Monday, April 27, 2026

மக்காவில் தயார் நிலை....!

ஹஜ் பெருவிழாவிற்காக மக்காவில் தயார் நிலையில் இருக்கும் வசதிகள்

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். உடல்நலம் மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஆண்டு ஹஜ் பெருவிழா மே 24 முதல் 29 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஏற்கனவே சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேசம் என உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இஸ்லாமியர்கள் வந்தவண்ணம் உள்ளனர். போர் பதற்றத்திற்கு மத்தியில் கூட, ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்களது ஐந்தாவது கடமையை நிறைவேற்ற திங்கட்கிழமையன்று (27.04.2026) மதீனா வந்து சேர்ந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற மதீனா நகரம், அங்கு வாழும் மதீனாவாசிகளின் பாரம்பரிய விருந்தோம்பல் குணத்தை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில், மதீனாவாசிகள், தங்களுடைய விருந்தோம்பல் குணத்தை மேலும் தீவிரமாக வெளிப்படுத்தி, ஹஜ் பயணிகளின் இதயங்களை கவர்ந்து வருகிறார்கள். 

தயார் நிலையில் இருக்கும் வசதிகள் :

இதுஒருபுறம் இருக்க, இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரீகர்கள் தங்குவதற்காக பிரமாண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  புதிய உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் பயணிகள் தங்க 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர ஹஜ் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் அகமது அல்-கதீப், திங்களன்று (27.04.2026) மக்காவில் ஹஜ் பயணிகள் தங்கும் வசதிகளை  நேரில் ஆய்வு செய்தார்.

ஹஜ் யாத்திரீகர்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளை ஆய்வு செய்ததுடன், சுற்றுலாத் துறை ஊழியர்களையும் அமைச்சர் அகமது அல்-கதீப் சந்தித்துப் பேசினார். இவர்களில் சிலர் அமைச்சகத்தின் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று சிறப்பான பயிற்சி பெற்றவர்கள். இந்த பயிற்சி மூலம், ஹஜ் பயணிகளுக்கு இவர்கள் நல்ல சேவையை ஆற்ற முடியும் என அமைச்சர் அகமது அல்-கதீப் நம்பிக்கை தெரிவித்தார். 

===================
"காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது"
===================

இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட புதிய தற்காலிகத் தங்கும் இடங்களுக்கான உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் யாத்திரீகர்களுக்கான தங்கும் வசதித் துறையில் கூடுதலாக 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றவரும் ஹஜ் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாது என்று சவூதி அரேபிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

சிறப்பான பாதுகாப்பான ஏற்பாடுகள் :

சவூதி அரேபியா அரசின் பொதுப் புள்ளியியல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 16 லட்சத்து 73 ஆயிரத்து 230 யாத்திரீகர்கள் புனித ஹஜ் கடமையை மேற்கொண்டனர். இவர்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 654 பேர் சவூதி குடிமக்களாகவோ அல்லது அங்கு வசிப்பவர்களாகவோ இருந்தனர். எஞ்சியோர் சவூதி அரேபியாவிற்கு வெளியிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ளதால், சவூதி அரேபியாவில் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட, ஹஜ் கடமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களின் உள்ளத்தில், ஹஜ்ஜின் விதை விதைக்கப்பட்டு, வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் வளர்க்கப்பட்டு வருகிறது. 

இத்தகைய அருமையான சூழ்நிலையில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக நாட்டின் பல இடங்களில் வழியனுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சகோதரத்துவம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு, இஸ்லாமியர்களை வழியனுப்பி வைத்தது, அனைவரின் இதயங்களை கவர்ந்தது. 

பரிவு மற்றும் சமூக நல்லிணக்கம் :

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, அவர்களின் இந்து அண்டை வீட்டாரால் நடத்தப்பட்ட வழியனுப்பு விழா, சமூக நல்லிணக்கத்தின் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். ஏப்ரல் 21, 2026 அன்று, இரண்டாவது குழுவினர் புறப்படும்போது, இந்த அன்பான வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை, மதங்களுக்கு அப்பாற்பட்ட, அண்டை வீட்டாரின் இயற்கையான கடமை மற்றும் நீண்ட கால நட்பின் அடையாளமாக அப்பகுதி மக்கள் விவரித்தனர். மேலும், இந்தச் சம்பவம், சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: