Sunday, May 3, 2026

முடிந்தது தேர்தல், உயர்ந்தது சிலிண்டர் விலை...!

" முடிந்தது தேர்தல், உயர்ந்தது சிலிண்டர் விலை "

உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரிப்பு....! 

- ஜாவீத் -

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்தும்,  இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு ஒரே நாளில் 993 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.  2026 மே ஒன்றாம் தேதி  நிலவரப்படி, வர்த்தகப் பயன்பாட்டிற்கான  19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை, ஒரே நாளில் அதிரடியாக 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை டெல்லியில் 3 ஆயிரத்து 71 ரூபாய் 50 காசுகளாகவும், சென்னையில் 3 ஆயிரத்து 237 ஆகவும் உள்ளது.  மேலும், வணிக சிலிண்டர் விலை 3 மாதங்களில் 81 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது சிறிய உணவகங்கள், தேநீர்க்கடைகள் மற்றும் பேக்கரிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. அத்துடன், இந்த விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர்ச் சூழல் மற்றும் சர்வதேச எரிசக்தி விலை உயர்வு காரணமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு, உணவகங்கள் உணவுகளின் விலையை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தி, பொதுவான பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

சாதாரண மக்களுக்கு கடும் பாதிப்பு :

வணிக சிலிண்டர் விலையை கடந்த 3 மாதங்களில் 81 சதவீதம் உயர்த்தி இருப்பதன் மூலம், சிறிய உணவகங்கள், தேநீர்க்கடைகள் மற்றும் பேக்கரிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டால், உண்மையான பாதிப்பு சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு தான் அதிகம் என்பது தான் யதார்த்தம் ஆகும். சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தொழில்கள் மற்றும் பணிகள் காரணமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக, இளம் வயதைச் சேர்ந்த இளைஞர்கள், திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள், உணவகங்களை நம்பியே தங்களது வாழ்க்கை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். 

தங்களுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை உணவுப் பொருட்களுக்காக இவர்கள் செலவழித்து வருகிறார்கள். மேலும், உணவகங்கள், தேநீர்க்கடைகள், மற்றும் பேக்கரிகளை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அலுவலகத்திற்குச் சென்று விடுதிக்கு திரும்பும், இளைஞர்கள், பெண்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு தொகையை உணவகங்களுக்காக ஒதுக்கி, அந்த உணவகங்கள் மூலம் கிடைக்கும் சுவையான உணவை உண்டு வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை உணவுக்காக செலவழித்துவிட்டு, தாங்கள் சேமிக்கும் தொகையை பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

தற்போது வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ஒரே நாளில் 993 ரூபாய் வரை உயர்த்தி இருப்பதன் மூலம், உணவகங்கள், தேநீர்க்கடைகள் மற்றும் பேக்கரிகள் அனைத்தும், தங்களது நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் விலையை உயர்த்திவிட்டன. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி, தற்போது 20 ரூபாய் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, தோசை, சப்பாத்தி என அனைத்து உணவு வகைகளின் விலைகளும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. தேநீர்க்கடைகளிலும் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. சில உணவகங்கள், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே, தயாரித்து விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இளைஞர்கள் தாங்கள் விரும்பும் உணவை இனி சாப்பிட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். மாத ஊதியம், தினக்கூலி என பல்வேறு நிலைகளில் வருவாய் ஈட்டும், சாதாரண மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள், சிலிண்டர் விலை உயர்வால் மிகமிக கடுமையாக பாதிப்பு ஆளாகி, தங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். 

மத்திய பாஜக அரசின் இந்த திடீர் விலை உயர்வால், உணவகங்கள், தேநீர்க்கடைகள், பேக்கரிகள் மற்றும் பிற உணவு தயாரிப்பு நிறுவனங்களில், வணிகம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வணிகச் சங்கங்கள், சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. விலை உயர்வுக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தப்படும் என்றும் வணிகச் சங்கங்கள் அறிவித்துள்ளன. எனினும் மத்திய பாஜக அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றே தெரிகிறது. எனவே தான் மக்களின் நலனின் சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்படும் அரசாக பாஜக அரசு இருந்து வருகிறது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

உண்மை காரணம் என்ன ? :

ஈரானில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் விலைகள் எப்போது, ஏற்ற இறக்கம் அடையும் என்ற கவலை நாட்டு மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது எல்.பி.ஜி தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்கும், அதைத் தொடர்ந்து தெஹ்ரான் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலுக்கும் முன்னர், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் அதிகமாகவும், எரிவாயுவில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தையும், எல்.பி.ஜி.யில் 85 முதல் 90 சதவீதத்தையும் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து பெற்று வந்தது.

இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகை காரணமாக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தற்போது அழுத்தத்தில் உள்ளன. ஆயினும்கூட, இடைக்காலத்தில் ரஷ்யா போன்ற பிற நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடைகளை இந்தியா ஓரளவு ஈடுசெய்துள்ளது. இதற்கு மாறாக, தொழிற்சாலைப் பயனாளர்களுக்கான எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி கிடைப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம் :

தற்போது வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் சுமார் ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டதால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பெரிதும் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று தாம் முன்பே கூறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ஒரேநாளில் .993 உயர்த்தப்பட்டுள்ளது மிகப்பெரிய விலை உயர்வு இதுவே என்றும் இதுதான் தேர்தலுக்கான விலை என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.  

வெறும் 3 மாதங்களில் 81 சதவீதம் விலை உயர்வு என்பது மிகப்பெரிய விலை உயர்வு. இதனால், தேநீர் கடைகள், தாபாக்கள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் என அனைவரின் சமையலறையின் மீதும் சுமை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின்  தாக்கம் நாட்டு மக்களின்  உணவுத் தட்டின் மீதும், உணவு விலையிலும் எதிரொலிக்கும் என்றும் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே போர் காரணமாக ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

விலை உயரும் உணவு வகைகள் :

வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் பெரும்பாலான உணவகங்களில், உணவு பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.  25 ரூபாய்க்கு விற்கப்பட்ட பரோட்டா தற்போது 50 முதல் 60 ரூபாய்  வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரியாணி வகைகள் வழக்கத்தை விட 30 ரூபாய் அதிகமாகவும் விலை உயத்தப்பட்டுள்ளது. . இதனால் ஹோட்டல் உணவுகளையே நம்பியிருக்கும் சாதாரண மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மொத்தத்தில் பார்க்கும்போது, சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒரு சாதாரண மாற்றம் அல்ல.  அது பொருளாதாரத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணமாக உள்ளது. உலகளாவிய காரணிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அரசியல் பதற்றம், விநியோக சங்கிலி சிக்கல்கள் இவை அனைத்தும் இணைந்து இந்தியாவில் விலை உயர்வை உருவாக்குகின்றன. இதன் விளைவாக, அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து, நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை உருவாகிறது. எனவே, இந்த நிலைமையில் மக்கள் செலவுகளை கவனமாக திட்டமிடுவது அவசியமாகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு சிலிண்டர் விலை உயர்வு தாறுமாக உயர்த்தப்பட்டுள்ளது. மறைந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சிலிண்டர் விலை 400 ரூபாயை தாண்டியபோது, பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் பாஜக ஆட்சியில் வணிக சிலிண்டர் விலை பெருமளவு அதிகரித்துள்ளது. இது தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அத்துடன், நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதாரச் சுமைகளை கட்டாயம் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் கூறப்பட்டாலும், பாதிப்பு என்பது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு தான் என்பது தான் உண்மையான நிலையாகும். 

===================================


No comments: