தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் :
234 தொகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் இ.யூ.முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரச்சாரம்....!
- ஓர் சிறப்பு நேர்காணல் -
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விரல் நுனியில் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் தற்போது தகவல் தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வுகள் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் பாரம்பரியமான, மிகவும் பழமையான இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நவீன காலத்திற்கு ஏற்ப, விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் பணிகளை செய்துவருகிறது. குறிப்பாக, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணி மிகச் சிறந்த முறையில் தனது பணிகளை செய்து வருகிறது.
இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது, மாநில பொதுச் செயலாளர் கோம்பை ஜெ.நிஜாமுதீன், மாநில பொருளாளர் எஸ்.ரஹ்மான் உசேன் மற்றும் அணியில் உள்ள அனைவரும் ஒரு குழுவாக செயல்பட்டு, பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் ஏ.எம்.ஷாஜஹான், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 13 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இ.யூ.முஸ்லிம் லீகின் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரச்சாரம் எப்படி இருக்கிறது? வாக்காளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, திமுக அணிக்கு ஆதரவாக தேர்தல் களம் மாறி இருக்கிறதா? என்பது குறித்து அறிய விரும்பினோம். அதன்படி, இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மதை சந்தித்து, சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினோம். அப்போது எம்.எஸ்.சல்மான் முஹம்மது தங்களது அணியின் தேர்தல் பணிகள் குறித்து பல சுவையான தகவல்களை மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸிடம் எடுத்துக்கூறி பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் முழு விவரம் வருமாறு:
திமுக குழுவுடன் இணைந்து செயல்படுகிறோம் :
இ.யூ.முஸ்லிம் லீகின் தகவல் தொழில்நுட்ப அணி, திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியுடன் இணைந்து தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது. குறிப்பாக, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணசேகரனுடன் இணைந்து நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதேபோன்று, பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அருண்குமாருடன் இணைந்து, மிகச் சிறந்த முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் பொறுப்பாளராக கோம்பை ஜெ.நிஜாமுதீனும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் பொறுப்பாளராக ரஹ்மான் உசேனும் இருந்துகொண்டு, தகவல் தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று இந்த பணியை நாம் செய்து வருகிறோம். இதன் காரணமாக, இரண்டு தொகுதிகளிலும் நமது அணியின் பணிகள், பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் மிகமிக எளிதாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டு வருகின்றன.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் :
நமது பணிகளில் மிகவும் முக்கியமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை நாம் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறோம். அதுதொடர்பான காணொளிகள், ஒலிக்காட்சிகள், ஆகியவற்றை இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணி, உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இதேபோன்று, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் நாம் தகவல் தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி வருகிறோம்.
குறிப்பாக, மூன்று வகையில் எங்களுடைய பணிகள் இருந்து வருகின்றன. அந்த மூன்று வகையில் முதலாவதாக, வாக்காளர்களை நேரில் சந்தித்து, திமுக அரசின் சாதனைகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். இரண்டாவதாக, காணொளிகள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆடியோ மூலம் எங்களது பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் ஆட்சியின் பல நல்ல திட்டங்கள் குறித்து நாம் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, அதன்மூலம் நாட்டிலேயே தமிழ்நாடு எப்படி முதன்மை மாநிலமாக மாறிவிட்டது என்பது குறித்து விளக்கம் அளித்து வருகிறோம்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்த 30க்கும் மேற்பட்ட காணொளிகளை நாம் உருவாக்கி வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்திருக்கிறோம். கல்வித்துறையில் திமுக அரசின் சாதனைகள், மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு நிறைவேற்றிய அருமையான திட்டங்கள் ஆகியவை குறித்தும் எங்களுடைய அணி பிரச்சாரம் செய்கிறது.
கிராமப்புற மாணவர்களுக்கு திமுக அரசு செய்துள்ள பணிகள், உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், உலமா ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட இஸ்லாமிய சிறுபான்மையின மக்களுக்கு திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், திட்டங்கள் குறித்தும் நாம் மிகச் சிறந்தமுறையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, அவர்களுக்கு விளக்கம் அளித்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.
வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு :
இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தேர்தல் பிரச்சாரம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எங்கள் அணி சார்பில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தொடர்பான காணொளிகள் நல்ல வரவேற்றை பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மூன்று முறை நாங்கள் காணொளிகளை வெளியிட்டு வருகிறோம். நண்பகல் 12 மணி, மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணி என்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் ஆகியவை குறித்து நாங்கள் காணொளிகளை வெளியிட்டு வருகிறோம்.
இதேபோன்று, பாபநாசம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள் குறித்த சிறப்பு காணொளிகளையும் எங்கள் அணி சார்பில் வெளியிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக, இரண்டு தொகுதிகளின் மேலிடப் பொறுப்பாளர்கள் இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், முன்னாள் நாடாறமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஆலோசனைகளை அடிக்கடி பெற்று இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதன்மூலம் கூட, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் நடக்கும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான தகவல்கள், காணொளிகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். அதற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய பணி மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. பிரச்சாரம் செய்ய இன்னும் குறைந்த நாட்களே வாய்ப்பு உள்ளதால், அதற்கு தகுந்த வகையில் திட்டங்களை வகுத்து, நாங்கள் இ.யூ.முஸ்லிம் லீகின் தகவல் தொழில்நுட்ப அணியை பயன்படுத்தி, சிறந்த முறையில் பிரச்சாரம் செய்வோம்.
நிச்சயம் வெற்றிவாய்ப்பு உறுதி :
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி சிறந்த முறையில் பணியாற்றி வருவதால், திமுக கூட்டணி சார்பில் இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிடும் 13 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உறுதியாக தெரிகிறது. 13 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் உள்ள தொகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பொறுப்பாளர்களாக உள்ள அனைவரிடமும் நாங்கள் தினமும் ஆலோசனை செய்து பணிகளை செய்துவருவதால், எங்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்க செய்துவரும் சதி குறித்தும் நாங்கள் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதனால், சிறுபான்மையின மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி. அதை மே 4 ஆம் தேதி தமிழக மக்கள் நிச்சயமாக அறிந்துகொள்வார்கள்.
இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது தெரிவித்தார். அவரது எண்ணங்கள் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வாழ்த்தி, துஆ செய்துவிட்டு விடைப்பெற்றோம்.
- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment