Friday, April 10, 2026

வாணியம்பாடி தொகுதி நிலவரம்: சிறப்பு நேர்காணல்....!

 தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:

 

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி நிலவரம்:

இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் வெற்றிபெறுவது உறுதி....!

மேலிட தேர்தல் பொறுப்பாளர்

தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் 

சிறப்பு நேர்காணல்....!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீகிற்கு பாரம்பரியமான வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் போட்டியிடுகிறார். தொகுதியில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், மேலிடப் பொறுப்பாளராக தேசிய செயலாளரும், மாநில முதன்மை துணைத் தலைவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய தேர்தல் பணிகளின் பரபரப்புக்கு மத்தியில், வாணியம்பாடி தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் பொறுப்பாளர் எம்.அப்துர் ரஹ்மான் அவர்களிடம் அறிய விரும்பினோம். அதன்படி மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், நடத்திய சிறப்பு நேர்காணலின்போது எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு, தனது தேர்தல் பணிச் சுமைக்கு மத்தியில் கூட,எந்தவித தயக்கமும் இல்லாமல் அப்துர் ரஹ்மான் விளக்கம் அளித்தார். அந்த சிறப்பு நேர்காணலின் முழு விவரம் வருமாறு:

கேள்வி : வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் மேலிடப் பொறுப்பாளராக உங்களை தேசியத் தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் நியமித்தது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில் : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு இந்த முறை பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் நிச்சயம் வெற்றிபெறும். வாணியம்பாடி தொகுதிக்கு மேலிட தேர்தல் பணி பொறுப்பாளராக தேசிய தலைவர் பேராசிரியர் அவர்கள் என்னை நியமித்து இருக்கிறார்கள். இதையடுத்து தொகுதிக்கு வந்து திமுக மேலிடப் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் எ.வ.வேலு அவர்களை சந்தித்து, எல்லா தகவல்களையும் பெற்று களப்பணி ஆற்றிவரும் நிலையில் வெற்றிவாய்ப்பு ஏணி சின்னத்திற்கு பிரகாசமாக உள்ளது. அத்துடன், திருப்பத்தூர் மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி.நிஸார் அகமது, வாணியம்பாடி தொகுதி முன்னாள் உறுப்பினர் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் ஆகியோருடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று பணியாற்றி வருகிறோம். நான் ஏற்கனவே வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக பணியாற்றி அனுபவம் உள்ளதால், வாணியம்பாடி தொகுதியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், நன்கு அறிமுகம் ஆனவர்கள். இந்த பகுதியின் பூகோள அமைப்பும் எனக்கு நன்றாக தெரியும் என்பதால் தான் மேலிடப் பொறுப்பாளராக பேராசிரியர் என்னை நியமித்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப எல்லா தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து கூட்டணியில் எல்லா கட்சிகளின் பொறுப்பாளர்களையும் நேரில் சந்தித்து, களப்பணி ஆற்றிவருகிறோம். மிகச் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேள்வி ; தற்போது வாணியம்பாடி தொகுதியில் தேர்தல் பணிகள் எப்படி நடந்து வருகின்றன, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் அனைத்தும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்களா?

பதில் :கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் மேலிப் பொறுப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் ஆலோசனையின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட திமுகவின் மாவட்ட செயலாளர் தேவராஜ் அவர்களும், வாணியம்பாடி நகரச் செயலாளர் சாரதி ஆகியோர் மிகுந்த பொறுப்புணர்வோடு திமுகவின் ஒன்றிய, நகர மற்றும் உள்ள கிளைப் பகுதிகளில் எல்லாம் திமுக நிர்வாகிகள் உற்சாகப்படுத்தி, கூட்டணியில் மற்ற கட்சி நிர்வாகிகளையும் மற்றும் வாணியம்பாடி உள்ள அத்தனை பொறுப்பாளர்களையும் அரவணைத்துக் கொண்டு, ஒரு குழுவாக பணியாற்றி வருகிறார்கள். எல்லோரிடம் ஆலோசனை செய்து தேர்தல் பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இ.யூ.முஸ்லிம் லீகின் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் கூட மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

கேள்வி  வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்  எஸ்.எஸ்.பி.சையத் பாரூகிற்கு  வாக்காளர் மத்தியில் வரவேற்பு எப்படி கிடைத்து வருகிறது?

பதில் : வாணியம்பாடி தொகுதியின் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிடும் இந்த தொகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களிமும் நன்றாக பழகக் கூடியவர். எல்லோருக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். ஏற்கனவே ஒருமுறை தேர்தலில் நின்று வெற்றிவாய்ப்பு இழந்த காரணத்தினால், அனைத்துத் தரப்பு மக்களும் அவரை விரும்புகிறார்கள். மூன்றில் ஒரு பகுதி வாக்காளர் அதிகம் இருக்கக் கூடிய, நகர்புறப்பகுதியில் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரக் கூடிய பகுதியில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கிற்கு நன்கு அறிமுகம் உள்ளது. இதேபோன்று கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் மத்தியில் கூட அறிமுகம் நன்றாக இருக்கிறது. எல்லா தரப்பு மக்களிமும் தொடர்பு வைத்து இருப்பதால், தொகுதியில், முஸ்லிம் லீக் வேட்பாளர் பாரூக்கை தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம். எனவே இந்த முறை வாக்காளர்கள் அனைவரும் அவரை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று வாக்குச்சேகரிக்க செல்லும் போது மக்களே முன்வந்து வாழ்த்து கூறி, வெற்றி உறுதி என கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள். 

கேள்வி : அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்களா? அப்படி மக்களைச் சந்திக்கும் போது அவர்களின் எண்ணவோட்டங்கள் மற்றும் விருப்பங்கள் என்னவாக உள்ளன?

பதில் : அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாடுகள், திட்டங்கள், பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஆகியவை மக்கள் மத்தியில் புகழ்பெற்று இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள எல்லா குடும்பங்களும் திராவிட மாடல் ஆட்சியில் பலன் அடைந்துள்ளன. மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், ஆகிய திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்பங்கள் பலன் அடைந்த வருகின்றன. சராசரியாக ஐந்து ஆயிரம் ரூபாய் வரை ஒரு குடும்பத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் உதவி கிடைத்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கு துணை நிற்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே இருப்பதால், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.

கேள்வி ; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் தனிச் சின்னத்தில் அதாவது, ஏணி சின்னத்தில் போட்டியிடுவதால் எந்தவித பாதிப்பும் இல்லை தானே?

பதில் ; இ.யூ.முஸ்லிம் லீகின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் நம்முடைய வேட்பாளர் பாரூக் போட்டியிடுகிறார். ஏணி சின்னம் வாணியம்பாடி தொகுதி மக்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே மூன்று தேர்தல்களில் ஏணி சின்னத்தில் நாம் போட்டியிருக்கிறோம். கடந்த தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் வெற்றிவாய்ப்பை இழந்தோம். ஏணி சின்னம் வாணியம்பாடி தொகுதி மக்களுக்கு பரிச்சமானது. இந்த தொகுதியில் ஏணி சின்னம் என்பது ஒரு பிரச்சினையே கிடையாது. தொகுதி முழுவதும் எல்லோரும் நன்கு அறிந்து இருக்கும் சின்னம் என்பதால், இந்த முறை ஏணி சின்னம் வெற்றி பெறுவது திண்ணம்.

கேள்வி ;  நீங்கள் வேலூர் மக்களவைத் தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்று வரலாறுப் படைத்தீர்கள், அந்த அனுபவம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகிற்கு  பயன்படுத்த உதவும் என்று றுதியாக எண்ணுகிறீர்களா?

பதில் ; நான் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிபோது, 6 சட்டமன்ற தொகுதிகளில் வாணியம்பாடி தொகுதியும் ஒன்றாகும். அப்போது அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு காரணமாக ஒவ்வொரு தேர்தலின்போது இங்கு வந்து நான் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறேன். இதனால் தொடர்பு புதுபிக்கப்பட்டு வருகிறது. மிக முக்கியமான முஸ்லிம் சமுதாய மக்களிடையே தங்களுடைய சொந்த ஊர் பிள்ளை என்ற உணர்வுடன் என்னுடைய தொடர்பில் இருந்து வருகிறார்கள். தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற காலங்களில் நல்ல தொடர்புடன் இருக்கிறார்கள். இதனால் வாணியம்பாடியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தல் பணிக்காக வந்து இருக்கிறோம். வாணியம்பாடி கல்வி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், ஜமாஅத்துல் உலமா மற்றும் பிற ஜமாத் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் நன்கு அறிமும் ஆனவர்கள் என்பதால், தேர்தல் பணிகள் மிகவும் எளிதாக உள்ளன. அத்துடன் கிராமப்பகுதிகளில் சகோதரச் சமுதாய மக்கள் கூட மிகுந்த நேசப்பாசத்துடன் ஆதரவு அளித்து வருகிறார்கள். எனவே பிரச்சாரம் செய்வதில் எந்த சிரமும் ஏற்படவில்லை.

கேள்வி : வாணியம்பாடி தொகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் மனவோட்டம் என்னவாக உள்ளது? ஏற்கனவே, இந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது மீண்டும் முஸ்லிம் வேட்பாளர் களத்தில் உள்ளதால் வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?

பதில் : கடந்த மூன்று முறை இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறது. எந்த காரணத்தினால் நாம் வெற்றிவாய்ப்பை இழந்தோம் என்பதை தெரிந்துகொண்டு, அவை இந்த தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறோம். எனவே தான் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரே இலக்குடன் பயணம் செய்து வருகிறோம். ஆர்வத்துடன், உற்சாகத்துடன் செயல்பட்டு வருவதால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறோம். திமுக மற்றும் தோழமை கட்சிகளின்  நிர்வாகிகள், அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது முந்தைய தேர்தல்களைவிட இந்த தேர்தலில் மிகச் சிறப்பாக உள்ளது. வாணியம்பாடி தொகுதி மக்கள் மத்தியில் வேட்பாளர் சையத் பாரூக் மீது தனி கவனம் இருந்து வருகிறது. இவர் இந்தமுறை எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. வாணியம்பாடி தொகுதியில் தங்கி பணியாற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொதுச் செயலாளர் கோம்பை நிஜாமுத்தீன் என்னுடைய இந்த களப்பணி ஆற்றிவருகிறார்கள். இதனால் இ.யூ.முஸ்லிம் லீகின் களப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால் பாரூக்கின் வெற்றி உறுதியாகும்.

கேள்வி : மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு உள்ளிட்ட பல மாநாடுளை  நீங்கள் வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்தீர்கள். அந்த அனுபவம் தேர்தலில் பலனளிக்கிறதா?

பதில் :மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அத்துடன் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளையும் அழைத்துவந்து சிறப்பித்தார்கள். அந்த வகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஜமாத்தார்கள் மத்தியிலும் இருந்தது. வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை நிறுத்தும்போது அந்த வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்துடன், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அந்த தெளிவு மக்களிடையே இருப்பதை காண முடிகிறது. இந்த பார்வை ஏணி சின்னத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

கேள்வி : தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட எந்த மாதிரியான திட்டங்களை வைத்துள்ளீர்கள்?

பதில் : வாணியம்பாடி தொகுதியில் 312 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்காக வாணியம்பாடி நகரத்தில் 101 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் தனித்தனி குழுக்கள் அமைத்து, உள்னோம். வாணியம்பாடி நகரத்திற்கு தனிக்குழுவும், கிராமப்பகுதிகளில் தனிக்குழுக்களும் அமைத்துள்ளோம். இந்த குழுக்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக பரப்புரையை மிகத் தீவிரமாக செய்து வருகிறோம். அத்துடன் ஆட்டோ விளம்பரம் உள்ளிட்ட பிற பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளோம். இதனால் மக்களிடையே ஏணி சின்னம் மிகவும் பிரபலமான சின்னமாக மாறிவிட்டது. இதனால் வாணியம்பாடியில் ஏணி சின்னம் நிச்சயமாக வெற்றிபெறும்.


கேள்வி : உங்களது கடுமையான உழைப்பின் மூலம் வாணியம்பாடி தொகுதியிலிருந்து முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்   வெற்றி பெற்று நிச்சயம் சட்டமன்றத்திற்கு செல்வார் என்று உறுதியாக நம்புகிறீர்களா?

பதில் : வாணியம்பாடி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகிற்கு ஆதரவு பெருகிறது. கள நிலவரங்கள் அனைத்து அவருக்கு சாதமாகவே உள்ளன. அவர் தொகுதியின் மண்ணின் மைந்தர் என்ற காரணத்தினால், சையத் பாரூகின் வெற்றி நிச்சயம். ஏணி சின்னமும், வேட்பாளரும் வாணியம்பாடி தொகுதி மக்களின் அன்பையும் வரவேற்பையும் பெற்று இருக்கிறார்கள். தொகுதி மக்களின் மனங்களில் ஏணி சின்னம் ஆழ பதிந்துள்ளதால், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி பிரதிநிதியாக எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்கு செல்வார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன் வாணியம்பாடி தொகுதியில் பாரூக் வெற்றிபெற வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அத்துடன் ‘நமது தேசிய தலைவர் பேராசிரியர் அவர்கள் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து நல்ல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். அதனால் தேர்தல் பணிகள் இன்னும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு செல்வார் என்பது உறுதி. அல்லாஹ் அதற்கு மேன்மேலும் துணைபுரிய துஆ செய்வோம். அத்துடன் திராவிட மாடல் ஆட்சி தொடர நாம் துணை நிற்போம்.

இவ்வாறு எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். அவரது தேர்தல் பணிகள் சிறப்பான நடைபெற்று வாணியம்பாடியில் ஏணி சின்னம் வெற்றிபெற வாழ்த்தி, துஆ செய்துவிட்டு நாம் விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===========================================

No comments: