" சிவில் சர்வீஸ் தேர்வில் வரலாறு படைத்த முஸ்லிம் இளைஞர்கள் "
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் (மார்ச் 06, 2026 ) அறிவிக்கப்பட்டன. 2025 ஆகஸ்ட்டில் நடைபெற்ற முதல் கட்ட தேர்வு மற்றும் டிசம்பரில் நடைபெற்ற இறுதிக்கட்ட முதன்மை தேர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, பிப்ரவரி 2026 இல் நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்களின் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை யு.பி.எஸ்.சி. அறிவித்தது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் 2025 தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த 958 இளைஞர்களின் பட்டியலில், 53 முஸ்லிம் இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏ ஆர் ராஜா மொஹைதீன், இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, நபியா பர்வேஸ் மற்றும் ஹசன் கான் ஆகிய நான்கு முஸ்லிம்கள் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அத்துடன், கடந்த ஆண்டை விட, சிவில் சர்வீசஸ் 2025 தேர்வுகளில் முஸ்லிம்களின் தேர்வு எண்ணிக்கை சற்று மேம்படுத்தப்பட்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் 26 முஸ்லிம்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது 53 பேர் தேர்வாகியுள்ளனர்.
தேர்வு பெற்ற முஸ்லிம்களின் பட்டியல் :
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் முழுப் பட்டியலை அவர்கள் பெற்ற ரேங்க் அடிப்படையில் வரிசையாக இங்கே தரப்பட்டிருக்கிறது. அதன்படி ஏ.ஆர். ராஜா மொஹைதீன், இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, நபியா பர்வேஸ், ஹசன் கான், அர்ஃபா உஸ்மானி, கான் சைமா செராஜ் அகமது, வாசிம் உர் ரஹ்மான், சோபியா சித்திக், தௌசீஃப் அஹ்மத் கனை, மந்தாஷா, அசாத் அகீல், முஹம்மது இஷ்தேயாகு ரஹ்மான், முகமது அஷ்மில் ஷா, ஷாஹிதா பேகம் எஸ்., ஷதாப் அலி கான், முஹம்மது ஸ்வாலா டி.ஏ., ஷோயாப், நாஜியா பர்வீன், ஷேக் மொஹமட் ஹபிசுதீன் எஸ்., ஷேக் மொஹமட் நிஷாத் எம்., மின்ஹாஜ் ஷகீல், குல்பிசா, ஹாஷ்மி முகமது உமர், ஷாருக் கான், அஸ்னா அன்வர், முனீப் அப்சல் பர்ரா, அஸீம் அஹ்மத், சைஸ்டா பர்வின், நூர் ஆலம், முகமட் இர்பான் கயம்கானி, மொஹ்சினா பானோ, குலாம் மாயா தின், டேனிஷ் ரப்பானி கான், முஹம்மது நயாப் அஞ்சும், முகமது அபுசார் அன்சாரி, இன்சா கான், அப்துல் சுபியான் கே., ஃபைரூஸ் பாத்திமா எம்., மொஹமட் ஹாஷிம் கே., முஹம்மது சுஹைல், தௌசிப் உல்லா கான், கோ இ சஃபா, சனா அஸ்மி, ரேஷ்மா எம்., யாசர் அகமது பாட்டி, குலாம் ஹைதர், முகமது ஷெசின் சி.பி., முகமது அஜாஸ் உல் ரஹ்மான், அசார் ஆசிப் கான், முகமது சர்ஃப்ராஸ் சவுத்ரி, அப்துல்லா அஃப்ரித் ஏ., முகமது ஷாஹித் ரசா கான், இர்பான் அகமது லோன் ஆகிய 53 முஸ்லிம் இளைஞர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
வரலாறு படைத்த ஜாமியா மில்லியா :
சிவில் சர்வீஸ் தேர்வுக்காக மிகச் சிறந்த முறையில் முஸ்லிம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா குடியிருப்பு பயிற்சி அகாடமி இருந்து வருகிறது. இந்த அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத்த ஆர்வம் கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த அகாடமியில் இருந்து தேர்வாகும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதி வெற்றி பெற்ற 53 முஸ்லிம் இளைஞர்களில், ஜாமியாவின் பயிற்சி அகாடமியைச் சேர்ந்த 38 மாணவர்கள் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், ஆர். ராஜா மொஹியுதீன் அகில இந்திய அளவில் 7வது இடத்தைப் பிடித்தார். இது ஜாமியா நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தது. அத்துடன் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு ஜாமியா மாணவரைப் பிடித்தது.
சிவில் சர்வீசஸ் துறையில் முஸ்லிம்களின் செயல்திறன் :
2009 முதல் சிவில் சர்வீசஸ் துறையில் முஸ்லிம்களின் செயல்திறனை நாம் கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டும். 2009 ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற 791 மாணவர்களில் மொத்தம் 31 முஸ்லிம் இளைஞர்கள் இருந்தனர். அதேபோல், 2010 ஆம் ஆண்டில், வெற்றி பெற்ற 875 பேரில், 21 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஷா பைசல் தேசிய அளவில் தேர்வில் முதலிடம் பிடித்தார். இதேபோல் 2011 ஆம் ஆண்டில், சிவில் சர்வீஸ்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 920 பேரில் 31 முஸ்லிம்களும் 2012 ஆம் ஆண்டில், வெற்றி பெற்றவர்களில் 30 முஸ்லிம்களும் அடங்குவர். அதேநேரத்தில் 2012 ஆம் ஆண்டில், தேர்ச்சி பெற்ற 30 முஸ்லிம்களில் நான்கு பேர் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பெற்றனர்.
======================
"சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் வெற்றிபெற்ற 958 பேரில், 53 முஸ்லிம் இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏ ஆர் ராஜா மொஹைதீன், இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, நபியா பர்வேஸ், ஹசன் கான் ஆகிய நான்கு முஸ்லிம்கள் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அத்துடன், 2025 தேர்வுகளில் முஸ்லிம்களின் தேர்வு எண்ணிக்கை சற்று மேம்படுத்தப்பட்டு அதிகரித்துள்ளது"
======================
2013 ஆம் ஆண்டில், மொத்தம் 34 முஸ்லிம்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதேநேரத்தில் 2014 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற மொத்தம் ஆயிரத்து 236 பேர் பட்டியலில் 38 முஸ்லிம்கள் இருந்தனர். 2015 ஆம் ஆண்டில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரைத்த ஆயிரத்து 78 பேரில் 34 முஸ்லிம்கள் இடம்பெற்று இருந்தனர். 2016 மற்றும் 2017 ஆண்டுகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு மிகவும் பிரகாசமான காலமாகும். 2016 ஆம் ஆண்டில், வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 52 முஸ்லிம்கள் இடம்பெற்றனர். 2017 ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. 2018 இல் 27 முஸ்லிம்கள் மட்டுமே தேர்ச்சிபெற்று தேர்வானார்கள். 2019 ஆம் ஆண்டில், 42 முஸ்லிம்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
அதேநேரத்தில், 2020 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வு என்றும் அழைக்கப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில் மொத்தம் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றனர். 2021 ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தகுதிப் பட்டியலில் மொத்தம் 685 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் 21 பேர் முஸ்லிம்கள். இது ஒரு தசாப்தத்தில் முஸ்லிம் வேட்பாளர்களின் மோசமான செயல்திறன் ஆகும். 2022 ஆம் ஆண்டில், தேர்ச்சிபெற்ற மொத்தம் 933 பேரில், 30 பேர் முஸ்லிம்கள். 2023 ஆம் ஆண்டில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் மொத்தம் ஆயிரத்து 16 இளைஞர்கள் பல்வேறு சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் 51 பேர் முஸ்லிம்கள். 2024 ஆம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த ஆயிரத்து 9 பேர்களின் பட்டியலில் மொத்தம் 26 முஸ்லிம்கள் இடம் பெற்றனர்.
தமிழக இளைஞர்கள் சாதனை :
சிவில் சர்வீஸ் தேர்வில் சுமார் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். இந்த ஆண்டு 'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 56 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்று, மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வந்தவர்கள்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்த ராஜேஸ்வரி தனது 6-வது முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும் தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்த முஸ்லிம் இளைஞர் ராஜா மொய்தீன் 3வது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், ஷேக் முகமது ஹாபிசுதீன், ஷேக் முகமது நிஷாத் உட்பட பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களில், ராஜா மொஹிதீன், ஷேக் முகமது ஹாபிசுதீன்,ஷேக் முகமது நிஷாத், முகமது ஹாஷிம், முகமது ஷெசின், அப்துல்லா அப்ரித் ஆகியோர் அடங்குவர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்







No comments:
Post a Comment