Monday, March 9, 2026

தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு நிதி ஒதுக்கீடு...!

தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு....!!

 அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!!

சென்னை, மார்ச்.10- தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு உர்தூ அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை :

தமிழ்நாடு உர்தூ அகாடமியின் மேம்பாட்டிற்காக அரசு முக்கியத்துவம் கொடுத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள உர்தூ ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற கும்பகோணம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் உர்தூ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார். 

நிதி ஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியீடு :

இந்நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை 9.03.2026 திங்கட்கிழமையன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒருமுறை மானியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உர்தூ அகாடமி செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அரசு, அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மானின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேற்கண்ட நிதி, தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு நிரந்தர அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம், அலுவலக பராமரிப்பு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு உர்தூ நூலகம் அமைத்தல், மாநிலத்தில் உர்தூ மொழியை மேம்படுத்தி, அதன் கலாச்சார பாரிம்பரியத்தை பாதுகாத்தல், புகழ்பெற்ற உர்தூ இலக்கியவாதிகளை கௌரவித்தல், கருத்தரங்கங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், உர்தூ கவியரங்குகள் ஆகியவற்றை நடத்துதல், முக்கிய தேசிய நாட்களில் கட்டுரை, மற்றும் இலக்கிய போட்டிகளை நடத்துதல், மாநிலத்தில் திறன் மேம்பாட்டு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்தல், மாநிலத்தில் உர்தூ மொழியை மேம்படுத்த சிறப்பு மையம் அமைத்தல், உர்தூ மொழியில் மாத இதழ் நடத்துதல், உர்தூ மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளாமா படிப்புகளை தொடங்குதல், பெண்களுக்கான பயிற்சி மையங்களை அமைத்தல் ஆகியவற்றிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

உர்தூ மொழி வளர்ச்சிக்கு உதவும் :

தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள 44 லட்சத்து 50 ஆயிரம் நிதியின் மூலம், அகாடமி புதிய உற்சாகத்துடன் செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன்மூலம் உர்தூ மொழி பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உர்தூ மொழியின் சிறப்பு கொண்டு சேர்க்க வாய்ப்பு உருவாகியுள்ளது.அத்துடன் உர்தூ மொழி குறித்த ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாகும் என்றும் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கு உர்தூ மொழி ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: