தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருநாள்...!
2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்களாக முறையே ஏ.எம்.ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரச்சாரம் 21.04.2026 அன்று மாலையுடன் நிறைவு அடைகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சாரம் உச்சக் கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாணியம்பாடி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனால் வாணியம்பாடி தேர்தல் களத்தில் ஒரு புதிய எழுச்சி உருவானது. தமது பிரச்சாரத்தின் போது, ஏணி சின்னத்திற்கு வாக்களித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
இதேபோன்று, திமுக கூட்டணி தலைவர்களும் ஏணி சின்னத்திற்கு இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவரும் தொகுதி மேலிட பொறுப்பாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் மற்றும்இ.யூ.முஸ்லிம்லீகின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வாணியம்பாடியில் முகாமிட்டு ஏணியின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூடான தேர்தல் களத்தில், மணிச்சுடர் நாளிதழின் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், வாணியம்பாடி தொகுதியில் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதியில் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் வாணியம்பாடி தொகுதியில் ஏணி சின்னத்திற்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிய முயன்றார். சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு மத்தியில் அவர் திரட்டிய முழு விவரம் இதோ உங்கள் பார்வைக்கு:
வாணியம்பாடி தொகுதி ஒரு பார்வை :
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்த தொகுதியின் எண் 47 ஆகும். திருப்பத்தூர், அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்.
வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர். இந்த தொகுதியில் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகள், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் உள்ளன. இத்தொகுதியில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
அத்துடன், தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள் இந்த தொகுதியில் உள்ளன. உதயேந்திரம் பேரூராட்சி, ஜாபராபாத் சென்சஸ் டவுன், வாணியம்பாடி நகராட்சி மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 262 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், மோட்டூர் மற்றும் திம்மாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை,தொடக்கப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகச் செயல்படுகின்றன. இந்த தொகுதியில் முஸ்லிம் லீக் 6 முறையில் வெற்றி பெற்று இருக்கிறது. அதிமுக 3 மூன்று முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிவாகை சூடியுள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 220 வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேரும் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 713 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 50 பேரும் அடங்குவர்.
மீண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டி :
வாணியம்பாடி தொகுதியில் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிவாய்ப்பை இழந்த இ.யூ.முஸ்லிம் லீக், இந்த முறை மீண்டும் இந்த பாரம்பரியமான தொகுதியில் தனது தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. அத்துடன், இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சமான பாரூக், பழகுவதிலும் அன்பானவர் என்பதால், அவரை இந்தமுறை வாணியம்பாடி தொகுதி வாக்காளர்கள் வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை தொகுதி முழுவதும் இருந்து வருகிறது.
நாம், வாணியம்பாடி நகரப் பகுதியில் வாக்காளர்கள் சிலரை சந்தித்து அவர்களின் கருத்தை கேட்டபோது, பெரும்பாலான மக்கள் ஏணி சின்னத்திற்கு ஆதரவாகவே இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் ஏணி சின்னம் வாணியம்பாடி தொகுதியின் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது உறுதியாக தெரிய வந்தது. திமுக கூட்டணி நிர்வாகிகளும் ஏணி சின்னத்திற்கு ஆதரவாக கடுமையாக உழைப்பதையும் தொகுதியில் பரவலாக காண முடிந்தது.
வீடு வீடாக பிரச்சாரம் :
இ.யூ.முஸ்லிம் லீகின் மூத்த நிர்வாகியும் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவருமான, நரி முஹம்மது நயீம், தம்முடைய தேர்தல் அனுபவம் முழுவதையும் இந்த முறை வாணியம்பாடி தொகுதி முழுவதும் நன்கு பயன்படுத்தி, இ.யூ.முஸ்லிம் லீகின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருவதை நாம் காண முடிந்தது. வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஏணி சின்னத்திற்கு அவரது குழுவினர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இப்படி பல்வேறு நிலைகளில் பிரச்சாரம் நடந்துவரும் நிலையில் திராவிட மாடல் ஆட்சியின் ஐந்து ஆண்டு கால சாதனைகள், வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதை தொகுதியில் பார்க்க முடிந்தது. பெண்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே என்பதும் அவர்களின் கருத்துகள் மூலம் அறிய முடிந்தது.
முஸ்லிம் இளைஞர்களில் சிலர் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், தற்போது உண்மை நிலையை உணர்ந்து அவர்களும் திமுக கூட்டணியின் வெற்றி தான் தமிழகத்தை வளர்ச்சிக்கு கொண்டும் செல்லும் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். அதுகுறித்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்களது வாக்குகளை த.வெ.க.விற்கு அளித்து அதன்மூலம் பாசிச ஆட்சி தமிழகத்தில் வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை என்பது அவர்களின் பேச்சு மூலம் நம்மால் அறிய முடிந்தது.
சிறப்பான தேர்தல் ஒருங்கிணைப்பு பிரச்சாரம், வாக்காளர்கள் சந்திப்பு, பல்வேறு அமைப்புகளோடு கலந்துரையாடல், திட்டமிட்டு வாக்கு சேகரிப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என அனைத்தும் வாணியம்பாடி தொகுதியில் சிறப்பாகவே நடந்துள்ளது.
இதன்மூலம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கூற வேண்டும்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment