இளம் சாதனையாளர்களை அறிந்துகொள்வோம்....!
உலகின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற முஸ்லிம் இளைஞர்களின் முழு விவரங்கள் தொடர்பான கட்டுரை மணிச்சுடர் நாளிதழில் 09.03.2026 திங்கட்கிழமையன்று வெளியானது.
இன்றைய கட்டுரையில் ஒருசில இளம் சாதனையார்கள் குறித்த விவரங்களையும் சுவையான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வில் நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் கல்வியில் ஆர்வம் கொண்டு, துடிப்புடன் செயல்படும் முஸ்லிம் இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் ஊக்குவிக்க வாய்ப்புகள் ஏற்படும்.
இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவு சேவை (ஐ.எப்.எஸ்.), இந்திய காவல் சேவை (ஐ.பி.எஸ்.), குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய மத்திய சேவைகள் பணிக்காக இந்தாண்டு வெளியான தேர்வு முடிவுகளின்படி மொத்தம் 958 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களின் முஸ்லிம்களின் எண்ணிக்கை 53 ஆகும்.
இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி :
அகில இந்திய அளவில் வெளியான பட்டியலில், முஸ்லிம் பெண் இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, 24வது இடத்தைப் பிடித்து மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்துள்ளார். ஆர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனையை அவர் எட்டியதாக இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
நபியா பர்வேஸ் :
இதேபோன்று, வெற்றி பெற்றவர்களில் நபியா பர்வேஸ், அகில இந்திய அளவில் 29வது இடத்தைப் பிடித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள தரியாபூர் ஜகா கிராமத்தைச் சேர்ந்தவர் நபியா. புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் அவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியின் மாணவியாகவும் இருந்தார். இது சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.
நபியா பர்வேஸ் அகில இந்திய அளவில் 29வது இடத்தைப் பிடித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று, நாட்டின் முதல் 30 சாதனையார்களின் ஒருவராக இடம்பிடித்தார்.
முஹம்மது ஸ்வாலா :
கேரள மாநிலத்தைச் சேர்ந்த டி.ஏ. முஹம்மது ஸ்வாலா சிவிஸ் சர்வீசஸ் தேர்வில் 429வது ரேங்க்கில் தேர்வாகியுள்ளார். தற்போது இவர், கடந்த 2024 ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 711வது ரேங்க் பெற்று ஐஆர்டிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பொறிறியல் படிப்பை 2016ஆம் ஆண்டு முடிந்த முஹம்மது ஸ்வாலா, டீச் ஃபார் இந்தியா பெல்லோஷிப்பின் கீழ் 2016-2018 வரை சென்னையில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
====================
"மிகவும் கடினமான தேர்வாக
கருதப்படும் ஒரு தேர்வில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வத்துடன்
கலந்துகொள்ள முன்வர வேண்டும். கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம்
வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும்"
====================
பின்னர் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் உதவித்தொகையுடன் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானார். மேலும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள என்லைட்ஐஏஎஸ் நிறுவனத்தில் விருப்பத் தேர்வில் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றார். முஹம்மது ஸ்வாலாவின் தந்தை அப்துல் நசீர் ஒரு தொழில் அதிபராக இருந்து வருகிறார். தாய் சபீனா நசீர் இல்லத்தரசியாக இருந்து குடும்பத்தை அழகிய முறையில் கவனித்து வருகிறார். இவருக்கு அமீனா என்ற ஒரு சகோதரி உண்டு. வணிக பட்டதாரியான அவர் திருமணமானவர். முஹம்மது ஸ்வாலாவின் பூர்வீகம் கேரளாவின் கோட்டயம் மாவட்த்தில் உள்ள வைக்கம் என்பது குறிப்பிடத்தது.
சாதிக்க வாருங்கள் :
மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஒரு தேர்வில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். அதேநேரத்தில் இன்னும் நிறைய இளைஞர்கள் இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும். கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு மேற்கண்ட இளைஞர்கள் நமக்கு மிகச் சிறந்து எடுத்துக்காட்டு என்பதை நம்முடைய சமுதாய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே எந்தவித தயக்கமும் இல்லாமல் சாதிக்க உடனே புறப்படுங்கள். அதன்மூலம் உங்களுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ந்துகொள்ளுங்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment