" வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம் "
- மக்களை மனரீதியாக பாதிக்க வைக்கும் சமூக வலைத்தளங்கள் -
ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ள ஊடகத்துறை, கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது. சுதந்திரமாக செயல்பட்டு வந்த ஊடகத்துறை, தற்போது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி. தனது உண்மையான சுதந்திரமான செயல்பட்டை விட்டுவிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஊதுகுரலாக மாறிவிட்டது. எனவே வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம் என்பது இன்றைய காலகட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சமாக மாறியுள்ளது.
கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு,ஊடகங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு, தங்களது ஜனநாயகக் கடமையை திறம்பட செயலாற்றின. ஆனால், அண்மைக் காலமாக ஊடகங்களின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணம், தற்போது பிரபலமான ஊடகங்கள் செய்திகளைத் தருவதை விடுத்து, ஆளும் தரப்பு அல்லது அரசியல் தலைவர்களின் கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இதனால் சமூகப் பொறுப்புணர்வு குறைந்து, உண்மையான செய்திகள் மறைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் ஊடகங்களின் தரமான செயல்பாட்டிற்குப் பெரிய தடையாக உள்ளன.
மேலும் நவீன டிஜிட்டல் யுகத்தில், நுகர்வோருக்குத் தேவைப்படும் தகவல்களுக்குப் பதிலாக, ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட, பொழுதுபோக்கு மற்றும் மேம்போக்கான செய்திகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. ஆழமான களப்பணியுடன் கூடிய புலனாய்வு இதழியல் குறைந்து, பரபரப்புக்காக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது, சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளைத் தவிர்த்து, வெறும் போட்டிச் செய்திகளாக ஊடகங்களை மாற்றியுள்ளது. சமூகத்தின் தற்போதைய சூழல், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றைப் பற்றி அறியாமல், அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காகச் செயல்படும் ஊடகங்களின் போக்கு, இளம் தலைமுறையினரைத் தவறான வழியில் கொண்டு செல்கிறது.
உண்மை நிலையில் இருந்து விலகல் :
தற்போது, சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஊடகங்களின் மீதான பார்வை அல்லது கவனம் மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. செய்தி வாசிப்புகள், உலக நடப்புகளை ஆய்வு செய்தல் என ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த மக்கள், தற்போது தங்களது செல்பேசி மூலம் அனைத்துத் தகவல்களையும் பெற்று விடுகிறார்கள். இப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் உண்மை என்றும் மக்கள் நம்பி விடுகிறார்கள்.
இதன் காரணமாக, பிரபலமாக ஊடகங்கள் கூட, தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து விலகி, மக்களுக்கு விருப்பமான செய்திகளை, தகவல்களை தர வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் விரும்பும் செய்திகளை கொடுப்பதன் மூலம் தங்களது ஊடக வணிகத்தை மேம்படுத்த முடியும் என்றும் ஊடக முதலாளிகள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, ஊடகங்களில் பணிபுரியும் ஆசிரியர் குழு, சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
===================
"ஊடகங்கள் தங்களின் வர்த்தக நோக்கங்களை விடுத்து, உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலமே ஊடகத்துறையின் தரத்தை மேம்படுத்த முடியும். இனி வரும் நாட்களில், ஊடகத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சிறப்புடன் செயல்பட்டாமல் மட்டுமே, ஊடகங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்"
===================
இதனால், வாசகர்களுக்கு உண்மை தகவல்கள் மறைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. இதனால் ஊடகத் தர்மம் காணாமல் போய்விடுகிறது. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஊடகங்களின் நிலையில் தடுமாற்றம் :
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை நாம் கடந்த 12 ஆண்டுகளாக கண்டு வருகிறோம். ஆளும் கட்சிக்கு எதிரான தகவல்கள், குற்றச்சாட்டுகள் மறைக்கப்படுகின்றன. நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மூடி மறைக்கப்படுகின்றன. சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்த உண்மை நிலவரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. புலனாய்வு பத்திரிகைகள் கூட தற்போது, பல உண்மை செய்திகளை மறைத்துவிடுகின்றன. ஆளும் தரப்பு செய்யும் பல ஜனநாயக விரோதச் செயல்களை கூட, இன்றைய ஊடகங்கள் வெளியிடாமல் மூடி மறைத்துவிடுகின்றன.
இதனால் இந்திய ஊடகங்களின் நிலையில் தடுமாற்றம் இருப்பதை நாம் காணலாம். தேர்தல் காலங்களில், உண்மை தகவல்களை ஊடகங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம், ஒன்றிய பாஜக அரசின் மீது இருக்கும் பயம் தான் முக்கிய காரணம் என சொல்லலாம். எதிர்க்கட்சிகளின் குரல்களை, அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை, அவர்களின் எண்ணங்களை பிரபலமான ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் கூட, அப்படி ஒரு நிலை இல்லை என்ற வகையில் பிரபலமான ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் என கூறலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும் பாஜக தரப்புக்கு எதிராக மக்களின் கோப அலை இருந்துவந்தாலும், அப்படி ஒரு நிலை இல்லை என்ற வகையிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதேபோன்று, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை சில ஊடகடங்கள் பாராட்டவில்லை. மாறாக, குறைகளை மட்டுமே கண்டன.
கொள்கை எதுவும் இல்லாத, சினிமா கவர்ச்சியை மட்டுமே கொண்ட ஒரு நடிகரின் கட்சிக்கு சில ஊடகங்கள் ஆதரவு கரம் நீட்டியது மட்டுமல்லாமல், கருத்துக்கணிப்பு என்ற பெயரில், அந்த நடிகர் கட்சிக்கே வாய்ப்புகள் அதிகம் என்று பொய்யான கணிப்புகளையும் கூட வெளியிட்டன. இதேபோன்று, சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மீது தங்கள் பொய்யான தகவல்களை சில ஊடகங்கள் திணித்தன. இதன்மூலம் மக்கள் மன ரீதியாக பாதிக்கும் வகையில் சமூக வலைத்தங்கள் செயல்பட்டன.
அதேநேரத்தில், ஒருசில ஊடகவியலாளர்கள், தங்கள் ஊடகப் பணியின் முக்கியத்துவதை நன்கு உணர்ந்துகொண்டு, பொறுப்புடன் செயல்பட்டதை நாம் இந்த தேர்தலில் காண முடிந்தது. திராவிட மாடல் ஆட்சியின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர்கள், திமுக ஆட்சியின் சில குறைகளை விமர்சனம் செய்வதையும் நிறுத்தவில்லை. இதுதான் உண்மையான ஊடகத் தர்மம் ஆகும். ஊடகங்கள் தங்களின் வர்த்தக நோக்கங்களை விடுத்து, உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலமே ஊடகத்துறையின் தரத்தை மேம்படுத்த முடியும். இனி வரும் நாட்களில், ஊடகத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சிறப்புடன் செயல்பட்டாமல் மட்டுமே, ஊடகங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment