Thursday, March 26, 2026

தி இந்து ஆங்கில நாளிதழக்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தின் வருகையால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் எந்தப் பிளவும் ஏற்படாது...!

 இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே முஸ்லிம்களின் ஒரே பாரம்பரியமான இயக்கம்...!!

தி இந்து ஆங்கில நாளிதழக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணல்....!!! 

சென்னை, மார்ச்.27- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டிடுவதால், சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் எந்தப் பிளவும் ஏற்படாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக்கழகம் இன்னும் தேர்தலில் தனது வலிமையை நிரூபிக்கவில்லை என்றும் விஜய் சினிமா கவர்ச்சியை அடிப்படையாக கொண்டு, தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றும் எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் அவரால் மிகப்பெரிய அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த முடியாது  என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,  தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தியாளர் எஸ்.கணேசனுக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:

கேள்வி : திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து வீழ்த்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த தேர்தல் உங்களுடைய பார்வையில் எந்தளவுக்கு முக்கியத்துவமாக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் : ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் நடக்கும் அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானதாகவே நாங்கள் கருதுகிறோம். தற்போது நடக்கும் தேர்தலைப் பொருத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, மற்ற அணிகளை விட மிகவும் வலிமையாக இருப்பதாகவே நாங்கள் உறுதியாக நினைக்கிறோம். 

திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பலன் அடையும் வகையில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான பலன்களை பெற்றுள்ளார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு மனநிலை மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகம், திட்டங்கள் நிறைவேற்றம் ஆகியவற்றால், திமுக அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பு அலையும் வீசவில்லை. மாறாக ஆதரவான நிலைதான் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. 

கேள்வி : திமுக அரசு மீது ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறதே?

பதில் : சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் எழுப்பட்டு வருவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு சரியான உறுதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலைப் பொருத்தவரை, நாடு முழுவதும் இதுபோன்ற போக்கும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. 

கேள்வி : இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் திமுகவுடன் நீண்ட காலமாக நல்ல தொடர்புள்ள இயக்கம். கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் இயக்கம். அப்படி இருந்தும் உங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஐந்து தொகுதிகளை கேட்ட நிலையில், 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், உங்களுடைய இயக்கத் தொண்டர்கள் இதனை ஏற்றுக் கொண்டார்களா?

பதில் :  தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நாங்கள் திமுகவுடன் நல்ல உறவுகளை பேணி வருகிறோம்.  இதற்கு முக்கிய காரணம் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் அவர்கள் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார்கள்.  திருமூலரும் இதைத் தான் சொல்லி இருக்கிறார். திருக்குர்ஆன் கூட, ஓர் இறைக்கொள்கையை மிகவும் உறுதியாக சொல்லி உள்ளது. இதன் காரணமாக நாங்கள் உயர்ந்த கொள்கையுடன் கூடிய திமுகவுடன் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமாக உறவுகளை வைத்து அதை உறுதியாக பேணி வருகிறோம். 

தொகுதி ஒதுக்கீடு பொருத்தவரை, திமுகவில் முன்பு இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே கூட்டணி வைத்து இருந்தது. அதன் காரணமாக எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார்கள். தற்போது, முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்த பல கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. குறிப்பாக நான்கு ஐந்து கட்சிகள் இணைந்துள்ளன. முன்பு திமுக கூட்டணியில் நான்கு ஐந்து கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற்று இருக்கும். ஆனால் தற்போது 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. எனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஓதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், மற்ற கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும். தொகுதிகளை தானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். 

கேள்வி : திமுகவின் இந்த நிலைப்பாட்டால் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் அதிருப்தி அடைவார்கள் அல்லவா?

பதில் : அதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அதிருப்தி இருக்கும். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அதிருப்தியுடன் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சமுதாய மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி இருக்கிறோம். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

கேள்வி : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் இறங்கியுள்ளது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ?

பதில் :  தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தனது வலிமையை நிரூபிக்கவில்லை. நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. சினிமா கவர்ச்சியால், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். 

கேள்வி : ஆனால், நடிகர் விஜய் தனது கட்சியால், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பிளவுப்படும் என்ற சந்தேகம் இருந்து வருகிறதே?

பதில் : அதுபோன்ற ஒரு பிளவு நிச்சயம் ஏற்படாது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்ற கட்சிகளைப் போல ஒருசில முஸ்லிம்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயமே விஜய்க்கு ஆதரவாக இல்லை. இதன் காரணமாக திமுக தலைமையிலான அணிக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது. இந்திய முஸ்லிம்களின் ஒரே பாரம்பரியமான இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் வாக்குகள் நிச்சயம் விஜய் கட்சிக்கு கிடைக்காது. 

கேள்வி : திமுக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும்  அடிப்படையாக கொண்டு, தேர்தலை சந்தித்து வருவதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறதே. இதன்மூலம் மற்ற பிச்சினைகளை மறைக்க திமுக முயற்சி செய்வதாக கூறப்படுகிறதே?

பதில் : திமுக தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க பல காலமாக குரல் கொடுத்து வருகிறது. எனவே இதுபோன்ற விமர்சனங்கள் அனைத்தையும் புறம்தள்ளிவிட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழ் மொழிக்காக திமுக குரல் கொடுக்கவில்லை. தொடர்ந்து குரல் எழுப்பி போராடிக் கொண்டே இருக்கிறது. 

கேள்வி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?

பதில் : திருப்பரங்குன்றத்தில் தர்ஹா மற்றும் கோவில் இடையே நீண்ட காலமாக எந்தவித பிரச்சினையும் இல்லை. எங்களைப் பொருத்தவரை, தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

- நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 27.03.2026

- தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments: