Sunday, April 12, 2026

திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் - சில சுவையான தகவல்கள்..!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

" 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் "

திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் - சில சுவையான தகவல்கள்..! 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரச்சாரம் வரும் 21ஆம் தேதி மாலைவுடன்  நிறைவுபெறுவதால், வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் கூட, மக்கள் மத்தியில் தங்களுடைய கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இறுதிக்கட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தலைவர்கள் கலந்துகொண்டு, மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் எப்படி உள்ளது? தேர்தல் காலங்களில் அவர்கள் எத்தகைய முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள்? பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும்போது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களா? மக்களை கவரும் வகையில் தங்களுடைய பேச்சில் அழகிய வார்த்தைகளை, சொற்களை உபயோகப்படுத்துகிறார்களா என்பன போன்ற பல வினாக்களை எழுப்பினால், இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உண்மையிலேயே திமுக கூட்டணி கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் மிகமிக கண்ணியமான முறையில் இருந்து வருகிறது என்று கூற வேண்டும். எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்யும்போது கூட, வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். வரம்பு மீறி வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவது இல்லை.  ஒருசில நேரங்களில் சிலர், உணர்ச்சிவசப்பட்டு, வார்த்தைகளை உபயோகித்துவிட்டாலும், அது தவறு என்பதை உணர்ந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறார்கள். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் :

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் யார் என்றால், அது நிச்சயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றே கூற வேண்டும். அவருடைய தேர்தல் பிரச்சார பாணியே ஒரு தனிவிதமாக, தனி பாணியாக இருந்து வருகிறது. நாள்தோறும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அவர், மக்களையும் நேரில் சந்தித்து திராவிட மாடல் ஆட்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைத்து இருக்கிறதா என்று அறிந்துகொள்ள விளக்கம் கேட்கிறார்கள். பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து கலந்துரையாடும் முதலமைச்சர், அடுத்துவரும் திமுகவின்  2.0 ஆட்சியில் செய்யப்பட வேண்டிய பணிகள், திட்டங்கள் குறித்தும் மக்களின் ஆலோசனைகளையும் பெறுகிறார். 

திமுக கூட்டணி பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், "திராவிட மாடல்" ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.  அதிமுக-பாஜக கூட்டணி "துரோக கூட்டணி" என்றும், இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை விமர்சனம் செய்யும்போது வார்த்தைகளை அளந்து பேசுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், அந்த நடைப்பயிற்சியின்போது கூட, திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க மறப்பதில்லை. சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கும் வாய்ப்பாக இந்த நடைப்பயிற்சி பிரச்சாரத்தை அவர் அமைத்துக் கொண்டு, திராவிட மாடல் ஆட்சி எப்படி மக்கள் மத்தியில் பணிகளை ஆற்றிவருகிறது என்பதை மிக எளிமையாக தனது அழகிய செயல்மூலம் விளக்கம் அளித்து வருகிறார். 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட அவர், மக்களோடு மக்களாக பயணம் செய்து, திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, தமிழகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்களை அழகிய முறையில் எடுத்துக்கூறுவது, வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூற வேண்டும். மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் தமிழக வாக்காளர்கள் மத்தியில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வையும் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்றே கூற வேண்டும். 

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும் மு.க.ஸ்டாலின்,  "திராவிட மாடல்" ஆட்சி தொடர, அதிமுகவின் "இருண்ட காலம்" திரும்பாமல் இருக்க வாக்களிக்குமாறு வலியுறுத்துகிறார்.

அத்துடன், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய, பிற மாநிலங்களும் பின்பற்றும் சிறந்த திட்டங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், டெல்லிக்கு அடிபணியாத அரசை மீண்டும் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். 

தனி பாணியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் :

இப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட, இளைஞர்கள், பெண்கள் என அனைத்து மக்களையும் தனது தனி பாணி பிரச்சாரம் மூலம் கவர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிடும் அவர், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் திமுக அரசு செய்த மக்கள் நலப்பணிகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துரைக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் என்றே கூற வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும்போது கூட, மிகமிக கண்ணியமான முறையில் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். முகம் சுளிக்கும் வகையில் ஒருபோதும் வார்த்தைகள் அவர் வெளிப்படுத்துவதில்லை.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில்,  உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையேதான் மிகப்பெரிய அளவுக்கு  வார்த்தை மோதல்கள், கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தாலும், இளைஞர் உதயநிதி ஸ்டாலின் கோபம் அடையாமல், வார்த்தைகளை அளந்தே பேசுகிறார். இதனால் வாக்காளர்களின் மனங்களை அவர் கவர்ந்து வருகிறார். 

கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மட்டுமல்லாமல், திமுக அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் அனைவரும் திமுக அரசின் திட்டங்களையும், தங்களது வாக்குறுதிகளையும் திமுகவின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிக்கின்றன. 

இதேபோன்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட 23க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கூட, திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்கள் மத்தியில் விளக்கம் அளித்து வாக்கு சேகரிக்கிறார்கள். அத்துடன், தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பாதுகாப்பு, தமிழக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அதை திரும்பபெற வேண்டும், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் நலன் உள்ளிட்ட அனைத்திலும், தமிழர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து திமுக கூட்டணி தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தின்போது எடுத்துக் கூறி, மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

பாசிச ஆட்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுக கூட்டணி தலைவர்கள் அனைவரும்,  அதிமுக என்ற முகமுடியைப் பயன்படுத்தி, பாஜக, தமிழகத்தில் ஆட்சி செய்ய துடிக்கிறது என்பதை மிகமிக தெளிவாக வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மத மோதல்கள் இல்லாமல் இருக்கும், தமிழ்நாட்டில், வட மாநிலங்களில் உள்ள நிலைமையை போன்று உருவாக்க பாஜக சதித்திட்டம் தீட்டிவருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். அதிமுகவிற்கு போடும் வாக்கு பாஜகவிற்கு போடும் வாக்கு என்றும் அவர்கள் உறுதிப்பட தெளிவாக எச்சரிக்கை செய்கிறார்கள். எனவே , தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் திமுக கூட்டணி தலைவர்கள், திமுகவின் 2021 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதையும் எடுத்துக்கூறி, வீதி வீதியாகவாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியின் வெற்றி உறுதி :

இப்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 23க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள், கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்துவருவதை இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் கண்டு வருகிறது.  இத்ததைய பிரச்சாரம் தமிழ்நாடு வாக்காளர்கள் மிகவும் கவர்ந்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் குறித்து நாள்தோறும் விவாதிக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் பிரச்சராத்தில் ஒருசில குறைப்பாடுகள் இருந்தாலும், மிகப்பெரிய அளவுக்கு குறைகளை திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரத்தில் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்து வருகிறது. தேர்தல் காலங்களில் வெளியாகும் அறிக்கைகளில் கூட, அழகிய முறையில், கண்ணியமான முறையில் வார்த்தைகளை திமுக கூட்டணி தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறி மகிழ்ச்சி அடைக்கிறார்கள். 

இதன்மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பது உறுதியாகிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெறும்  என்று தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்போதைய தேர்தல் களம் அந்த திசையை நோக்கியே சென்றுக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நிச்சயம் வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று உறுதியாக நம்பலாம். வரும் மே 4ஆம் தேதி தமிழக மக்கள் விரும்பும் திராவிட மாடல் 2.0 ஆட்சி மலருவதற்கான முடிவுகள் நிச்சயம் வரும். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக மட்டுமல்லாமல், வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாநிலமாக மீண்டும் வீர நடைப்பயணம் மேற்கொள்ளும் என்று மிகமிக உறதியாக கூறலாம். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: