இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராட உலகளாவிய நடவடிக்கை தேவை....!
முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் வலுப்படுத்த வேண்டும்..!!
ஐ.நா.வில் சவூதி அரேபியா வலியுறுத்தல்...!!!
நியூயார்க், மார்ச்.18-: இஸ்லாமிய வெறுப்பைக் கையாள்வதற்குத் தீர்க்கமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கான சவூதி அரேபியாவின் தூதர் அபுலாஜிஸ் அல்வாஸில் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, சட்டப் பாதுகாப்புகள், கல்வி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.அவையின் கூட்டத்தில் திங்களன்று (16.03.2026) பங்கேற்று பேசிய சவூதி அரேபியாவின் தூதர், இஸ்லாமிய வெறுப்பை ஒரு தீவிரமான மற்றும் வளர்ந்து வரும் சவால் என்று விவரித்தார். மேலும் அதன் பரந்த சமூக விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்தார்.
முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பு :
ஐ.நா. அவையில் தொடர்ந்து பேசிய சவூதி அரேபியாவின் தூதர் அபுலாஜிஸ் அல்வாஸில், பொது இடங்களில் முஸ்லிம்கள் துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போதும், மஸ்ஜிதுக்கள் சேதப்படுத்தப்படும்போதும், தீங்கு விளைவிக்கும் தவறான கருத்துக்கள் பொது விவாதங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பரவும்போதும், அதன் விளைவுகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாண்டி வெகுதூரம் செல்கின்றன என்று வேதனை தெரிவித்தார்.
இந்த போக்குகள் மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்ட அவர், அவநம்பிக்கையை ஆழப்படுத்துகின்றன என்றும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமூகங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் பலவீனப்படுத்துகின்றன என்றும் விமர்சனம் செய்தார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் :
இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளின் அரசாங்கங்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் டிஜிட்டல் தளங்களை அல்வாஸில் வலியுறுத்தினார். பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் பாதுகாப்புகளை அரசாங்கங்கள் வலுப்படுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்கள், மஸ்ஜித்துகள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களைக் குறிவைக்கும் வெறுப்புக் குற்றங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீதான் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், டிஜிட்டல் தளங்களில் வெறுப்புப் பேச்சு பரவுவதையும் முயற்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கு தவறான தகவல்களும் விரோதமான கருத்துகளும் மக்களின் கண்ணோட்டங்களை விரைவாகப் பாதித்து, சகிப்பின்மையைத் தூண்டக்கூடும் என்றும் சவூதி தூதர் எச்சரித்தார்.
சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் :
இப்பிரச்சனையில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சவூதி தூதர், சவூதி அரேபியா அரசின் அர்ப்பணிப்பையும் விவரித்தார். மதப் பன்முகத்தன்மைக்கான மரியாதையை ஊக்குவிப்பதில், இஸ்லாமிய வெறுப்பைக் கையாள்வது ஒரு இன்றியமையாத பகுதியாகும் என்பதை சவூதி அரேபியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். சகிப்புத்தன்மையையும் பரஸ்பர மரியாதையையும் ஊக்குவிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அவை உலகளாவிய, அமைதியான சகவாழ்வின் அடித்தளத்தை வலுப்படுத்துகின்றன என்றும் சவூதி தூதர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய வெறுப்பை எதிர்கொள்வதற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான விரோதத்தையும் பாகுபாட்டையும் தூண்டும் கருத்துகளை முறியடிப்பதற்கும், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஐக்கிய நாடுகள் சபையுடனான தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் புரிதலையும் உரையாடலையும் ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மூலம் சர்வதேச முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் சவூதி அரேபிய அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், பொது இடங்களில் துன்புறுத்துதல், தீங்கு விளைவிக்கும் தவறான கருத்துகள் மற்றும் மஸ்ஜித்துகளைச் சேதப்படுத்துதல் போன்றவை ‘பிளவுகளை உருவாக்குகின்றன, அவநம்பிக்கையை ஆழப்படுத்துகின்றன மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்பும் முயற்சிகளைச் சீர்குலைக்கின்றன’ என்று விவரித்த சவூதி தூதர் அபுலாஜிஸ் அல்வாஸில், முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களுக்கு எதிரான சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், பொறுப்பு உணர்வையும் உறுதி செய்யவும் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் இணையதளங்களையும் வலியுறுத்தினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment