாதவர்கள் கூட, உண்மையில் திமுக. அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களை மழை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துவிட்டது என பாராட்டு தெரிவிப்பதை நாம் நேரில் காண முடிந்தது. பாராட்டு மொழிகளை கேட்க முடிந்தது. ஒரு அரசு என்பது எப்படி, செயல்பட வேண்டும்? குறிப்பாக பேரிடர் காலங்களில் எப்படி பணியாற்ற வேண்டும்?

என்பதற்கு தற்போதைய திராவிட மாடல் அரசே ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும், ஒரு அரசு எல்லோருக்குமான அரசாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பணிகளை ஆற்றி வருகிறார். அதற்கு பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது சென்னையில் பெய்த மழையினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாம்ல் இருக்கும் வகையில் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகள், ஆற்றிய பணிகள் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து இருக்கும். எனவே, மக்கள் திராவிட மாடல் அரசை எப்போதும் விரும்புவார்கள். மழைக்காலத்தில், மக்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல், பாதுகாத்த திமுக அரசுக்கு நாமும் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறோம். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, October 17, 2024

அரசியல்....!

அரசியலை கற்றுக்கொள்ளுங்கள்

அரசியலை உற்று நோக்குங்கள்

அரசியலை புரிந்து கொள்ளுங்கள்

அரசியல் தெளிவடையுங்கள்

ஏனெனில், உங்களுக்கு ளது கிடைக்க வேண்டும், கிடைக்க கூடாது என்பதை அரசியல் தான் தீர்மானிக்கிறது.
திட்டக்குழு துணைத் தலைவர்DrJeyaranjan.



Tuesday, October 15, 2024

தந்தையின் பங்கு.....!

 

குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு

 


குழந்தைகளின் வளர்ப்பில் தாய்-தந்தை ஆகிய இரண்டு பேருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு. குழந்தைகள்  பெற்றோரின் பொறுப்பு என்பது உண்மையான வார்த்தையாகும். குழந்தையின் கல்வி, ஒழுக்கம், வளர்ச்சி ஆகியவற்றில் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று, தந்தையின் பங்கும் முக்கியமானது. இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான பணியாக மாறிவிட்டது. ஏராளமான தகவல்கள் மற்றும் டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் நுட்பமான முறையில் நன்கு பயிற்றுவித்து வளர்த்தனர். 

குடும்பத்தில் உள்ள பெண்கள், தங்கள் தாய், அத்தை, அத்தை, பாட்டி மற்றும் கொள்ளுப் பாட்டிகளுடன் தங்கி கல்வி கற்றனர். சிறுவர்கள் தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் அத்தை, மாமா ஆகியோரிடம் கல்வி கற்றதால், குடும்ப அமைப்பு நிலையானதாக இருந்தது. பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளைத் தவிர வேறு எந்த அக்கறையும் இல்லை என்ற நிலை அப்போது இருந்தது. இப்போது காலம் வேகமாக மாறிவிட்டது, மாறிவரும் காலத்திற்கேற்ப குழந்தைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. ஒரு குழந்தை நல்ல குழந்தையாக, ஒழுக்கமான குழந்தையாக வளர தந்தையின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

அற்புதமான அமைப்பு:

 

குழந்தை பெற்றோரின் பாதுகாப்பான கரங்களில் வளர்க்கப்பட வேண்டும் என்பது ஏக இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மனிதர்களைத் தவிர, மற்ற உயிரினங்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவைக் கண்டுபிடிக்க மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் மனித குழந்தை தனது பெரியவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறது. குழந்தையின் உடல், மன, உணர்ச்சி, அரசியல் உணர்வு மற்றும் பொருளாதார பரிணாமம் மட்டுமல்லாமல், குழந்தைகளின் கல்வியில் தந்தையின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் வளர்ச்சி, தார்மீக பயிற்சி மற்றும் சமூக திறன்களின் வளர்ச்சி ஆகியவற்றில் தந்தையின் பொறுப்பு, கவனிப்பு அடிப்படையாக கொண்டது.

குழந்தைகள், தங்கள் தந்தையிடம் அதிக பற்று கொண்டவர்கள். சமூக உறவுகளை பேணுதல், பிற உறவினர்களுடன் நல்ல நடத்தை, கணக்கு மற்றும் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, வேலையில் நேர்மை, உண்மை, இரக்கம். பண்பாடு, பழக்கவழக்கங்களில் ஒழுக்கம், தந்தையின் வாழ்க்கை தொடர்பான அனைத்தையும் குழந்தைகள் கடைப்பிடிப்பது வழக்கமான ஒன்றாகும். எனவே தந்தை ஒரு முன்மாதிரியான தந்தையாக இருக்க வேண்டும். வீடுகளில் நல்ல சூழ்நிலைகளை உருவாக்கி, குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் முன்பு, இழிவான வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களை தந்தை கைவிட்டு விட வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

தந்தையின் முன்மாதிரி:

பெற்றோரின் நடத்தை குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரி. அவர்கள் தங்கள் தந்தையின் பழக்கவழக்கங்கள், பேச்சு மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். தந்தையின் நடத்தை மற்றும் செயல்களை அவர்கள் சிறந்த முறையில் கவனிக்கிறார்கள். அவர்கள் செயலற்ற தன்மையைக் கண்டால், பெற்றோர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அவர்கள் உடனடியாக ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். எனவே குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரி பெற்றோராக தாய்-தந்தை இருக்க வேண்டும்.

அன்பும் பாதுகாப்பும்:

ஒரு தந்தை குழந்தைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தருகிறார். தாய், சகோதரி, மனைவி மற்றும் மகளின் பாதுகாப்பு உணர்வுக்கு குடும்பத்தின் வலுவான பாத்திரம் குடும்பத்தின் தலைவராக இருக்கும் தந்தை தான் என்பது நிஜமான உண்மையாகும். ஒரு தந்தையின் செயல்பாடுகள் மூலம், குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு வலுவடைகிறது.

கல்வி வழிகாட்டுதல்:

குழந்தைகளின் கல்வியில் தந்தை முக்கிய பங்கு வகிக்கின்றார். குழந்தைகளின் கல்விச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க தந்தை உதவுகிறார். இப்போதெல்லாம், பல தந்தைகள் நிச்சயமாக குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் இந்த அக்கறையுடன் தலைமையும் சேர்ந்தால், குழந்தைகளில் பொறுப்பு உணர்வு உருவாகிறது. வீடுகளில் புத்தகங்கள் படிக்கும் சூழல் இருக்க வேண்டும். அறிவைத் தேடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். வீண் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உண்மையான அறிவை நோக்கி வழிகாட்ட வேண்டும். கல்விச் சிக்கல்களைத் தீர்ப்பதில் முதன்மையாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை முன்வைப்பவராக தந்தை இருக்க வேண்டும். இது குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கும்.

தார்மீகப் பயிற்சி:

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லதையும் கெட்டதையும் வேறுபடுத்திப் பார்க்கவும், அவர்களிடம் தார்மீக விழுமியங்களை வளர்க்கவும் கற்பிக்கிறார்கள். சிறுவர்களுக்கு தாயைக் காட்டிலும் தந்தையால் சிறப்பாகக் கற்பிக்க முடியும். குழந்தை தனது தாய், சகோதரி மற்றும் மனைவி மீதான மரியாதையால் தந்தையின் பாத்திரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் நல்ல வழியில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்கள்:

 


குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக்கு தந்தை குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். வெறும் பணத்தை ஒப்படைத்து, பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள் என்று கற்பனை செய்து, அவர்களின் பள்ளி முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அல்லது செலவின உணர்வைக் கொடுப்பது, இழிவான வார்த்தைகளைச் சொல்வது, மற்ற சிறுவர், சிறுமிகளுக்கு முன்மாதிரியாக இருப்பதன் மூலம் மரியாதையைத் தூண்டும். ஆனால் இது சிறந்த பயிற்சி அல்ல.

 

ஒவ்வொரு குழந்தையும் ஒரு உலகம், எண்ணற்ற திறமைகளின் தொகுப்பு. அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பதன் மூலம், அவர்களின் திறமைகளை உணர்ந்துகொள்வதன் மூலம், அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காக, இரவு உணவு மேசையில் அவர்களைச் சந்திக்க வேண்டும். பேசுவதற்கு ஒரு வாய்ப்பு, ஒரு நல்ல கேட்பவனாக கேட்பது, அவர்கள் ஏதாவது தவறாக உணர்ந்தால், அவர்களின் யோசனைகளை நல்ல முறையில் திரித்தல் அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்க அவர்களை ஊக்குவிப்பது இவை அனைத்தையும் குழந்தைகளுடன் செய்யலாம். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு முன்னால் பேசுவதற்கும், கவனமாகக் கேட்கும் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்போதும், குழந்தைகளின் தொடர்புத் திறன் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் மேம்படத் தொடங்குகிறது.

விதிகளை நிறுவுதல்:

ஏழு வயதிலிருந்தே, சாப்பாடு தட்டை எடுப்பது, படுக்கையை உருவாக்குவது, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விதிகள் மற்றும் எல்லைகளை அமைப்பது போன்ற சிறிய பாத்திரங்களைச் செய்யப் பழக வேண்டும். அதனால் அவை பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் பொறுப்பு, ஒழுக்கம் ஆகியவை கற்பிப்பதில் உதவியாக இருக்கும்.

தொழில் விவாதம் மற்றும் வழிகாட்டுதல்:

குழந்தைகள் வளரும்போது, ​​தந்தைகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி குழந்தைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள். அது மகன்களாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் இல்லை என்று நினைக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்காலம் அல்லது அவர்களின் திறனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மகன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். மகள்களுக்கு நன்றாக கற்பிப்பது பற்றி ஒரு உரையாடல் இருக்க வேண்டும். மேலும் சரியான பாதையில் செல்ல அவர்களை ஊக்குவிக்கலாம். இவை வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது.

ஆலோசனை:

பாலினம், ஆண் அல்லது பெண் வேறுபாடின்றி, வீட்டுப் பிரச்சனைகளில் ஆலோசனை செய்வது பயிற்சியில் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும். வீட்டின் வண்ணங்களைப் பற்றிய ஆலோசனை, மரச்சாமான்களை மாற்றுதல், வீட்டு வரவு செலவுத் திட்டம் மற்றும் இளைய உடன்பிறப்புகளின் கல்வி நிறுவனங்களின் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் ஆலோசனை வழங்குதல், குழந்தைகள் வீட்டிற்குள் சேருவதை எளிதாக்குகிறது. அவர்கள் வாழ்க்கையைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

சுயமரியாதை இல்லாமை:

கவனக்குறைவான மற்றும் பயமுறுத்தும் இனங்கள் தார்மீக சீரழிவுக்கு பலியாகின்றன. ஒரு தந்தையின் பற்றாக்குறை அல்லது கவனக்குறைவு ஆண்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்தும், மேலும் பெண்கள் விரக்தி மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். ஒழுக்கப் பயிற்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது. அவர்கள் இல்லாததால் அல்லது கவனக்குறைவு காரணமாக, குழந்தைகள் வழிதவறலாம். சிறுவர்களுக்கு நேர்மறை ஆண் முன்மாதிரி தேவை. தந்தை இல்லாததால் அவர்களை பின்பற்ற எந்த மாதிரியும் இல்லை. தந்தையின் கவனக்குறைவால் குழந்தைகள் மனச்சோர்வு, பதட்டம், கோபம் போன்ற உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். தந்தையின் வழிகாட்டலும் ஆதரவும் குழந்தைகளின் கல்வித் திறனுக்கு உதவுகிறது. தந்தை இல்லாத குழந்தைகள் சமூக உறவுகளை உருவாக்குவது கடினம். எனவே, ஏக இறைவன் வழங்கிய குழந்தை என்ற அருட்செல்வத்தை, மிகச் சிறந்த முறையில் வளர்க்க ஒவ்வொரு தந்தையும், தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, வீட்டில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் மகிழ்ச்சி உருவாகும்.

 

-            எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மழை....கன மழை....!

 சென்னையில் கொட்டி வரும் கனமழை...!

பல இடங்களில் வெள்ளம்....!



Monday, October 14, 2024

அணிவகுப்பு...!

 Residents of Velachery, Chennai, have parked their cars on a flyover due to a heavy rain alert.