Thursday, September 26, 2024

கே.ரகுமான் கான் உரை....!

 நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்  நோக்கில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது....!

வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின் வாங்கக் கூடாது....!!

முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.ரகுமான் கான் பேச்சு....!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவைத் துணைத் தலைவருமான கே.ரகுமான் கான் குற்றம்சாட்டியுள்ளார். 

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தொடர்ந்து கருத்துகளை கூறி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ரகுமான் கான், அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உர்தூ மொழியில் பேசினார். அப்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 

தொடர்ந்து பேசிய ரகுமான் கான், “இந்த மசோதாவில் எந்தவித சிறப்பு அம்சங்களும் இடம்பெறவில்லை. ஒவ்வொரு அம்சமும் குழப்பம் வகையில் இருக்கிறது. மசோதா தொடர்பாக சிறப்பான முறையில் ஆலோசனைகள் நடத்தப்படவில்லை. யாரிடமும் கருத்துகள் கேட்கப்படவில்லை என்று அடுக்கடுக்கான குற்றம்சாட்டினார். ஏற்கனவே வக்பு வாரிய சட்டம் குறித்து 2013ஆம் ஆண்டு சிறப்பான முறையில் ஆலோசனைகள் பெறப்பட்டு, எதிர்க்கட்சிகளின் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சட்டம் நிறைவேறியது. ஆனால், இந்த அருமையான சட்டத்தை தற்போதைய ஒன்றிய அரசு முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் திருத்தியுள்ளது. ஆனால், முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை செய்யும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளிக்கிறது. 

குழப்பம் ஏற்படுத்த முயற்சி:

உண்மை என்னவென்றால், நமது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் மக்களிடையே பீதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வக்பு வாரிய நிலங்கள் குறித்து தவறான தகவல்களை அரசு தெரிவித்துள்ளது. அரசு கூறும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் தவறானவை. 9 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திடம் இல்லை. சுமார் 3 முதல் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் இருக்கும். நான் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளேன். வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து தகவல்களை சேகரித்து இருக்கிறேன். 2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த சரியான புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

உண்மை இப்படி, இருக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து தொடர்ந்து தவறான, பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. வக்பு வாரிய சொத்துக்கள் குறித்தும், மஸ்ஜித், கபரஸ்தான் ஆகியவை குறித்து ஒன்றிய அரசு தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிக் கொண்டே இருக்கிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் ஆகும்.

உண்மையை விளக்க வேண்டும்:

இத்தகைய சூழ்நிலையில், நமது சகோதர சமுதாய மக்களிடம் வக்பு வாரியம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும், அதன் பணிகள் குறித்தும், அதன் சொத்துக்கள் ஏப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நாம் சரியான முறையில் எடுத்துக் கூற வேண்டும். அவர்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க வேண்டும். இதற்காக சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைகள் மற்றும் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்து, சகோதர சமுதாய மக்களை அழைத்து அவர்களிடம் வக்பு வாரியம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள சந்தேகங்களை போக்க வேண்டும். இது முஸ்லிம் சமுதாயம் முன் உள்ள மிகப்பெரிய கடமையாகும். 

வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் குழு எடுத்த முடிவு குறித்து நாட்டு மக்கள் மத்தியில் நாம் எடுத்துக் கூற வேண்டும். இதற்காக சிறப்பான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நீண்ட போராட்டம்:

வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாப்பது என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த போராட்டத்தை ஒருபோதும் சமுதாயம் கைவிடக் கூடாது. போராட்டத்தில் இருந்து பின்வாங்கினால், நமது வக்பு சொத்துகள் அனைத்தையும் நாம் இழந்துவிட நேரிடும். நல்ல நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்ட சொத்துகளை இழந்துவிட்டால், பின்னர், எதையும் நாம் சரியான முறையில் செய்ய முடியாது. முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்தங்கிவிடும். 

வக்பு சொத்துக்களை குறிவைத்து, நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை நாம் சரியான முறையில் அணுகி, தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களிடம், வக்பு சொத்துக்கள், வக்பு வாரியம் ஆகியவை குறித்து மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துக் கூறி விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ந்து ஆலோசனைகளையும், கருத்தரங்கங்களையும் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்த வேண்டும். அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடையே வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இப்படி தொடர்ந்து சமுதாயம் செயல்பட்டால் தான், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான எண்ணங்களை உடைக்க முடியும். வக்பு சொத்துகளை கைப்பற்றும் முயற்சிகளை தடுத்த நிறுத்த முடியும். இதை சமுதாயம் நன்கு உணர்ந்துகொண்டு, விழித்துக் கொண்டு, தொடர்ந்து செயல்புரிந்து கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கி விடக் கூடாது. ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து சமுதாயம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு கே.ரகுமான் கான் உரையாற்றினார். 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


அதிரடி பேச்சு....!

 உரை....!

அரியானாவில் காங்கிரஸ் அலை....!

ராகுல் காந்தி அதிரடி பேச்சு...!!



வேண்டுகோள்....!

 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு வேண்டுகோள்:



Tuesday, September 24, 2024

எப்போதும் மகிழ்ச்சியாக....!

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா...?

வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு  பெரும்பாலான மக்கள் நிச்சயம் முடியாது என்றே விளக்கம் அளிக்கிறார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், வயது ஏறிக் கொண்டே செல்லும்போது, மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல பறிப் போகிறது என்ற நினைப்பு, எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு. இதன் காரணமாக அலுவலகப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பலர் தங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறார்கள். எப்போதும் ஒருவித இறுக்கமான மனநிலையில் இருந்து வருகிறார்கள். 

ஏக இறைவன் நமக்கு வழங்கியுள்ள இந்த அற்புதமான வாழ்க்கையில், நாம் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எப்போதும் நண்பர்கள், உறவுகளை இணைத்துகொண்டு, ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்க முடியும். இதற்கு முக்கியமாக, நம்மிடம் சரியான புரிதல் இருக்க வேண்டும். 60 வயது ஆகிவிட்டால், நம்முடைய வாழ்க்கை அத்துடன் முடிந்து போவதில்லை. மகிழ்ச்சி பறிப் போய்விடாது. 

அண்மையில், சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றை காணும் வாய்ப்பு நமக்கு கிட்டியது. அதில், ஒரு அழகான சூழ்நிலையில், அதிக வயதுடைய பெண்கள் பலர் ஒன்றாக கூடி, மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த காணொளியில் இடம்பெற்றிருந்த பெண்கள் அனைவருக்கும் 70 அல்லது 80 வயதுக்கு மேல் இருக்கும். ஒருசில பெண்கள் 100 வயதை தாண்டி இருந்தார்கள். அப்படி இருந்தும், அவர்கள் அனைவரும் எந்தவித சோர்வும் இல்லாமல், மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒன்றாக கூடி தங்கள் எண்ணங்கள், ஆசைகளை பறிமாறிக் கொண்டார்கள். 

மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? 

இப்படி வயதான இந்த மூதாட்டிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் என கேள்வி எழுந்தபோது, அதற்கு அவர்கள் மிக அழகாக விளக்கம் அளிக்கிறார்கள். "நாங்கள் அனைவரும் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு, அதன்மூலம் பல நல்ல பணிகளை செய்து வருகிறோம். குறிப்பாக, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அத்துடன் ஒவ்வொரு மாதமும் அனைவரும் ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் பேசுவதுடன், நம்முடைய எண்ணங்களை ஒவ்வொருவரிடமும் பரிமாறிக் கொண்டு, ஆனந்தம் அடைகிறோம். மனநிலையை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எங்களை மிகவும் சிறப்புடன் செயல்பட உதவுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறோம். 

வாழ்க்கையை மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வைத்துக் கொள்ள புத்தகங்கள் ஒரு நல்ல துணை என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். அதன் காரணமாக, ஒரு நூல் நிலையம் எங்கள் குழுவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அற்புதமான நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நூல்களை படிக்கும் நம்மில் பலர், அதுகுறித்து மற்றவர்களிடம் மிக அழகான முறையில் எடுத்துக் கூறுகிறார்கள். அந்த நூலின் சிறப்பு, குறை ஆகிய அனைத்தையும் அறியும்போது, நூல்கள் மீதான எங்கள் பிரியம் மேலும் அதிகமாக மாறிவிடுகிறது. நூல்கள் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது. எனவே நல்ல நூல்களை தேடி தேடி வாங்கி அதை படிக்கிறோம். அதன்மூலம் நல்ல தெளிவு எங்களுக்கு கிடைக்கிறது. 

எப்போதும் உற்சாக மனநிலை:

நாங்கள் 60 அல்லது 80 வயதை கடந்துவிட்டாலும் இப்போதும், எப்போதும் இளமையாகவே எங்களை உணர்கிறோம். மனதில் எப்போதும் இளமை எண்ணங்கள் அசைப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும், வேறுவேறு பகுதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம். விதவிதமான உடைகள் அணிந்துகொண்டு, ஆரோக்கியமான எண்ணங்களுடன் எப்போது உற்சாகமான மனநிலையில் இருந்து வருகிறோம். இதன் காரணமாக தான், எங்கள் முகங்களில் கூட, உற்சாகம் இருந்து கொண்டே இருக்கிறோம். பேச்சில் உற்சாகம், செயலில் உற்சாகம் என அனைத்திலும் உற்சாக மனநிலையில் இருக்கும்போது, வயது ஒரு தடையாக இல்லாமல், எங்களை எப்போதும் ஆர்வதுடன் செயல்பட வைக்கிறது. 

நகர்ந்துகொண்டே இருங்கள்:


வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நகர்ந்துகொண்டே இருங்கள். ஒரே இடத்தில் சோர்வு அடைந்து அமர்ந்து விடாதீர்கள். நல்ல நட்புகளை, உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அடிக்கடி பேசி மகிழ்ந்து, அன்பை வெளிப்படுத்துங்கள். இங்கே இருக்கும் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். ஆனால், அனைவரிடமும், உற்சாகமும் மகிழ்ச்சியும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அதற்கு முக்கிய காரணம், எங்களிடம் சோர்வு எண்ணங்கள் ஒருபோதும் இருப்பது இல்லை. நோய்கள் குறித்து எண்ணங்கள் இருப்பது இல்லை. அப்படி நோய் ஏற்பட்டாலும், அதற்கு சிகிச்சை பெற்றுவிட்டு, மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்து விடுகிறோம். 

ஒருவர் மற்றவர்களின் நலனில் மிகவும் அக்கறை செலுத்தும் பண்பு எங்களிடம் உண்டு. உதவி செய்யும் மனப்பான்மை அனைவரிடமும் உண்டு. இதுபோன்ற பல காரணங்கள் தான் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது" இப்படி அந்த குழுவில் இடம்பெற்று இருந்த மூதாட்டிகள், மன்னிக்கவும், இளம் பெண்கள் சொன்னதை காணொளியில் கேட்டபோது, நமக்கு வியப்புக்கு மேல் வியப்பு ஏற்பட்டது. 

வேண்டாம் இந்த மனப்பான்மை:

இந்தியா உட்பட ஆசிய நாடுகளில், கொஞ்சம் வயது ஆகிவிட்டால், உடனே அவர்களை (முதியோர்களை) நாம் ஒதுக்கி வைத்து விடுகிறோம். வயதானவர்கள் மீது சரியான முறையில் அன்பு செலுத்துவதில்லை. அவர்களின் ஆசைகளை காதுகொடுத்து கேட்பதில்லை. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை. இதன் காரணமாக, எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய நம் முதியோர்கள், வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். 

முதியோர்களும், தங்களை இளமையாக எப்போதும் நினைத்துக் கொள்வதில்லை. தங்களுக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்ற எண்ணம் அவர்களிடம் வந்துவிட்டதால், அவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முதுமை ஒரு தடையில்லை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். நட்புகளையும் உறவுகளையும் அதிகமாக வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதன்மூலம் நிச்சயம் மகிழ்ச்சி கிடைத்துக் கொண்டே இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சந்திப்பு...!

"You came here like a god for us. Not even our Sarpanch or MLA has come here, not even once.”

“We want you to become our Prime Minister, then only our kids will get jobs”.

People of Haryana shared their concerns with LoP @RahulGandhi Ji.



Monday, September 23, 2024

உடல் வலிமையானது....!

இயற்கையிலேயே உடல் வலிமையானது....!

உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மக்கள் அனைவரின் விருப்பமாக இருந்து வருகிறது. அதற்காக அவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும் உடனே கவலை அடைந்துவிட்டு, மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதன்மூலம் ஓரளவுக்க பலனும் கிடைக்கிறது. 

உடல்நலனை கருத்தில் கொண்டு இப்படி அடிக்கடி மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சரியல்ல என்பது மருத்துவர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இது ஒரு கெட்டப் பழக்கம் என்றும் இதன்மூலம் மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகும் நிலை உருவாகிவிடும் என்றும் கல்லீரல், கிட்னி, உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருந்து வருகிறது. 

உடல் வலிமையானது:

அண்மையில் சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த காணொளியில் பிரபல மருத்துவர் ஒருவரின் பேட்டி இடம்பெற்றிருந்தது. மருந்து, மாத்திரை மற்றும் உடல்நலன் குறித்து அவர் அற்புதமான முறையில் விளக்கம் அளித்து இருந்தார். மனிதனுக்கு மருந்து, மாத்திரை என்பது கடைசி தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூறியதைக் கேட்டபோது உண்மையிலேயே வியப்பு ஏற்பட்டது. 

மருந்து, மாத்திரை இல்லாமல் பாதிக்கப்பட்ட உடல் எப்படி நலம் அடையும்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கு அந்த மருத்துவரே பதில் அளிக்கும் வகையில் மிகச் சிறப்பான முறையில் விளக்கம் அளித்து இருந்தார். "ஏக இறைவன் மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடைகளில் ஆரோக்கியமான உடல்நலன் ஆகும். பல்வேறு சமயங்களில் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு, அதை விரட்டியடிக்கும் சக்தி உடலுக்கு உண்டு. உடல் மிகவும் வலிமையானது. எந்தவித நோய்களையும் சமாளிக்கும் திறன் கொண்டது. எனவே, சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டால், உடனே மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். ஓரிரு நாட்கள், மன உறுதியுடன் இருந்தால், நிச்சயம் பாதிக்கப்பட்ட உடல், நிச்சயம் நலம் பெற்றுவிடும். இதை நான் பலரிடம் நேரில் பார்த்தை வியந்து இருக்கிறேன். 

மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஒருவரை ஒருநாள் சந்திக்கும்போது, அவர் மிகவும் சோர்வாக இருந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்தது. ஏதாவது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே என நான் அவரிடம் ஆலோசனை கூறினேன். அதற்கு அவர், என்னுடைய உடல் மிகவும் வலிமையானது. அது எந்த நோயையும் எதிர்கொண்டு, அதை விரட்டி அடித்துவிடும் என கூறியதை கேட்டு நான் வியப்பு அடைந்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரை சந்தித்தபோது, அந்த கவிஞர் உண்மையிலேயே மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். இதன்மூலம் இயற்கையிலேயே உடல் வலிமையானது. அது எதையும் எதிர்கொள்ளும் சக்தி கொண்டது என்பதை மருத்துவர் என்ற முறையில் நான் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. உடல்நலம் பாதிக்கும்போது, எந்தவித மருந்து, மாத்திரைகள் இல்லாமலேயே உடல் சீராகிவிடும் என்பது உண்மைதான். இன்றும் பலர் உடல்நலம் பாதிக்கும்போது, உடனே மருந்து எடுத்துக் கொள்வதில்லை. தங்களது மன வலிமை மூலம் இயற்கை வழங்கிய அருட்கொடை மூலம் எந்தவித உடல் தொல்லைகளுக்கும் தீர்வு கண்டு விடுகிறார்கள். 

நான்கு முக்கிய அம்சங்கள்:

உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நான்கு முக்கிய அம்சங்களை வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி, முதலாவது அம்சம், நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகும். சரியான உணவு, சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இதில் முழு கவனம் செலுத்தினால், நிச்சயம் உடல்நலம் பாதிப்பு ஏற்டாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டாலும், உடல் மற்றும் மன வலிமை மூலம் அது உடனே சீராகி நலம் பெற்று விடும். 

இரண்டாவது முக்கிய அம்சம், உடற்பயிற்சியாகும். வாழ்க்கையில் நாம் எப்போதும் மகிழ்ச்சியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், நாள்தோறும் நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை நாள்தோறும் செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். உடலில் இருந்து வியர்வை வரும் வகையில் இந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். உடலில் இருந்து வியர்வை வெளியே வரும்போது, உடலில் தேங்கியிருக்கும் கெட்ட அமிலங்கள் வெளியே வந்துவிடும். உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும். 80 வயதுக்கு முன்பு சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்ய வேண்டும். இது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். களைப்பு அடையும் வரை உடற்பயிற்சி செய்யும்போது, வியர்வை வெளியே வந்து, நமது உடலை புதிய உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள வழிவகை செய்யும்.

மூன்றாவது அம்சம், நல்ல பழக்க வழக்கங்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மனிதனுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தால், உடல் மட்டுமல்ல, மனமும் எப்போதும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். 

நான்காவதாக, சரியான தூக்கம். சரியான தூக்கம் என்பது அமைதியான தூக்கமாகும். நம்மில் பலர் இரவு நேரத்தில் சரியாக தூங்குவது இல்லை. சரியான நேரத்திற்கு படுகைக்கு செல்வதில்லை. நீண்ட நேரம் கண் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். இரவு இரண்டு மணிக்குப் பிறகு, தூங்கச் செல்கிறார்கள். இது சரியான முறை இல்லை. இது உடல்நலனை பெரிதும் பாதிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மனிதனுக்கு சரியான தூக்கம் இருக்க வேண்டும். மனிதன் சரியான அளவு தூங்க வேண்டும். சரியான நேரத்தில் படுக்கைக்கு தூங்கச் செல்ல வேண்டும். தூக்கம் என்பது ஏக இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் என்பதை மறந்துவிடக் கூடாது. தூக்கம் மனிதனை மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

கடைசியாக, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்துவிடுவது, சூரியன் மறைந்தபிறகு, உணவு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது. இதை தான் இந்திய மருத்துவம் நமக்குச் சொல்லும் முக்கிய பாடங்கள் ஆகும். உண்ணாவிரதம் என்பதை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகும். அதற்காக எப்போதும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. உணவு உண்ணும் முறையில் சில நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் உடலில் உள்ள ஹார்மோன்கள் நல்ல விதமாக செயல்படும். 

வேண்டாம் மருந்து, மாத்திரை:

நாம் ஆரம்பத்திலேயே சொன்னப்படி, மருந்து, மாத்திரை என்பது கடைசி அம்சமாக இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏக இறைவன் உடலுக்கு இயற்கையாகவே நல்ல வலிமையை கொடுத்துள்ளான். அந்த உடல் வலிமை, அனைத்து நோய்களையும் எதிர்கொண்டு, வீழ்ச்சி அடையச் செய்துவிடும். உடல் மற்றும் மன வலிமை மூலம் எந்தவித பிரச்சினைகளையும் நாம் சவால்களுடன் எதிர்கொள்ள முடியும். வாழ்க்கையே சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் தான். எனவே, அந்த போராட்டத்தை உடல், மன வலிமையுடன் எதிர்கொண்டு, வெற்றி பெறுவோம்". இவ்வாறு அந்த மருத்துவர் கூறியதைக் கேட்டபோது, உண்மையிலேயே மிகப்பெரிய அளவுக்கு வியப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், ஏக இறைவனின் படைப்பு நுட்பத்தைக் கண்டு, அவனுக்கு நன்றி சொல்ல மனம் துடித்தபோது, இரு கரங்களையும் மேலே தூக்கி துஆ கேட்கக் தொடங்கினேன்.  

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


யார் பொறுப்பு….?

 

வேலையின்மை, வறுமை அதிகரிப்புக்கு யார் பொறுப்பு….?

 

-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது நாடு நிச்சயமாக அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. நமது அரசாங்கம் வறுமையை எதிர்த்துப் போராட இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய நிலைமைகள், நாட்டில் வறுமையை மேலும் அதிகரித்துள்ளன. கொரோனா பேரிடர் உள்ளிட்ட பல காரணங்களால், இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் வறுமையில் வாடுகின்றன.

சில முக்கியமான உண்மைகள்:

இந்தியாவின் மக்கள் தொகையில் 27 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர், அதேசமயம் 96 புள்ளி 14 சதவீத மக்கள் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ளனர்.

வறுமை அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளன. நாட்டில் மில்லியன் கணக்கான குடிமக்கள் குடிசைகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் சாதிப் பிரிவினை காரணமாக வறுமை தொடர்நது அதிகரித்து வருகிறது. வறுமை காரணமாக பாலின சமத்துவமின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில், உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111 வது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டில் மில்லியன் கணக்கான குழந்தைகள் வறுமையின் காரணமாக கல்வியை இழந்துள்ளனர். ஆண்டு கல்வி நிலை (ASER) அறிக்கையின்படி, 2021-ஆம் நிதியாண்டில் 12 புள்ளி 97 மில்லியன் குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிக வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன.

நாட்டில் 16 புள்ளி 6 சதவீத மக்கள் மோசமான ஊட்டச்சத்தால் பாதிக்கப்படுகின்றனர். யுனிசெஃப் அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் இந்தியர்கள் வெறும் வயிற்றில் தூங்குகிறார்கள். அதேநேரத்தில் 7 ஆயிரம் பேர் பசியால் நாள்தோறும் இறக்கின்றனர்.

கூடுதல் தகவல்கள்:

உலக ஏழை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 7 சதவீதம் (அதாவது 10 கோடி மக்கள்) ஒவ்வொரு ஆண்டும் வறுமைக் கோட்டுக்குக் கீழே சுகாதாரத்திற்காகப் பணம் செலவழிக்கிறார்கள். நமது சுகாதார அமைப்பு மிகவும் விலை உயர்ந்தது என்பதை இது காட்டுகிறது.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் 20 மில்லியன் குழந்தைகள் தெருக்களில் வாழ்கின்றனர். நாட்டில் வறுமையின் காரணமாக 6 லட்சத்து 31 ஆயிரம் பேர் வீடில்லாமல் உள்ளனர்.

வெற்று முழக்கங்கள்:

மேலே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வறுமை தாண்டவம் ஆடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாட்டில் ஏழை மக்கள் இன்னும் ஏழ்மை நிலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டது என்று நாள்தோறும் வெற்று முழக்கங்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. என்ற வரி விதிப்பு முறையால், தங்களது தொழில்கள் முடங்கிவிட்டதாகவும், வருவாய் பெரும் அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குற்றம்சாட்டி வேதனை அடைந்து வருகின்றன. ஜி.எஸ்.டி. முறையை மாற்றி அமைக்க வேண்டும் என வணிக நிறுவனங்கள் கோரிக்கை வைத்தால், அந்த கோரிக்கைகளை மத்திய அரசு சரியான முறையில் பரிசீலனை செய்வது இல்லை. மாறாக அலட்சியம் செய்து, கோரிக்கை வைக்கும் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏளனம் செய்யப்படுகிறார்கள். இதன் காரணமாக வேதனை அடையும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மேற்கொண்டு, எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல், இருந்து விடுகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரி முறை, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைவாசிகள் தாறுமாறாக வேகமாக உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக மக்களிடம் வாங்கும் சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வருவதால், வணிக நிறுவனங்களில், பொருட்கள் தேக்கம் அடைந்து விடுகின்றன. வணிகம் வீழ்ச்சி அடைந்து பெரும் அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வணிகர்கள் தள்ளப்படுகிறார்கள். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல், வேதனை மேல் வேதனையை சுமக்க வேண்டிய நிலை, வணிகர்களுக்கு மட்டுமல்ல, மாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நிலைமை:

இந்தியாவில் சுமார் 25 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். தாய் நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்களாக இருந்துவரும் முஸ்லிம்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியே உள்ளனர். உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

உயர்கல்வி பெற்றாலும், வேலைவாய்ப்புகளில் சேரும் முஸ்லிம் இளைஞர்கள் மிகமிக குறைந்து அளவுக்கு மட்டுமே உள்ளனர். கடந்த பத்து ஆண்டு காலமாக பா.ஜ.க. நாட்டு மக்கள் மத்தியில் விதைத்த நச்சு கொள்கை, நச்சு பேச்சு, நச்சு எண்ணங்கள், முஸ்லிம்களை மிகப்பெரும் அளவுக்கு பாதித்து வருகிறது. வட மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் எப்போதும் ஒருவித அச்சத்துடன் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும், அனைத்துவிதமான துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கும் முஸ்லிம்கள், இந்திய மக்கள் அனைவரையும் தங்கள் சகோதரர்களாக, சகோதரிகளாக நினைத்து பழகுகிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில், சகோதரத்துவ மனப்பான்மை மிகவும் உச்சத்தில் இருந்து வருகிறது. இன்பம், துன்பங்களில் ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லும் நல்ல பண்பாடு இருந்து வருகிறது. இதனை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நாட்டில் நிலவும் வேலையின்மை, வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, முற்றுப்புள்ளி வைக்க எந்தவித முயற்சிகளையும் செய்யாமல், மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் எல்லா வளங்களும் பெற்று வாழ திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, வேலையின்மை வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் நாட்டின் நலனின் அக்கறை கொண்ட சிந்தனைவாதிகளின் கருத்ததாக இருந்து வருகிறது.

================================