Saturday, March 28, 2026

தேர்தல் களம் காணும் இரண்டு வைரங்கள்....!

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் :

களம் காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இரண்டு வைரங்கள்....! 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் கோடைக் காலம் தொடங்குவதற்கு  முன்பாகவே படுவேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அந்த வெயிலுக்கு நிகராக தற்போதே அரசியல் களம் சூடுபிடித்து விறுவிறுப்பு அடைந்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின்  பட்டியலை வெளியிட்டுள்ளன. 

அதன்படி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில், அதாவது தங்களது சின்னமான ஏணிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்களின் நேர்காணலுக்குப் பிறகு இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

முன்னணி தலைவர்களின் தியாகம் :

இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்கள் தேர்வில் ஒரு சிறப்பு அம்சம் என்னெவென்றால், இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. தலைவர் பேராசிரியர், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாரும் தேர்தலில் போட்டியிடாமல், புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். உண்மையிலேயே இதுஒரு மிகப்பெரிய தியாகம் என்றே கூற வேண்டும்.  பிற இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், தலைவர், பொதுச் செயலாளர் என மூத்த தலைவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில், சமுதாய நோக்கம் மட்டுமே கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  இதுபோன்ற ஒரு நிலை பிற இயக்கங்களில் நாம் காண முடியவில்லை. இதன்மூலம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் இயங்கும் இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம், எப்போதும் சமுதாயம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் சுய விருப்பங்களை ஒதுக்கிவிட்டு, ஆசைகளை புறந்தள்ளிவிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில தியாகங்களை நாம் செய்துதான் ஆக வேண்டும். அப்போது தான், சமுதாயத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணி தலைவர்களின் தியாகங்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த தலைவர்களின் நினைத்து நாம் பெருமை அடைய வேண்டும். 

ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான் :

இதுஒருபுறம் இருக்க, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களும் உண்மையிலேயே இரண்டு வைரங்கள் என்றே கூற வேண்டும். 

அந்த வகையில், பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை. 1968ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் முகமது யாசின் (ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்), தாயார் பெயர் ஜெகபர்நிஷா.  

இவரது துணைவியார் பெயர் ஷமிம் நிஷா, ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற 10வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் (1986 - 1989) பி.எஸ்சி பட்டம் பெற்றவர். கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார்.  சிறு வயது முதலே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலே பணியாற்றி வருபவர். 

மேலும், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராக கல்வி சேவையாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் உரையாடும் ஆற்றல் பெற்றவர். தஞ்சை மாவட்டம், ஆடுதுறை முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தொடர்ந்து 15 ஆண்டுகள் செயலாளராக சேவையாற்றியவர். திருவிடைமருதூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 30 மஹல்லா ஜமாஅத்தினுடைய கூட்டமைப்பிற்கு தலைவராக சேவையாற்றி வருகிறார்.

                                            ====================

"2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டியவர்கள். அதற்கு முழு தகுதிப் பெற்றவர்கள்.தமிழகச் சட்டப்பேரவையில் சமுதாயத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகிய இரண்டு பேரும் முறையே பாபநாசம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்"

                                                ====================

அத்துடன், உளுந்தூர்பேட்டை அருகே உருவாகி வரும் ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக பொறுப்பேற்று சேவையாற்றி வருகிறார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார். சவூதி அரேபியா, அமீரகம், குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.

கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டினை வரவேற்பு குழு தலைவராக பொறுப்பேற்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையோடு தமிழகமே வியக்கத்தக்க வகையில் சிறப்பாக நடத்தி காட்டினார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டவர்.

எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் :

இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் எப்படி இ.யூ.முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டு, சமுதாய நோக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறாரோ, அதேபோன்று, எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கும், பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்து, இ.யூ.முஸ்லிம் லீகிற்காக தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு, தொடர்ந்து இயக்கத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். 

இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் உறுப்பினர், மாநில பொதுக்குழு உறுப்பினர் என இயக்கத்தில் பல பொறுப்புகளில் உள்ள சையத் பாரூக், வாணிம்பாடி, நகராட்சியின் முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வென்றவர் ஆவார். வாணியம்பாடியில் உள்ள எஸ்.எஸ்.பி.குரூப் தொழில் நிறுவனங்களின் சேர்மனாக இருக்கும்  சையத் பாரூக், பல்வேறு சமுதாயப் பணிகளிலும் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். 

பாரம்பரியமான வாணிம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கனவே 2016 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார்.  தற்போது இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக தேர்தலில் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.  வரும் தேர்தலில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் நிச்சயம் வெற்றிபெற்று வாணியம்பாடியில் புதிய வரலாறு படைப்பார். அதன்மூலம் வாணியம்பாடி தொகுதி குறித்து இருந்த தவறான எண்ணங்களை, சிந்தனைகளை அவர் நிச்சயம் வீழ்த்துவார். 

இரண்டு வைரங்களின் வெற்றி உறுதி :

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டியவர்கள். அதற்கு முழு தகுதிப் பெற்றவர்கள். இரண்டு வேட்பாளர்கள் குறித்து நாம் மேலே குறிப்பிட்ட தகவல்கள் மூலம், இரண்டு பேரும் உண்மையிலே வைரங்கள் என்றே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். அப்படி தான் நாம் கூற வேண்டும். தமிழகச் சட்டப்பேரவையில் சமுதாயத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகிய இரண்டு பேரும் முறையே பாபநாசம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். 

இந்த இரண்டு பேரின் வெற்றி என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றியாக சமுதாயம் கருதக் கூடாது. சமுதாயத்தின் வெற்றியாக கருதி, அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஏக இறைவனிடம் நாள்தோறும் துஆ கேட்க வேண்டும். ஏக இறைவன் விரும்பிவிட்டால், இரண்டு பேரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இன்ஷா அல்லாஹ், நிச்சயம் ஏக இறைவன், ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகியோருக்கும் வெற்றிக் கனியை கண்டிப்பாக வழங்குவான் என்று உறுதியாக நம்புவோம். அந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இருவரின் வெற்றிக்காக கடுமையான உழைப்பை நல்க முன்வருவோம். அப்படி நாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டு செயல்பட்டால், கடுமையாக உழைத்தால், தேர்தல் களத்தில் நடக்கும் சதிகளை முறியடித்தால், இந்த இரண்டு வைரங்களின் வெற்றி உறுதி என்று இப்போதே அடித்துக் கூறலாம். இன்ஷா அல்லாஹ், தமிழக சட்டப்பேரவையில் நிச்சயம் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் குரல் இனி நிச்சயம் ஒலிக்கும். அதன்மூலம் சமுதாயத்திற்கு புதிய விடியல் பிறக்கும். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: