கேரளாவில் புதிய அரசு அமைப்பதில் முக்கிய பங்காற்றும்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்....!
கேரள மாநில தலைவர் பானக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை...!!
கோழிக்கோடு, மே.03- கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 04.05.2026 அன்று வெளியாகும் நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கேரள மாநில தலைவர் பானக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
140 தொகுதிகளை கொண்டு கேரள சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதேபோன்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் 04.05.2026 அன்று வெளியாக இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆலோசனை :
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கேரளாவில் புதிய ‘அரசு அமைப்பு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கிய அங்கமாக உள்ள இ.யூ.முஸ்லிம் லீக், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக், 20 முதல் 22 தொகுதிகளை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் இருந்து வருகிறது.
மேலும், நடந்த முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கேரளாவில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனநயாக முன்னணி ஆட்சியை கைப்பற்றினால், மாநிலத்தின் அடுத்த முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இ.யூ.முஸ்லிம் லீக் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பதவிக்கு போட்டி :
தேர்தல் முடிவுகள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக இருப்பதால், காங்கிரஸ் கட்சியில் பலர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட ஆர்வத்துடன் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இ.யூ.முஸ்லிம் லீக் எடுக்கும் முக்கிய முடிவு, கேரளாவில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்கும்.
எனினும், கேரள மக்களின் எண்ணங்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை ஏற்றுதான், கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை இ.யூ.முஸ்லிம் லீக் தீர்மானிக்கும் என தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கேரளாவில் அடுத்த காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்து கருத்து கூறியுள்ள கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், முதலமைச்சர் தேர்வு விவகாரத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய தலைமை முக்கிய முடிவு எடுக்கும் என்றும், கேரள மக்களின் விருப்பங்களின்படி முதலமைச்சர் தேர்வு அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கிய அங்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எச்சரிக்கையுடன் காத்திருந்து கவனிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. கூட்டணியின் நிலைத்தன்மைக்கு முஸ்லிம் லீக்கின் மையத்துவத்தை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதால், வரவிருக்கும் நாட்களில் அதன் நிலைப்பாடு முக்கியமானதாகிறது. இதன்மூலம் கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைமைத் தேர்வுகள் மற்றும் கூட்டணியின் நிலைத்தன்மையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செல்வாக்கு அதன் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுவது உறுதியாக தெரியவருகிறது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment