Tuesday, March 10, 2026

நூல் வெளியீடு...!

 இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே இயக்கம் இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வாகை சூடுவார்கள்

இ.யூ.முஸ்லிம் லீகின் 79வது நிறுவன நாள் விழாவில் 

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்

மொகிதீன் உரை 

சென்னை, மார்ச்.11- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதன் தியாகத் தலைவர்கள் உருவாக்கி அடிச்சுவடுகளைப் பின்பற்றி சமுதாயத்த்திற்கு மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது என்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 79வது நிறுவன நாள் விழா, சென்னையில் உள்ள தலைமை அலுவலகமாக காயிதே மில்லத் மன்ஸிலில் 10.03.2026 செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் தொடக்கமாக மவுலவி அவர்கள் கிராத் ஓதினார். பின்னர் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது, இ.யூ.முஸ்லிம் லீகின் செயல்பாடுகள், அதன் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தார். 

தொடர்ந்து காயல் மஹபூப், பாத்திமா முசப்பர், சேமுமு முஹம்மது அலி, அப்துர் ரஹ்மான், கே.நவாஸ் கனி, உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், ஆற்றிய உரையின்போது, இ.யூ.முஸ்லிம் லீகின் சமுதாயப் பணி, அரசியல் பயணம்  உள்ளிட்ட அம்சங்களை மிகச் சிறந்த முறையில் குறிப்பிட்டனர். 

இந்திய முஸ்லிம்கள் நூல் வெளியீடு 

பின்னர், மணிச்சுடர் நாளிதழ் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எழுதிய இந்திய முஸ்லிம்கள் பாகம் 1, என்ற நூலை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட மாநில துணைத் தலைவர்  டாக்டர் தாவூத் பாஷா மற்றும் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் ஜீவகிரிதரன், எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அர்ஷத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸுக்கு மாநில முஸ்லிம் லீக் சார்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சால்வை அணிவித்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். 

முன்னோடிகளுக்கு பாராட்டு மற்றும் கவுரவம் :

விழாவில் இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் மூத்த முன்னோடிகள் மற்றும் சிறந்தமுறையில் செயல்பட்டு வரும் முன்னணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவம் அளிக்கப்பட்டது. 

பேராசிரியர் கே.எம்.கே. உரை :

இதைத் தொடர்ந்து தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விழா பேரூரை ஆற்றினார். அந்த உரையின் முழு விவரம் வருமாறு :

மிகச் சிறந்த முறையில் இ.யூ.முஸ்லிம் லீகின் 79வது நிறுவன நாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறாம். இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறன. அந்த சமூகங்களில் ஒன்றாக முஸ்லிம் சமுதாயம் இருந்து வருகிறது. இதுபோன்ற ஒரு அழகான நிலை உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லை. இந்தியாவில் மட்டும் தான், உலகம் தழுவிய சமுதாயம் வாழும் மக்கள் இருந்து வருகிறார்கள். 

இ.யூ.முஸ்லிம் லீகின் 79வது நிறுவன நாளை கொண்டாடும் இந்த தருணத்தில் இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த தியாகத் தலைவர்களின் வழியைப் பின்பற்றி நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அப்படி தான் தற்போது நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களில் தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் கிளைகளை நாம் உருவாக்கி இருக்கிறோம். 

கேரள மாடல் முஸ்லிம் லீக் :

அந்த அடிப்படையில், கேரளாவில் ஒரு முன்மாதிரியான முறையை உருவாக்கி கேரளா மாடல்  முஸ்லிம் லீக் என்று சொல்லும் அளவுக்கு முஸ்லிம் லீக் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எப்படி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோமோ, அதுபோன்று கேரளாவில் இ.யூ.முஸ்லிம் லீக் என்ற மாடல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய முஸ்லிம்களுக்கு எந்த மாடல் சிறப்பான மாடல் என்று கேள்வி எழுப்பினால், அது கேரளா மாடல் என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த முறையில் இ.யூ.முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.  கேரளாவில், முஸ்லிம் லீக் சமுதாயத்தை ஒருங்கிணைத்து செயலாற்றி மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ, தொடர்ந்து முஸ்லிம் லீக் இயங்கி வருகிறது. அதன்மூலம் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி எல்லா மாநிலத்திற்கும் பரவ வேண்டும். அந்த குறிக்கோளுடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

தமிழகத்தில் முஸ்லிம் லீகின் பணி :

தமிழகத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் என்ற அமைப்பு சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 45க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. இன்னும் நிறைய அமைப்புகள் வரும். ஆனால், இ.யூ.முஸ்லிம் லீக் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கமாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத் அமைப்புகளிலும் முஸ்லிம் லீக் உள்ளது. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இ.யூ.முஸ்லிம் லீக் என்று சொல்லும்போது அதற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத்களின் பிரதிநிதியாக இ.யூ.முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது சமதாயத்தின் அடையாளமாகும். மேலும் தமிழ்நாட்டில் வாழும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. பல இயக்கங்கள் வரும், ஆனால், சமுதாயத்திற்காக உள்ள ஒரே இயக்கம் முஸ்லிம் லீக் தான். அதில் நாம் மிகத் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம் லீக் சொல்வது தான் சமுதாயத்தின் குரல். அதை இந்த நாட்டில் உள்ள அனைத்து அதிகார வர்க்கங்களும் நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். 

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் :

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக உள்ளது.  திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் சமுதாயத்திற்கு ஒருவித மன கஷ்டம் ஏற்பட்டு இருப்பது உண்மையாகும். ஐந்து தொகுதிகளில் எதிர்பாக்கப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது நம்மில் பலருக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் சில நிலையில் நாம் பல தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முஸ்லிம் லீக் தமிழ்நாட்டின் நலனுக்காக தியாகம் செய்து இருக்கிறது. பாசிச சக்திகளின் கை ஓங்கிவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளை ஒத்துக் கொண்டு இருக்கிறோம்.  அந்த இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த இரண்டு தொகுதிகளில் பெண்களுக்காக ஒரு தொகுதி இருக்குமா அல்லது ஆண்களுக்காக ஒரு தொகுதி இருக்குமா என்பது குறித்தும் முடிவு செய்யப்படவில்லை.  

சட்டப்பேரவையில் முஸ்லிம் லீக் :

எப்படி இருந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் இரண்டு பேரும் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பொறுப்புடன் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும். மகளிர் அணி சார்பாக இன்று தேர்தல் நிதி கொடுத்து இருக்கிறார்கள். இதேபோன்று எல்லோரும் தேர்தல் நிதி வழங்கி இயக்கத்திற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் நிதி கிடைத்தால் தான் தேர்தல் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வாய்ப்பு கிடைக்கும். தற்போது நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியை நோக்கிப் பயணம் செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சென்ற முறை 3 தொகுதிகளை வாங்கி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்ற நிலையில், தற்போது அதை நாம் முறியடித்து வெற்றிபெற்றாக வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம். எனவே இரண்டு தொகுதிகளிலும் நமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது உங்களது பொறுப்பாகும். 

மணிச்சுடர் நாளிதழுக்கு ஆதரவு தர வேண்டும் :

முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே நாளிதழான மணிச்சுடர் நாளிதழ் பல்வேறு பொருளாதார  நெருக்கடிக்கு மத்தியில் வந்துகொண்டிருக்கிறது. எனவே மாநில, மாவட்ட, பிரைமரி அல்லது அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் மணிச்சுடருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். தோழர் அஜீஸ் அவர்கள்  மணிச்சுடர் நாளிதழில் எழுதிய கட்டுரைகளை அனைத்தையும் தொகுத்து மிகச் சிறந்த முறையில் நூலை வெளியிட்டுள்ளார். அதேபோன்று நல்ல கட்டுரைகள் மணிச்சுடரில் தொடர்ந்து வர வேண்டும். அந்த கட்டுரைகள் அனைத்தும் எல்லா குடும்பங்களுக்கும் சென்று சேர வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். மணிச்சுடருக்கு ஒத்துழைக்க வேண்டும். 

இ.யூ.முஸ்லிம் லீகின் 79வது நிறுவன நாள் விழாவை மிகச் சிறந்த முறையில் நடத்திய அனைவருக்கும் எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமழான் காலத்தில் நாம் அனைவரும் உலக நன்மைக்காக துஆ கேட்க வேண்டும். மாநிலத்தில் நல்லாட்சி அமைப பிரார்த்தனை செய்ய வேண்டும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். 

விழாவில் மாநில பொருளாளர் ஷாஜஹான் நன்றி உரை ஆற்ற, கவிஞர் ஷேக் மதார் துஆவுடன் விழா நிறைவு பெற்றது. பின்னர் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இப்தார் நோன்பு திறப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

இந்த விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில்இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மிகச் சிறந்த முறையில் நடைபெற்ற இந்த விழாயை இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை வடக்கு, சென்னை கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்  ஒருங்கிணைப்பு செய்து மிக அழகிய முறையில் நடத்தினர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

















No comments: