போர்க்களத்தில் ஈரானின் வெற்றிக்கு வலிமையான ஈமான் தான் மிக முக்கிய அடிப்படை....!
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் வரவேற்பு....!!
போர்க்காலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த உடனடி நடவடிக்கைகளுக்கும் பாராட்டு...!!!
போர் சூழலில் சிக்கி, துபாயில் இருந்து தாயகம் திரும்பிய, தொழில் அதிபரும், இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மக்கள் தொடர்பு செயலாளருமான எச்.எம்.அப்துல் காலிக் மணிச்சுடர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்....!!!!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு ராணுவப் படை திடீரென கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தி, ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து தாக்கி படுகொலை செய்தது. அத்துடன், சிறுமிகள் படிக்கும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தி, 168 பள்ளி மாணவிகளையும் படுகொலை செய்து மிகப்பெரிய கொடூரத்தை அரங்கேற்றியது. இதையடுத்து, ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை ஈரான் நடத்தி அந்த தளங்களை முற்றிலும் சீரழித்தது. அத்துடன், இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திவருகிறது. 15வது நாளாக போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இத்தகைய போர் சூழ்நிலையில், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினோம். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போதைய நிலைமை குறித்த விவரங்களை அறிந்து, அதை மணிச்சுடர் நாளிதழின் வாசகர்களுக்கு அளிக்க விரும்பினோம். துபாயில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாயகம் திரும்பிய தொழில் அதிபரும், சமூக ஆர்வலர் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மக்கள் தொடர்பு செயலாளருமான எச்.எம்.அப்துல் காலிக் அவர்களை மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேரில் சந்தித்து, போர் நிலவரம் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள விரும்பி சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 106 வார்டின் முன்னாள் உறுப்பினராக இருந்த அப்துல் காலிக், மிகுந்த மகிழ்ச்சியுடன் நேர்காணலுக்கு ஒப்புக் கொண்டு, பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்றுவரும் இந்த போர் குறித்து அவர் கூறிய முழு தகவல்களையும் மணிச்சுடர் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த வளைகுடா நாடுகள் :
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானும் தனது தாக்குதல்களை தொடங்கியது. வளைகுடா நாடுகளில் குறிப்பாக துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இப்படி தாக்குதல் தொடங்கியதும், துபாயில் வாழும் அனைவருக்கும் செல்பேசி மூலம் அவசர தகவல் ஒன்றை அரசு அனுப்பி வைத்தது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், எந்தவித பதற்றமும், பீதியும் அடைய வேண்டாம் என்றும் அந்த தகவலில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் மிகப்பெரிய அளவுக்கு அசம்பாவிதம் நடைபெற்றால் உயிரை பாதுகாத்துக் கொள்ள வெளியே வந்து நடுப்பகுதியில் நின்றுவிட வேண்டும் என்றும் பொருட்கள் குறித்தோ, ஆவணங்கள் குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும், அரசு கேட்டுக் கொண்டது. பாதிப்பு அடையும் ஆவணங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தும் எமிரேட் ஐ.டி. எண் மூலம் மீண்டும் தரப்படும் என்றும் அதுதொடர்பான முழு விவரங்கள் அரசிடம் இருப்பதாகவும் எனவே மக்கள் பதற்றம் அடையக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியது.
சிறிய அளவுக்கு மட்டுமே பாதிப்பு :
ஈரான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவத் தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், துபாயில் வாழும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்குதல் நடத்தியபோது, அது வெடித்து சிதறி விழுந்ததால் ஒருசில கட்டடங்கள் மட்டுமே சேதம் அடைந்தன. அமெரிக்க ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். பொதுமக்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் ஈரான் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பீதியை பரப்பின. ஆனால், அப்படி எதையும் ஈரான் செய்யவில்லை. அந்நாடு மிகத்தெளிவாக அறிவித்து, அமெரிக்க தளங்கள் மீது மட்டுமே எங்களது குறி என்றும், முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது எங்களது நோக்கம் இல்லை என்றும் உறுதிப்பட கூறி, அதன்படி மிக நேர்மையான முறையில் போரை நடத்தி வருகிறது.
இதனால், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. உயிரிழப்பு கூட நிகழவில்லை. கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, விமான நிலையங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே மூடப்பட்டன. தற்போது, கடுமையான தாக்குதல் காரணமாக விமான நிலையம் வழக்கம் போல் செயல்படவில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக நோக்கத்துடன் துபாய் வந்தவர்களை பாதுகாப்புடன் மீண்டும் தாயகம் அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து இருந்தது. விமான சேவை குறித்த அனைத்துத் தகவல்களையும் முறையாக பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், அவர்கள் எந்தவித பதற்றமும் அடையாமல் விமான நிலையத்திற்கு சென்று தங்களது பயணத்தை தொடர வாய்ப்பு ஏற்பட்டது.
==================
"ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோதும், அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஈரானுக்கு முழு ஆதரவு அளித்தனர். அமெரிக்க தளங்கள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற ஈரானின் அறிவிப்பை அவர்கள் முழுமையாக வரவேற்றனர். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களுக்கு ஈரான் மூலம் அல்லாஹ் தற்போது பதிலடி கொடுத்து வருகிறான் என்று மக்கள் தெரிவித்தனர்"
==================
தாக்குதலின் முதல்நாளில் தொடர்ந்து சைரன் ஒலிக்கப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதால், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டனர். அல் நஹ்தா துபாய் தொழிற்பேட்டையாகும். மேலும் துபாய் மற்றும் ஷார்ஜா எல்லையில் அமைந்துள்ள ஒரு முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகும். இது அல் குசைஸ் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. இது இரண்டு துணை சமூகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பெயர் பெற்றது. இது குடும்பங்களுக்கு மிகவும் சாதகமானது. இங்கு மிகப்பெரிய அளவுக்கு ஈரான் தாக்குதல்களை நடத்தவில்லை. ஈரானின் இலக்கு அனைத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டுமாகவே இருந்தது. மிகப்பெரிய ஹோட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தங்கி இருந்து ஹோட்டல் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் துபாயில் உள்ள மிக உயரமான மற்றும் உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிஃபா தகர்க்கப்பட்டதாக தெரிவித்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சிறிய அளவுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டது.
குழப்பம் ஏற்படுத்த அமெரிக்கா இஸ்ரேல் சதி :
ஆனால், வளைகுடா நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பின. அதன்மூலம் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் ஒருவித குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி, அதன்மூலம் இலாபம் அடையலாம் என்றும் சதித் திட்டங்களை அரங்கேற்றின. ஆனால், அவை அனைத்தையும் வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் யாரும் நம்பவில்லை. ஈரானின் நோக்கம் என்ன என்பதை அவர்கள் மிகத் தெளிவாக அறிந்து இருந்து காரணத்தினால், பொய் மற்றும் போலி தகவல்களை ஒருபோதும் நம்பவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் செய்த சதிவலையில் சிக்கிக் கொண்டு ஈரானுக்கு எதிராக திரும்பவில்லை. மாறாக ஈரானுக்கு முழு ஆதரவு அளித்தனர். முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்கள் ஏன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை முழுமையாக வரவேற்றார்கள். இதனால் அமெரிக்காவின் சதி முறியடிக்கப்பட்டது.
ஈரான் நடத்திய தாக்குதலில் அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா விமான தளம், துபையில் உள்ள ஜபல் அலி துறைமுகம், துபாய்க்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு முக்கிய மூலோபாய இராணுவ விமானப்படை தளமான அல் மின்ஹாத் ஆகிய மூன்றும் முற்றிலும் சேதம் அடைந்தன. அங்கு இருந்த அமெரிக்க ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்படி, ஈரான் மிகவும் தெளிவான இலக்குடன் தாக்குதல்களை நடத்தி, மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படாமல் இருக்கும்படி நடந்துகொண்டது.
ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை :
போரினால் மக்கள் யாரும் பாதிப்பு அடையக் கூடாது என்பதில், ஐக்கிய அரபு அமீரகம் அரசுகள் மிக உறுதியாக இருந்தன. போர் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணிச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மருத்துவர்கள் மட்டுமே, மருத்துவனைக்கு வந்துசெல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் துபாயில் உள்ள மஹாலுக்கு கடந்த 2ஆம் தேதி நேரில் விஜயம் செய்து இப்தார் விருந்தில் கலந்துகொண்டு, மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான அனைத்தும் அரசு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதேபோன்று, துபாய் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் கடந்த 3ஆம் தேதி விஜயம் செய்து மக்கள் எந்தவித பீதியும் அச்சமும் அடைய தேவையில்லை என்று கேட்டுக் கொண்டார். அத்தியாவசிப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கவும் விலைகள் அதிகரிக்காமல் இருக்கவும் உறுதி செய்யப்பட்டது. எனவே மக்கள் அத்தியாவசியப் பொருட்களை அவசரமாக வாங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்துப் பொருட்களும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனால் புனித ரமழான் கால நடவடிக்கைகள் வழக்கம் போல் இருந்தன. மஸ்ஜித்துகளில் தொழுகையாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். பொருளாதார ரீதியாக துபாய் வளம் அடைய அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் போற்றக்கூடிய ஒன்றாகும் என்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் நம்புகின்றன. எனவே இந்தியர்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தன.
ஈரானுக்கு முழு ஆதரவு :
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோதும், அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஈரானுக்கு முழு ஆதரவு அளித்தனர். அமெரிக்க தளங்கள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற ஈரானின் அறிவிப்பை அவர்கள் முழுமையாக வரவேற்றனர். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், கொடூரங்களுக்கு ஈரான் மூலம் அல்லாஹ் தற்போது பதிலடி கொடுத்து வருகிறான் என்று மக்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஈரான் நடத்தும் தாக்குதலில் தப்பிதவறி உயிரிழக்கக் கூடிய நிலை ஏற்பட்டால், அந்த ஷஹீத் என்ற வீரமரணத்திற்கான உயர்ந்த அந்தஸ்தை ஏக இறைவன் தமக்கு வழங்கியதாகவே தாங்கள் கருதுவதாகவும் மக்கள் உணர்ச்சியுடன் தெரிவித்தனர்.
எனவே ஈரானுக்கு எதிராகவே, வளைகுடா நாடுகளின் அரசுகளுக்கு எதிராகவே மக்கள் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஈரானின் வலிமையான ஈமானை கண்டு, மக்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் தியாகத்தை வரவேற்றார்கள். ஈரானை போன்று தாங்களும் வலிமையான ஈமானுடன் இருக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்பினார்கள்.
இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை :
ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவூதி அரேபியா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் போரினால் ஏற்படவில்லை. வேலையில்லை என்றாலும் சம்பளம் கொடுக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியது. இதனால் மன ரீதியாக இந்தியர்கள் மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்தார்கள். வளைகுடா நாடுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள். விமானச் சேவை பாதிக்கப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக ரீதியாக துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேநேரத்தில், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் யாரும் நாடு திரும்ப வேண்டும் என விரும்பவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் எடுத்த நடவடிக்கை மற்றும் அளித்த உறுதி ஆகியவையாகும். இந்த போரினால் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன. பெட்ரோல், எரிவாயு உற்பத்தி மிகப்பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகளில் மிகப்பெரிய அளவுக்கு வினியோகம் தடைப்படும். விலைவாசிகள் விண்ணை தொடும். இப்படி பல நிலை இருந்தாலும், இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை :
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடங்கியதும், வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திராவிட மாடல் அரசின் தலைமகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக செயலில் இறங்கினார். வளைகுடா நாடுகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உதவி எண்ணை அறிவித்து அதில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்று அறிவித்தார்.
எப்படி கொரோனா காலத்தில், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அத்தியாவசிப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று சேர நடவடிக்கை எடுத்தாரோ, அதேபோன்று தற்போது போரினால் தமிழக எந்தவித பாதிப்பும் அடையக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் முதலமைச்சர் செயல்பட்டார். மேலும், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு திமுக தேவையான உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்ததோ அதேபோன்று தற்போதும் வளைகுடா மக்களின் பாதுகாப்பு உறுதி செய்தது. அவர்கள் மன ரீதியாக நிம்மதியாக இருக்க நடவடிக்கை எடுத்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதேபோன்ற பல நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன என்றே கூற வேண்டும்.
மக்களின் ஒற்றுமை :
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணு தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக அங்கு வாழும் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடவில்லை. ஈரானுக்கு எதிராக அவர்கள் திரும்பவில்லை. போராட்டங்களில் ஈடுபடவில்லை. அனைத்துத் தரப்பு மக்களும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவே திரும்பினார்கள்.
ஐக்கிய அரசு அமீரகத்தின் பூர்வீக குடிமக்களை எமிராட்டி என்று அழைப்பார்கள். இவர்கள் அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பல்வேறு பழங்குடியின பின்னணியைக் கொண்டவர்கள் மற்றும் அமீரகக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பவர்கள். அமீரகத்தின் குடிமக்கள், கலாச்சாரம், மொழி அல்லது உணவு வகைகளை விவரிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தற்போது போர் சூழலில் ஐக்கிய அரபு அமீரக மன்னர், அரபிகள் மட்டுமே எமிராட்டிகள் அல்ல. இங்கு வரும் அனைவரும் எமிராட்டிகள் தான். அவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் தான். இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என்று உறுதி அளித்தார். இது மிகப்பெரிய அளவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அனைவரும் ஆறுதலை அளித்தது.
ஈரான் மீது வேண்டும் என்றே தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தற்போது அரபு நாடுகள் திரும்பிவிட்டன. தங்கள் நாடுகளில் உள்ள இராணுவ தளங்களை வெளியேற்ற அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். அமெரிக்கா ராணுவ தளங்களால் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்றும் அவர்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாக இருக்கிறது. போர் இல்லாத உலகம் உருவாக வேண்டும். உலகில் எங்கும் அமைதி நிலவ வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்த புனித ரமழானில் அதற்காக நாம் அனைவரும் ஏக இறைவனிடம் துஆ கேட்போம்.
இவ்வாறு போர் நிலவரம் குறித்து எச்.எம்.அப்துல் காலிக் அவர்கள் பல சுவையான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவரது விருப்பப்படி விரைவில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாமும் பிரார்த்தனை செய்துவிட்டு விடைப்பெற்றோம்.
- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்









No comments:
Post a Comment