புனித ரமழானில் மஸ்ஜித்துகளில் தொழுகை நடத்த 20 பேருக்கு மட்டுமே அனுமதி:
உத்தரப்பிரதேச பாஜக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.....!
அலகாபாத், மார்ச்.15- புனித ரமழான் காலத்தில் சம்பல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மஸ்ஜித்தில் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்று கட்டுப்படுத்தி உத்தரவிட்ட உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசுக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க இயலாவிட்டால் ராஜினாமா செய்யுமாறு அதிகாரிகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச பாஜக அரசு நடவடிக்கை :
புனித ரமழான் மாதத்தின் போது, சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு மஸ்ஜித்தில் முஸ்லிம் தொழுகையாளர்களின் எண்ணிக்கை வெறும் 20 ஆக மட்டுமே இருக்க வேண்டும் எனக் கட்டுப்படுத்தி உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை சம்பல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித ரமழானில் மஸ்ஜித்துகளில் தொழுகையாளிகள் அதிகம் வருவது வழக்கமாக இருக்கும் நிலையில், தற்போது 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என பாஜக அரசு பிறப்பித்த உத்தரவு அப்பகுதி முஸ்லிம்களை வேதனை அடையச் செய்தது.
அரசுக்கு எதிராக வழக்கு :
உத்தரப் பிரதேச பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக முனாசிர் கான் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த மனுவில் ரமழான் காலத்தில் சம்பல் மாவட்டத்தில் உள்ள கட்டா எண் 291 என்ற இடத்தில் அமைந்துள்ள மஸ்ஜித்தில், முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்பதைத் தடுக்க மாநில அதிகாரிகள் முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புனித மாதமான ரமழானின்போது கணிசமான எண்ணிக்கையிலான தொழுகையாளிகள் அங்கு கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த இடத்தில் தொழுகை நடத்த வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முனாசிர் கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் சித்தார்த் நந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் தங்களுக்கு முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் கருதினால், அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பணிமாறுதல் கோர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நீதிமன்றம் கடும் கண்டனம் :
மேலும், உள்ளூர் அதிகாரிகளான காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏதேனும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, மஸ்ஜித் வளாகத்திற்குள் வரும் தொழுகையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்பினால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்குத் தாங்கள் போதிய தகுதி அற்றவர்கள் என்று சாடிய நீதிமன்றம் அப்படி அதிகாரிகள் கருதினால், அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சம்பல் மாவட்டத்திற்கு வெளியே பணிமாறுதல் கோர வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 27 அன்று பிறப்பித்த தனது உத்தரவில் அந்த அமர்வு குறிப்பிட்டது.
அத்துடன் சம்பல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் தனியார் இடத்தில் தொழுகை நடத்த அரசின் அனுமதி தேவையில்லை என்றும் கூறியது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது அரசின் கடமை என்றும், பாதுகாப்பு குறித்த ஊகங்களின் அடிப்படையில் மத வழிபாட்டு நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதை நியாயமாகக் கூற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பாஜக அரசின் கோரிக்கை நிராகரிப்பு :
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகக் கூறி, மாநில அரசு தரப்பு தனது நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றது. ஆனால், நீதிமன்றம் அந்த நியாயப்படுத்தலைத் திட்டவட்டமாக நிராகரித்தது. மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை தாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என்றும் எத்தகைய சூழலிலும் சட்டத்தின் ஆட்சி நிலைபெறுவதை உறுதி செய்வது அரசின் கடமையாகும் என்றும் நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் கூறியது. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு இடத்தில் அமைதியாக வழிபட உரிமை உண்டு என்றும், சொத்து தனிப்பட்டதாக இருந்தால், அரசின் அனுமதி தேவையில்லை என்றும் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. பொது நிலத்தில் மதக் கூட்டங்கள் நடத்தப்படும்போது அல்லது அவை பொதுச் சொத்தில் பரவும்போது மட்டுமே அரசின் ஈடுபாடு அவசியம் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================





No comments:
Post a Comment