Monday, March 2, 2026

அமெரிக்கா இஸ்ரேலின் போர் வெறி....!

" அமெரிக்கா இஸ்ரேலின் போர் வெறியால் மற்றொரு போருக்கு தள்ளப்பட்ட உலகம்  "

- ஜாவீத் -

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து மீண்டும் ஈரான் மீது தங்களது போர் வெறியை வெளிப்படுத்தி தாக்குதல்களை தொடங்கியுள்ளன. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி, இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து மீண்டும் ஈரானைத் தாக்கியுள்ளன.

கடந்த முறை அமெரிக்கா நடத்திய தாக்குதலில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருந்த இடமும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகும் ஈரான் செறிவூட்டலை நிறுத்தவில்லை. அதோடு, அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளிலிருந்து யுரேனியத்தை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அதைத் தொடா்ந்து, ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும். அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளா்ச்சிப் படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஈரானை வலியுறுத்தினார். 

இதுதொடா்பாக, அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடா்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த டிரம்ப், ஈரானைச் சுற்றி அமெரிக்க போர்க் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள் நிறுத்தினார். அப்போது, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், ஸ்விட்சா்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ள ஓமன் தூதரகத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில்,  சுமுக உடன்பாடு எட்டப்படாததைத் தொடா்ந்து, அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலும் அமெரிக்காவின் கூட்டணி அமைத்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், உலகம் மற்றொரு போருக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த இரண்டு தரப்புக்கும் இடையே மீண்டும் கடுமையான போர் உருவாகியுள்ளது.

வரலாற்றுத் தகவல்கள் : 

இந்தப் போரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்த நாடுகளுக்கு இடையே நிலவிவரும் பிரச்னைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஈரானில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவந்து 1979-ஆம் ஆண்டு ஈரானின் முக்கியமான மதத்தலைவராக இருந்த அயதுல்லா கொய்மேனி ஆட்சியைப் பிடித்தார். அதோடு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெஸா ஷா பஹ்லவியின் ஆட்சிக்கு முடிவுக்கு வந்தது.

இதனால் ஈரானின் புதிய அரசுக்கு அமெரிக்கா பல்வேறு வகையில் குடைச்சல்களை கொடுத்து வந்தது. மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்களே. ஆனால் ஈரானில் மட்டும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்ததை, அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளே விரும்பவில்லை. இதனால் ஈரானுக்கும் அருகில் இருந்த பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே உறவு மோசமடைந்தது.

இப்படி பிராந்தியத்தில் தனது எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில், ஈரான் தனது ராணுவத்தை வளர்க்க பெரும் தொகையை செலவு செய்தது. அதேபோல அணு ஆயுதம் தயாரிக்கவும் ஈரான் தொடர்ந்து முயற்சித்து வந்தது. இது அந்தப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த நாடுகள் அடுத்தடுத்து அமெரிக்காவின் பாதுகாப்பை நாடத் தொடங்கின.

அதேபோல, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால், அது தனது இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் என்று அஞ்சிய இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்க தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களைச் சீரழிக்க பல ஆண்டுகளாக இஸ்ரேல் கடுமையாக முயற்சித்து வருகிறது. இதற்கு முன்னர் பலமுறை ஈரானின் அணு கட்டமைப்புகளை இஸ்ரேல் நேரடியாகவும் தாக்கியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக உள்ள ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரான் நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவே இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே உள்ள பிரச்னைக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. மேலும், இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்க முயல்கிறது என்று கூறி அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இப்படி பல ஆண்டுகளாக தொடர்ந்த பிரச்னைகளோடு, புதிதாக வந்த பிரச்னையும் ஒன்று சேர்ந்ததே இந்த போருக்கு காரணமாக அமைந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மாறிமாறி தாக்குதல்களால், ஹார்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்தை நிறுத்துவதாக ஈரான் அதிரடி முடிவை விடுத்துள்ளது. இதனால் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நீரிணை மூடப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

அணுசக்தி ஈரானின் உரிமை : 

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி நிலையில், ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.  இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய 15 நாடுகளில் உள்ள அமெரிக்காவின் 27 படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வரும் நிலையில், அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டு இஸ்ரேல், ஈரான் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்த, பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது.  8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக கூறி அமெரிக்காவும் இஸ்ரேல் மீதும் தங்களது போர் வெறியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது மிகத் தீவிரமாக தாக்குதல்களை நடத்தியது. ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை மீதும் ஈரான் ஏவுகணைக்ளை வீசி மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது. 

இத்தகைய சூழ்நிலையில், ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம். மேலும் ஈரான் மக்களுக்காக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.  இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது தெளிவானது.

அதன்படி ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் உச்ச அதிகாரமிக்க தலைவரான அயதுல்லா அலி கமேனியை குண்டுவீசி படுகொலை செய்து சர்வதேச நீதிக்கு மாறாக நடந்து அநியாயம் செய்துள்ளன.  தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட  தாக்குதலில், கமேனியுடன் சேர்ந்து புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி முகமது பாக்பூர் மற்றும் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

ஈரான் பதிலடி : 

உச்சத் தலைவர் கமேனியின் மறைவுக்குப் பதிலடியாக, ஈராக், கத்தார் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கி கடுமையாக தாக்கியது. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதோடு, பல நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. மேலும், ஈரான் ராணுவம் கடும் பதிலடி கொடுக்கப்போவதாக சூளுரைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் தங்கம் விலை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் படுகொலைக்கு, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது அநீதி என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது என்றும் ரஷ்யா, சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.  

கமெனி படுகொலை குறித்து எந்தவித கருத்தும் இந்திய பிரதமர் தெரிவிக்காத நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் கூட அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து உலக மக்களின்  திசை திருப்பவே  ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்ப் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழநிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை தொடங்கி இருப்பது உலக மக்கள் மத்தியில் பல்வேறு  சந்தேகங்களை எழுப்புகின்றன. 

==============================


No comments: