தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு கூடுதலாக கட்டடங்களை கட்ட 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு....!
தமிழக அரசுக்கு உர்தூ அகாடமி நிர்வாகிகள் நன்றி...!!
சென்னை, மார்ச்.12-சென்னை அரசு காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு கூடுதலாக கட்டங்களை கட்ட தமிழ்நாடு அரசு 11 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு :
தமிழ்நாடு உர்தூ அகாடமி காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ஒரு அறையில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே கூடுதலாக ஒரு அறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு 11 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் ஆகியவற்றுடன் பொதுப் பணித்துறை தொழில்நுட்பக் கல்டிவி வட்ட தலைமைப் பொறியாளரை கேட்டுக் கொண்டது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் அளித்த கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில், தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு கூடுதலாக ஒரு அறை மற்றும் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ள 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடப்படுவதாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி :
தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 11 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் செயலாளர் சங்கர் ஆகியோரை தமிழ்நாடு உர்தூ அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமூர் ரஹ்மான் தலைமையில், அகாடமியின் குழுவினர் நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு உர்தூ அகாடமியின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு செய்துவரும் ஒத்துழைப்பு மற்றும் பணிகளுக்கும் உர்தூ அகாடமி சார்பில் பாராட்டுகளையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==========================



No comments:
Post a Comment